அத்தியாயங்களின் விளக்கம் – 71 முதல் 80 வரை

71) சூரத்து நூஹ்

அத்தியாயம் 71

வசனங்கள் 28

இணைவைப்புக்கு எதிராக பிரச்சாரம் செய்வதில் தமது வாழ்நாளையே தியாகம் செய்த நபி நூஹ் (அலை) அவர்களை பற்றி பேசும் அத்தியாயம்.

“நிச்சயமாக நாம் நூஹை, அவருடைய சமூகத்தாரிடம்; ‘நீர் உம் சமூகத்தாருக்கு நோவினை செய்யும் வேதனை அவர்கள் மீது வருவதற்கு முன்னர் (அதுபற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக’ என (ரஸூலாக) அனுப்பினோம்.

‘என் சமூகத்தார்களே! நிச்சயமாக நான் உங்களுக்கு பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்’ என்று கூறினார்.

‘அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; அவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; எனக்கும் வழிபடுங்கள்” (71:1-3)

72) சூரத்துல் ஜின்

அத்தியாயம் 72

வசனங்கள் 28

ஜின்கள் அல்லாஹ்வின் தூதரிடம் அல்-குர்ஆனை செவிமடுத்து அதனை தமது சமுதாயத்திற்கும் எடுத்துச் சொன்னதை குறிப்பிடும் அத்தியாயம்…

“நிச்சயமாக ஜின்களில் சில (திருக் குர்ஆனை) செவிமடுத்து(த் தம் இனத்தாரிடம் கூறினர்) ‘நிச்சயமாக நாங்கள், மிகவும் ஆச்சரியமான ஒரு குர்ஆனை கேட்டோம்’ என்று கூறினர், என எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டதென்று (நபியே!) நீர் கூறுவீராக.

‘அது நேர்மையின் பால் வழிகாட்டுகிறது. ஆகவே அதைக் கொண்டு நாங்கள் ஈமான் கொண்டோம்; அன்றியும் எங்கள் இறைவனுக்கு ஒருவனையும் நாங்கள் இணையாக்கமாட்டோம்’ (என்று அந்த ஜின் கூறலாயிற்று).

‘மேலும் எங்கள் இறைவனுடைய மகிமை நிச்சயமாக மிக்க மேலானது. அவன் (எவரையும் தன்) மனைவியாகவோ மகனாகவோ எடுத்துக் கொள்ளவில்லை.

‘ஆனால் நம்மில் மூடராகிவிட்ட (சிலர்) அல்லாஹ்வின் மீது தகாத வார்த்தைகளை சொல்லிக் கொண்டிருக்கின்றனர்” (72:1-4)

73) சூரத்துல் முஸ்ஸம்மில் – போர்த்திக் கெண்டிருப்பவர்

அத்தியாயம் 73

வசனங்கள் 20

அல்-குர்ஆனின் முதல் 5 வசனங்கள் அருளப்பட்ட பின் நடுநடுங்கி காய்ச்சலினால் போர்த்திக் கொண்டிருந்த நபி (ஸல்) அவர்களை பார்த்து விளிக்கும் இந்த அத்தியாயத்தின் ஆரம்பம் ஏகத்துவத்தை எடுத்துச் சொல்லும் மிகப் பாரிய பொருப்பு சுமத்தப்பட்ட, நபியவர்கள் ஆன்மீக ரீதியில் தம்மை தயார் செய்து கொள்ளும் முகமாக இரவு வணக்கம், அல்-குர்ஆன் ஓதுதல் என்பவற்றில் ஈடுபடுமாறு அல்லாஹ் கட்டளை இடுகின்றான்.

“போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே!

இரவில் – சிறிது நேரம் தவிர்த்து (தொழுகைக்காக எழுந்து) நிற்பீராக!

அதில் பாதி (நேரம்) அல்லது அதில் சிறிது குறைத்துக் கொள்வீராக!

அல்லது அதைவிடச் சற்று அதிகப்படுத்திக் கொள்வீராக! மேலும் குர்ஆனைத் தெளிவாகவும், நிறுத்தி நிறுத்தியும் ஓதுவீராக” (73:1-4)

74) சூரத்துல் முத்தஸிர் – போர்த்திக் கொண்டிருப்பவர்

அத்தியாயம் 74

வசனங்கள் 56

நபியாக தெரிவு செய்யப்பட்ட பின் செய்ய வேண்டிய பணிகளை தெளிவுபடுத்தி அல்லாஹ் இந்த அத்தியாயத்தை இறக்கி வைத்தான். நபித்துவத்தின் பிரதான பணியாகிய எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவன் மாத்திரமே இந்த உலகில் வணங்கப்பட வேண்டும் என்ற ஏகத்துவ பிரச்சாரம் மிக வீரியமாக மனித சமுதாயத்தில் எத்திவைக்கப்பட்டு, ஏகத்துவத்திற்கெதிரான இணைவைத்தல் உலகின் நாலா பாகங்களில் இருந்தும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதாகும். ஷிர்க் எனும் இணைவைப்பை அல்லாஹ் இந்த அத்தியாயத்தில் அசுத்தம் என்று குறிப்பிடுகின்றான்.

“(போர்வை) போர்த்திக் கொண்டு இருப்பவரே!

நீர் எழுந்து (மக்களுக்கு அச்சமூட்டி) எச்சரிக்கை செய்வீராக.

மேலும், உம் இறைவனைப் பெருமைப் படுத்துவீராக.

உம் ஆடைகளைத் தூய்மையாக ஆக்கி வைத்துக் கொள்வீராக.

அன்றியும் அசுத்தத்தை வெறுத்து (ஒதுக்கி) விடுவீராக” (74:1-5)

75) சூரத்துல் கியாமா – மறுமை நாள்

அத்தியாயம் 75

வசனங்கள் 40

இந்த உலக வாழ்க்கை முற்றுப் பெற்று மறுமை ஏற்பட்டே தீரும் என்பதனை உறுதி செய்யும் விதமாக அந்நாளின் மீது சத்தியம் செய்து இந்த அத்தியாயத்தை ஆரம்பித்து பின்வருமாறு கேள்வி கேட்கின்றான்.

“(மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா?

அன்று! அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்.

எனினும் மனிதன் தன் எதிரே வரவிருப்பதை (கியாம நாள்) பொய்ப்பிக்கவே நாடுகிறான்.

‘கியாம நாள் எப்போழுது வரும்?’ என்று (ஏளனமாகக்) கேட்கிறான்.” (75: 3-6)

76) சூரத்துல் இன்ஸான் – மனிதன்

அத்தியாயம் 76

வசனங்கள் 31

இந்த அத்தியாயத்திற்கு தஹ்ர் (காலம்) என்றும் ஒரு பெயர் உள்ளது. கலாத்திற்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பை பேசும் அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்.

“அவனை நாம் சோதிப்பதற்காக, கலப்பான இந்திரியத் துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம் – அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.

நிச்சயமாக, நாம் அவனுக்கு வழியைக் காண்பித்தோம்; (அதைப் பின்பற்றி) நன்றி உள்ளவனாக இருக்கின்றான்; அல்லது (அதைப் புறக்கணித்து) நன்றி கொட்டவனாகவும் இருக்கின்றான்.” (76: 2,3)

தொடர்ந்து இந்த உலகில் கெட்டவர்களாக வாழ்ந்தவர்களுக்குரிய தண்டனைகளையும், நல்லவர்களாக அல்லாஹ்வுக்கு நன்றி உள்ளவர்களாக வாழ்தவர்களுக்கான சுகபோகங்களையும் நாளை மறுமையில் வைத்துள்ளதாக குறிப்பிடுகின்றான்.

77) சூரத்துல் முர்ஸலாத் – அனுப்பப்பட்டவை

அத்தியாயம் 78

வசனங்கள் 50

தொடர்ச்சியாக அனுப்பப்படும் காற்றின் மீது சத்தியம் செய்து ஆரம்பிக்கும் இந்த அத்தியாயத்தில் தொடர்ந்து பல்வேறு படைப்புக்கள் மீது அல்லாஹ் சத்தியம் செய்து மிக முக்கியமான மறுமை நிகழ்வு நிகழ்ந்தே ஆகும் என்பதனை உறுதியாக கூறுகின்றான். மனிதர்களாகிய நாம் அல்லாஹ் ஒருவன் மீது மாத்திரமே சத்தியம் செய்து ஆக வேண்டும். அவன் அல்லாத படைப்பினங்களின் மீது சத்தியம் செய்யும் போது அல்லாஹ்வோடு அவற்றை இணையாக்கிவிட்டோம் என்ற மிக மோசமான அநியாயத்ததை செய்த குற்றத்திற்காக மாட்டிக் கொள்ள வேண்டி வரும்..

“தொடர்ச்சியாக அனுப்பப்படுபவை (காற்று)கள் மீது சத்தியமாக

வேகமாக வீசுகிறவை (புயல் காற்றுகள்) மீது (சத்தியமாக)-

(மேகங்களைப்) பரவலாகப் பரப்பும் (மழைக் காற்றுகள்) மீது சத்தியமாக

(சத்தியத்தையும் அசத்தியத்தையும்) வேறுபடுத்தி காட்டுவோர் (வானவர்கள்) மீதும் (சத்தியமாக)-

(இதயங்களில்) உபதேசத்தைப் போடுவோர் (வானவர்) மீதும் (சத்தியமாக)

(அந்த உபதேசம்) மன்னிப்பையோ, அல்லது எச்சரிக்கையையோ (உள்ளடக்கியதாகும்)

நிச்சயமாக உங்களுக்கு வாக்களிக்கப்பட்டது நிகழ்வதேயாகும்.” (77: 1-7)

78) சூரத்துன் நபஃ – அந்தச் செய்தி

அத்தியாயம் 78

வசனங்கள் 40

“எதைப்பற்றி அவர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்கின்றனர்?

மகத்தான அச்செய்தியைப் பற்றி” (78:1,2)

மறுமை நம்பிக்கையில் சந்தேகத்தில் இருந்த மக்கத்து காபிர்களை நோக்கி அல்லாஹ் இவ்வாறு கேள்வி எழுப்பி, நிச்சியமாக நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் அந்த நாள் தொடர்பான செய்தி வந்தே தீரும் என்று உறுதியாக பதிலளிக்கின்றான்.

“எதைப்பற்றி அவர்கள் வேறுபட்(ட கருத்துக்கள் கொண்)டிருக்கிறார்களோ அதைப் பற்றி,

அவ்வாறன்று! அவர்கள் விரைவில் அறிந்துகொள்வார்கள்.

பின்னரும் (சந்தேகமின்றி) அவர்கள் விரைவிலேயே அறிந்துகொள்வார்கள்.” (78:3-5)

தொடர்ந்து மறுமையில் நடைபெறும் அமலிதுமலிகளைப் பற்றி பட்டியலிடுகின்றான்.

“நிச்சயமாகத் தீர்ப்புக்குரிய நாள், நேரங்குறிக்கப்பட்டதாகவே இருக்கிறது.

ஸூர் (எக்காளம்) ஊதப்படும் அந்நாளில் நீங்கள் அணிஅணியாக வருவீர்கள்.

இன்னும், வானம் திறக்கப்பட்டு பல வாசல்களாகிவிடும்.

மலைகள் பெயர்க்கப்பட்டு கானல் நீராகிவிடும்.” (78:17-20)

79) சூரத்துன் நாஸிஆத் – கடினமாக பறிப்போர்

அத்தியாயம் 79

வசனங்கள் 46

அல்லாஹ்வின் படைப்பினங்களில் ஒன்றாகிய மலக்குமார்கள் பாவிகளின் உயிர்களை கடினமாக பறிப்பதை குறிப்பிட்டு, மேலும் அவர்களின் சில பணிகளை பட்டியலிட்டு, அவர்கள் மீது சத்தியம் செய்து மறுமை நிகழ்வுகளை ஞாபகப்படுத்துகின்றான்.

“பூமி நடுக்கமாக நடுங்கும் அந்நாளில்,

அதனைத் தொடரும் (நில நடுக்கம்) தொடர்ந்து வரும்.

அந்நாளில் நெஞ்சங்கள் திடுக்கிட்டவையாக இருக்கும்

அவர்கள் பார்வைகள் (அச்சத்தால்) கீழ் நோக்கியிருக்கும்.” (79:6-9)

பின்னர் வரும் வசனங்களில் பாவிகள் மீண்டும் எழுப்பப்பட மாட்டோம் என்ற எண்ணத்தில் இவ்வுலகில் வாழ்ந்து விட்டு கேட்கும் கேள்விகளை குறிப்பிடுகின்றான்.

80) சூரத்து அபஸ – கடுகத்தார்

அத்தியாயம் 80

வசனங்கள் 42

மக்கத்து பெரும் தலைவர்களை சந்தித்து நபியவர்கள் மார்க்கத்தை எத்திவைக்கும் போது அந்த வழியினால் வந்த கண் தெரியாத தோழர் இப்னு உம்மி மக்தூமை பார்த்து கடுகடுத்ததை கண்டித்து இந்த அத்தியாயத்தை இறக்கி வைத்தான்.

கடுகடுத்தது கண் தெரியாதவருக்கு தெரிய வாய்பில்லாத போதும் இந்த செயல் மோசமானது என்பதை அல்லாஹ் தன் நபிக்கு விளக்க முற்பட்டான். கண் தெரியாதவராக இருந்தாலும் அவருடனும் புன்முறுவல் பூப்பதை இஸ்லாம் மார்க்கமாக்கியுள்ளது.

“அவர் கடுகடுத்தார், மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்.

அவரிடம் அந்த அந்தகர் வந்தபோது,

(நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா?

அல்லது அவர் (உம் உபதேசத்தை) நினைவு படுத்திக்கொள்வதன் மூலம், (உம்முடைய) உபதேசம் அவருக்குப் பலனளித்திருக்கலாம்.” (90:1-4)

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed