அத்தியாயங்களின் விளக்கம் – 81 முதல் 90 வரை

81) சூரத்துத் தக்வீர் – சுருட்டப்படல்

அத்தியாயம் 81

வசனங்கள் 29

நாளை மறுமையின் முக்கிய நிகழ்வுகளை பட்டியலிடும் அல்லாஹ் இந்த அத்தியாயத்தை சூரியன் சுருட்டப்படுவதை கொண்டு ஆரம்பிக்கின்றான்.

“சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது

நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது

மலைகள் பெயர்க்கப்படும் போது

சூல் நிறைந்த ஒட்டகைகள் (கவனிப்பாரற்று) விடப்படும் போது

காட்டு மிருகங்கள் (மனிதர்களுடனும், இதர பிராணிகளுடனும்) ஒன்று சேர்க்கப்படும்போது

கடல்கள் தீ மூட்டப்படும்போது” (81:1-6)

82) சூரத்துல் இன்பிதார் – வெடித்துவிடுதல்

அத்தியாயம் 82

வசனங்கள் 19

மறுமையை மறந்து வாழ்ந்த மக்கத்து மக்களுக்கு மத்தியில் இறக்கப்பட்ட இந்த அத்தியாயத்தின் ஆரம்பம் மறுமையின் நிகழ்வுகளில் வானம் பிளக்கப்படுவது தொடர்பாக பேசுகின்றது.

“வானம் வெடித்து விடும் போது

நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது

கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) பிளக்கப்படும் போது

கப்றுகள் திறக்கப்படும் போது

ஒவ்வோர் ஆத்மாவும், அது எதை முற்படுத்தி (அனுப்பி) வைத்தது; எதைப் பின்னே விட்டுச் சென்றது என்பதை அறிந்து கொள்ளும்” (82:1-5)

83) சூரத்துல் முதப்பிபீன்- அளவை, நிறுவையில் மோசடி

அத்தியாயம் 83

வசனங்கள் 36

மனிதர்களோடு கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் நியாயமாக நடந்து கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ்வின் தண்டனை இருப்பதாக அல்லாஹ் இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் எச்சரிக்கின்றான்.

“அளவு (எடையில்) மோசம் செய்பவர்களுக்கு கேடுதான்.

அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது நிறைவாக அளந்து வாங்குகின்றனர்

ஆனால், அவர்கள் அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும்போது குறை(த்து நஷ்டமுண்டா)க்குகிறார்கள்

நிச்சயமாக அவர்கள் எழுப்பப்படுபவர்களென்பதை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லையா?

மகத்தான ஒரு நாளுக்காக

அகிலத்தாரின் இறைவன் முன் மனிதர்கள் நிற்கும் நாள்

நிச்சயமாக அவர்கள் எழுப்பப்படுபவர்களென்பதை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லையா?” (83:1-6)

84) சூரத்துல் இன்ஷிகாக் – பிளந்து விடுதல்

அத்தியாயம் 84

வசனங்கள் 25

மறுமையின் அத்தாட்சிகளில் ஒன்றான வானம் பிளந்து விடுவதை ஞாபகப்படுத்தி பின்னர் பட்டோலைகள் வழங்கப்படுவது தொடர்பாக குறிப்பிடுகின்றான்.

“ஆகவே எவனுடைய பட்டோலை அவனுடைய வலக்கையில் கொடுக்கப்படுகின்றதோ,

அவன் சுலபமான விசாரணையாக விசாரிக்கப்படுவான்

இன்னும், தன்னைச் சார்ந்தோரிடமும் மகிழ்வுடன் திரும்புவான்.

ஆனால், எவனுடைய பட்டோலை அவனுடைய முதுகுக்குப் பின்னால் கொடுக்கப்படுகின்றதோ

அவன் (தன்குக்) ‘கேடு’ தான் எனக் கூவியவனாக

அவன் நரகத்தில் புகுவான்.

நிச்சயமாக அவன் (இம்மையில்) தன்னைச் சார்ந்தோருடன் மகிழ்வோடு இருந்தான்.

நிச்சயமாக, தான் (இறைவன் பால்) ‘மீளவே மாட்டேன்’ என்று எண்ணியிருந்தான்.” (84:7-14)

85) சூரத்துல் புரூஜ் – கிரகங்கள்

அத்தியாயம் 85

வசனங்கள் 22

கிரங்களை உடைய வானத்தின் மீது சத்தியம் செய்து ஆரம்பிக்கப்படும் இந்த அத்தியாயத்தில் நெருப்பு கிடங்கில் போட்டு சித்திரவதை செய்யயப்பட்டு கொலை செய்யப்பட்ட ஒரு கூட்டத்தை பற்றி அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

“(நெருப்புக்) குண்டங்களையுடையவர்கள் கொல்லப்பட்டனர்.

விறகுகள் போட்டு எரித்த பெரும் நெருப்புக் (குண்டம்).

அவர்கள் அதன்பால் உட்கார்ந்திருந்த போது,

முஃமின்களை அவர்கள் (நெருப்புக் குண்டத்தில் போட்டு வேதனை) செய்ததற்கு அவர்களே சாட்சிகளாக இருந்தனர்.

(யாவரையும்) மிகைத்தவனும், புகழுடையோனுமாகிய அல்லாஹ்வின் மீது அவர்கள் ஈமான் கொண்டார்கள் என்பதற்காக அன்றி வேறெதற்கும் அவர்களைப் பழி வாங்கவில்லை.” (85:4-8)

86) சூரத்துத் தாரிக் – விடிவெள்ளி

அத்தியாயம் 86

வசனங்கள் 17

மறுமையை பற்றி இதற்கு முன் உள்ள அத்தியாயங்களில் பேசிய அல்லாஹ் இந்த அத்தியாயத்தில் மனிதனின் ஆரம்பம் தொடர்பாக ஞாபகப்படுத்துகின்றான். விடிவெள்ளியின் மீது சத்தியம் செய்து ஆரம்பித்து அது இலங்கும் ஒரு நட்ச்சத்திரம் என்று நமக்கு தெளிவுபடுத்துகின்றான்.

“மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும்.

குதித்து வெளிப்படும் (ஒரு துளி) நீரினால் படைக்கப்பட்டான்.

முதுகந் தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது.

இறைவன் (மனிதன் இறந்த பின் அவனை உயிர்ப்பித்து) மீட்டும் சக்தியுடையவன்.” (86:5-8)

87) சூரத்துல் அஃலா – மிக உயர்ந்தவன்

அத்தியாயம் 87

வசனங்கள் 19

அல்லாஹ்வின் நாமங்களை நினைவு கூர்வதை நமக்கு இந்த அத்தியாயத்தின் ஊடாக கட்டளையிடுகின்றான்.

பின்னர் அவனது சில செயற்பாடுகளை ஞாபகப்படுத்தி அவன் உண்மையிலே நினைவு கூறப்பட தகுதியானவன் என்பதனை விளக்குகின்றான்.

“(நபியே!) மிக்க மேலானவனான உம்முடைய இறைவனின் திருநாமத்தை (த் தியானித்து) தஸ்பீஹு செய்வீராக.

அவனே (யாவற்றையும்) படைத்துச் செவ்வையாக்கினான்.

மேலும், அவனே (அவற்றுக்கு வேண்டிய அனைத்தையும்) அளவுபட நிர்ணயித்து (அவற்றைப் பெறுவதற்கு) நேர்வழி காட்டினான்.

அன்றியும் அவனே (கால் நடைகளுக்கென) மேய்ச்சலுக்குரியவற்றையும் வெளியாக்கினான்.

பின்னர் அவற்றை உலர்ந்த கூளங்களாக ஆக்கினான்.” (87:1-5)

88) சூரத்துல் காஷியா -சூழ்ந்து கொள்வது

அத்தியாயம் 88

வசனங்கள் 26

“சூழ்ந்து கொள்ளக் கூடிய மறுமை நாளின் செய்தி உமக்கு வந்நதா” என்ற கேள்வியுடன் ஆரம்பிக்கப்படும் இந்த அத்தியாயம் பாவிகளுக்கு ஏற்படும் இழிவு தரும் வேதனை தொடர்பாக எடுத்தியம்புகின்றது.

“அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும்.

அவை (தீமையில்) உறுதியாக நின்று செயல்பட்டவையாகும்.

கொழுந்து விட்டெறியும் நெருப்பில் அவை புகும்.

கொதிக்கும் ஊற்றிலிருந்து (அவர்களுக்கு) நீர் புகட்டப்படும்.

அவர்களுக்கு விஷச் செடிகளைத் தவிர வேறு உணவில்லை

அது அவர்களைக் கொழு(த்துச் செழி)க்கவும் வைக்காது. அன்றியும் பசியையும் தணிக்காது.” (88: 2-7)

பின்னர் நல்லடியார்களுக்கு கிடைக்கும் இன்பங்களை பற்றி அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

89) சூரத்துல் பஜ்ர் – அதிகாலை

அத்தியாயம் 89

வசனங்கள் 30

அல்-குர்ஆனில் அறிவுடையோருக்கு பல சான்றுகள் இருப்பதை அல்லாஹ் தான் படைத்தவற்றின் மீது சத்தியம் செய்து மனித குலத்திற்கு ஞாபகப்படுத்துகின்றான்.

“விடியற் காலையின் மீது சத்தியமாக

பத்து இரவுகளின் மீது சத்தியமாக

இரட்டையின் மீதும், ஒற்றையின் மீதும் சத்தியமாக

செல்கின்ற இரவின் மீதும், சத்தியமாக

இதில் அறிவுடையோருக்கு (போதுமான) சத்தியம் இருக்கிறதல்லவா?

உம்முடைய இறைவன் ஆ(து கூட்டத்)தை என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?

(அவர்கள்) தூண்களையுடைய ‘இரம்’ (நகர) வாசிகள்

அவர்கள் போன்ற ஒரு சமுதாயம் எந்த நாடுகளிலும் படைக்கப்படவில்லை.” (89:1-8)

90) சூரத்துல் பலத் -அந்நகரம்

அத்தியாயம் 90

வசனங்கள் 20

மக்கமா நகரத்தின் மீது சத்தியம் செய்து இந்த அத்தியாயத்தை ஆராம்பிக்கின்றான்.

“நீர் இந்நகரத்தில் தங்கியிருக்கும் நிலையில் இந்நகரத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.

பெற்றோர் மீதும், (பெற்ற) சந்ததியின் மீதும் சத்தியமாக,

திடமாக, நாம் மனிதனைக் கஷ்டத்தில் படைத்தோம்.

ஒருவரும், தன் மீது சக்தி பெறவே மாட்டார்’ என்று அவன் நினைக்கினறானா?

‘ஏராளமான பொருளை நான் அழித்தேன்’ என்று அவன் கூறுகிறான்.

தன்னை ஒருவரும் பார்க்கவில்லையென்று அவன் எண்ணுகிறானா?” (90:1-5)

பின்னர் தொடர்ந்து எல்லாம் வல்ல அல்லாஹ் மனிதனுக்கு வழங்கிய அருட்கொடைகளை ஞாபகப்படுத்துகின்றான்.

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed