வணக்க வழிபாடுகளில் இறைவனை ஒருமைப் படுத்துதல்

தவ்ஹீதின் அடிப்படை தேவைகளை முழுமைப்படுத்துவதற்கு, படைத்துப் பரிபாலித்தலில் இறைவனை ஒருமைப்படுத்துதல், இறைவனின் பண்புகள் மற்றும் பெயர்கள் ஆகியவற்றில் இறைவனை ஒருமைப்படுத்துதல் ஆகிய இரண்டை மட்டும் உறுதியாக நம்பினால் போதாது.

தவ்ஹீத் முழுமை அடைவதற்கு மேலே சொன்ன இரண்டு வகையான தவ்ஹீதோடு வணக்க வழிபாடுகளில் இறைவனை ஒருமைப்படுத்துதலையும் உறுதியாக நம்பவேண்டும். இவற்றிற்கு ஆதாரமாக, அல்லாஹ் தான் திருமறையில் மிகத் தெளிவாக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த இறைநிராகரிப்பாளர்கள் மேலே சொன்ன இரண்டு வகையான தவ்ஹீதை மட்டும் நம்பினார்கள் என்று கூறுகிறான்.

அல்லாஹ் கூறுகிறான்: –

‘உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும், (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின் அனைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?’ என்று(நபியே!) நீர் கேளும். உடனே அவர்கள் ‘அல்லாஹ்’ என பதிலளிப்பார்கள் ‘அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?’ என்று நீர் கேட்பீராக” (அல்-குர்ஆன் 10:31)

“மேலும், அவர்களிடம் யார் அவர்களைப் படைத்தது என்று நீர் கேட்டால் ‘அல்லாஹ்’ என்றே அவர்கள் நிச்சயமாக கூறுவார்கள். அவ்வாறிக்கும் போது (அவனைவிட்டு) அவர்கள் எங்கு திருப்பப்படுகிறார்கள்?”  (அல்-குர்ஆன் 43:87)

“இன்னும், அவர்களிடம்: ”வானத்திலிருந்து நீரை இறக்கி, பிறகு அதனைக் கொண்டு இப்பூமியை – அது (காய்ந்து) மரித்தபின் உயிர்ப்பிப்பவன் யார்?’ என்று நீர் கேட்பீராகில்: ‘அல்லாஹ்’ என்றே இவர்கள் திட்டமாகக் கூறுவார்கள். (அதற்கு நீர்) ‘அல்ஹம்து லில்லாஹ் – புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது’ என்று கூறுவீராக. எனினும் இவர்களில் பெரும்பாலோர் அறிந்துணர மாட்டார்கள்”  (அல்-குர்ஆன் 29:63)

மக்கத்துவாசிகள் அல்லாஹ் தான் படைத்தவன், பாதுகாப்பவன் மற்றும் தங்களுடைய கடவுள் என்று அறிந்து வைத்திருந்தனர். ஆனால் அல்லாஹ்வை பொறுத்தவரையில் முஸ்லிம் என்று சொல்வதற்கு இந்த அறிவு மட்டும் போதாது.

அல்லாஹ் கூறுகிறான்: –

“மேலும் அவர்கள் இணைவைப்பவர்களாக இருக்கிற நிலையிலில்லாமல் அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதில்லை”  (அல்-குர்ஆன் 12:106)

முஜாஹித் (இப்னு அப்பாஸின் மிகச்சிறந்த மாணவர்) அவர்கள் மேற்கண்ட வசனத்துக்கு விளக்கம் அளிக்கையில், அல்லாஹ் தான் தங்களை படைத்தவன், உணவளிப்பவன் மற்றும் தங்களின் உயிர்களை வாங்குபவன் என்று சொல்லிக்கொண்டாலும் அல்லாஹ்வோடு மற்ற கடவுள்களை வணங்குவதை அவர்கள் நிறுத்தவில்லை. ஆகையால் மக்கத்து இறைநிராகரிப்பாளர்கள் அல்லாஹ்வின் ஆட்சியையும் சக்தியையும் அறிந்திருந்தனர். ஆனால் அவர்கள் தங்களுக்குத் தேவைகள் அல்லது துன்பங்கள் வரும் போதெல்லாம் தங்களுடைய பலவிதமான வணக்க வழிபாடுகளான ஹஜ், தான தர்மங்கள் நேர்ச்சைகள் மற்றும் அறுத்துப் பலியிடுதல் ஆகியவற்றை மற்ற கடவுள்களுக்கு அர்ப்பணித்தனர்.  இவ்வாறு செய்வதன் மூலம் தங்களை இப்றாஹீம் நபியின் வழித் தோன்றல்கள் என்றும் கூறிக் கொண்டனர். இவர்களின் இந்த கூற்றுக்காக அல்லாஹ் இந்த வசனத்தை இறக்குகிறான்.

“இப்ராஹீம் யூதராகவோ, அல்லது கிறிஸ்தவராகவோ இருக்கவில்லை ஆனால் அவர் (அல்லாஹ்விடம்) முற்றிலும் (சரணடைந்த) நேர்மையான முஸ்லிமாக இருந்தார். அவர் முஷ்ரிக்குகளில் (இணைவைப்போரில்) ஒருவராக இருக்கவில்லை”  (அல்-குர்ஆன் 3:67)

சில மக்கத்து காஃபிர்கள் ‘மறுமை நாளையும்’ ‘தீர்ப்பு உண்டென்றும்’ வேறு சிலர் ‘களா கத்ரை’யும் நம்பினர். முந்தைய இஸ்லாமிய கவிதைகளில் இவற்றிற்கு அதிகமான சான்றுகள் காணப்படுகின்றது. உதாரணமாக ஜுஹைர் என்ற கவிஞர் ‘அது தாமதப்படுத்தப்பட்டுள்ளது’ அல்லது ‘மறுமை நாளுக்காக பாதுகாக்கப்பட்டு புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளார் .

அந்நாரா என்ற கவிஞர் ‘ஓ எபிலே மரணத்தை விட்டு எங்கே தப்பித்து ஓடுகிறாய்? என் இறைவன் அதை ஏற்கனவே நிர்ணயித்துவிட்டான்’ என்று கூறியுள்ளார்.

மக்கத்து காஃபிர்கள் தவ்ஹீதையும் இறைவனையும் ஒப்புக் கொண்டிருந்தாலும் அவர்கள் இறைவனை விட்டு விட்டு மற்ற கடவுள்களை வழிபட்ட காரணத்தால் இறைவன் அவர்களை இறை நிராகரிப்பாளர்கள் (காஃபிர்கள்) என்று விவரிக்கிறான் .

ஆகையால் வணக்க வழிபாடுகளில் இறைவனை ஒருமைப்படுத்துவதன் முக்கியத்துவம் என்னவெனில் இறைவனை வணங்குவதில் ஒருமையை கட்டிக் காத்தலாகும். வணங்குவதற்கு அவன் ஒருவனே தகுதியுடையவன் ஆதலாலும் அவன் ஒருவனே நமக்கு நன்மை அளிக்கக்கூடியவன் ஆகையாலும் அனைத்து வகையான வணக்க வழிபாடுகளையும் இறைவன் ஒருவனை முன்னிறுத்தியே செய்ய வேண்டும். மேலும் மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையே எந்தவித இடைத்தரகரும் தேவையில்லை. மனிதன் படைக்கப்பட்டதன் நோக்கம் மேலும் நபிமார்கள் எடுத்துச் சென்ற செய்தியின் முக்கியத்துவம் அனைத்துமே வணக்கவழிபாடுகளில் இறைவன் ஒருவனையே முன்னிறுத்தப்பட வேண்டும் என அல்லாஹ் வலியுறுத்துகிறான்.

“இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை”  (அல்-குர்ஆன் 51:56)

“மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், ‘அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள், ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்’ என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம். எனவே அ(ந்த சமூகத்த)வர்களில் அல்லாஹ் நேர்வழி காட்டியோரும் இருக்கிறார்கள். வழிகேடே விதிக்கப்பெற்றோரும் அவர்களில் இருக்கிறார்கள். ஆகவே நீங்கள் பூமியில் சுற்றுப் பயணம் செய்து, பொய்யர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதைக் கவனியுங்கள்” (அல்-குர்ஆன் 16:36)

படைக்கப்பட்டதன் நோக்கத்தை முழுமையாக அறிந்து கொள்வது மனிதனின் சக்திக்கு அப்பாற்பட்டதாகும். மனிதன் என்பவன் குறிப்பிட்ட வரையறைக்குள் படைக்கப்பட்டவன். ஆகையால் நிகரில்லா படைத்தவனின் செயல்களை முழுவதும் அறிந்துகொள்ள முடியாதவனாக உள்ளான். ஆகையால் இறைவன் அவனை வணங்குவதை மனிதனின் ஒரு பகுதியாக ஆக்கினான். மேலும் படைக்கப்பட்டதன் நோக்கத்தை விளக்குவதற்காக நபிமார்களையும் வேதங்களையும் அனுப்பினான். இவற்றின் நோக்கமெல்லாம் முன்பே விளக்கியதுபோல வணக்க வழிபாடுகளில் இறைவன் ஒருவனையே முன்னிறுத்த வேண்டும் என்பது தான். இதற்கு மாறு செய்பவர்கள் மிகப் பெரும்பாவமான இறைவனுக்கு இணை கற்பிக்கிறார்கள். சூரா பாதிஹாவில் இறைவன் கூறுவது போல ஒவ்வொரு முஸ்லிமும் (தொழுகையில்) குறைந்தது 17 முறை கூறுகிறான்: –

“(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்”  (அல்-குர்ஆன் 1:5)

முஹம்மது நபி (ஸல்) அவர்களும் வணக்க வழிபாடுகளில் ஒருமை தத்துவத்தை உறுதி செய்கிறார்கள்.  “தொழுகையில் கேட்டால் அல்லாஹ்விடமே கேளுங்கள். உதவி தேடினால் அல்லாஹ்விடமே தேடுங்கள்” (திர்மிதி)

இறைவன் மனிதனுக்கு மிக அருகில் இருக்கிறான். ஆகையால் எந்தஒரு இடைதரகரும் தேவையில்லை உதாரணாமாக: –

“(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால் ‘நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன்; பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்’ என்று கூறுவீராக”  (அல்-குர்ஆன் 2:186)

மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும், (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம். (அல்-குர்ஆன் 50:16)

வணக்க வழிபாடுகளில் இறைவனை ஒருமைப்படுத்துதல் என்பது அனைத்து வகையான இறைவனுக்கு இணை வைத்தலையும் நிராகரிக்கிறது. யாராவது ஒருவர் இறந்தவர்களிடம் பிரார்த்தித்து உதவி தெடினால்  அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்தவர்களாவார்கள். ஏனெனில் வணக்க வழிபாடுகள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய படைபினங்களுக்குமிடையே பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: –

“பிராத்தனையும் வணக்கமாகும்” (அபூதாவூத்)

அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்: –

‘(அப்படியாயின்) அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்த நன்மையும் செய்யாத உங்களுக்கு தீங்கும் அளிக்காதவற்றையா வணங்குகிறீர்கள்’ என்று கேட்டார். (அல்-குர்ஆன் 21:66)

நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் – அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்! (அல்-குர்ஆன் 7:194)

யாராவது ஒருவர், நபிமார்களிடமோ, மதகுருமார்களிடமோ, ஜின்களிடமோ அல்லது மலக்குகளிடமோ உதவி கேட்டால் அல்லது அல்லாஹ்விடம் எங்களுக்காக உதவி கேட்குமாறு பிராத்தனை அல்லது வேண்டுதல் அல்லது முறையிடுதல் செய்தாலோ அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்தவர்களாவார்கள். அறியாதவர்களாய் அப்துல் காதிர் ஜீலானி அவர்களுக்கு ஆபத்தில் இருப்பவற்களுக்கு அபயம் அளிப்பவர் என்று அளிக்கப்பட்ட பட்டம் கூட இறைவனுக்கு இணை வைக்கக்கூடிய செயலாகும்.

இஸ்லாமிய கண்ணோட்டத்தில் “வணக்கங்கள்” என்பது நோன்பு, ஜகாத், ஹஜ் மற்றும் குர்பானி கொடுத்தல் போன்றவற்றை விட அதிகமானதாகும். ்வணக்கம்் என்பது உணர்ச்சிகளின் வெளிப்பாடான அன்பு, நம்பிக்கை மற்றும் பேரச்சம், பயம் ஆகியவையும் உள்ளடங்கும். அல்லாஹ் இவைகளைப் பற்றி விளக்கி இவை அதிகமானால் வரக்கூடிய பாதிப்புகளையும் பற்றி எச்சரித்துள்ளான்.

அல்லாஹ் கூறுகிறான்: –

அல்லாஹ் அல்லாதவர்களை அவனுக்கு இணையாக வைத்துக் கொண்டு, அவர்களை அல்லாஹ்வை நேசிப்பதற்கொப்ப நேசிப்போரும் மனிதர்களில் இருக்கிறார்கள். ஆனால் நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வை நேசிப்பதில் உறுதியான நிலையுள்ளவர்கள். இன்னும் (இணை வைக்கும்) அக்கிரமக்காரர்களுக்குப் பார்க்க முடியுமானால், (அல்லாஹ் தரவிருக்கும்) வேதனை எப்படியிருக்கும் என்பதைக் கண்டு கொள்வார்கள். அனைத்து வல்லமையும் அல்லாஹ்வுக்கே சொந்தமானது. நிச்சயமாக தண்டனை கொடுப்பதில் அல்லாஹ் மிகவும் கடுமையானவன் (என்பதையும் கண்டு கொள்வார்கள்). (அல்-குர்ஆன் 2:165)

தங்களுடைய சத்திய உடன்படிக்கைகளை முறித்துக் கொண்டு, (நம்) தூதரை (ஊரைவிட்டு) வெளியேற்றவும் திட்டமிட்ட மக்களுடன் நீங்கள் போர் புரிய வேண்டாமா? அவர்களே (வாக்குறுதி மீறி உங்களைத் தாக்க) முதல் முறையாக துவங்கினர். நீங்கள் அவர்களுக்கு அஞ்சுகிறீர்களா? (அப்படியல்ல!) நீங்கள் முஃமின்களாக இருப்பீர்களானால், நீங்கள் அஞ்சுவதற்கு தகுதியுடையவன் அல்லாஹ் ஒருவனேதான். (அல்-குர்ஆன் 9:13)

(அல்லாஹ்வை) பயந்து கொண்டிருந்தோரிடையே இருந்த இரண்டு மனிதர்கள் மீது அல்லாஹ் தன் அருட்கொடையைப் பொழிந்தான். அவர்கள், (மற்றவர்களை நோக்கி:) ‘அவர்களை எதிர்த்து வாயில் வரை நுழையுங்கள். அது வரை நீங்கள் நுழைந்து விட்டால், நிச்சயமாக நீங்களே வெற்றியாளர்கள் ஆவீர்கள், நீங்கள் முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வையுங்கள்’ என்று கூறினர். (அல்-குர்ஆன் 5:23)

வணக்க வழிபாடுகள் என்பது தன்னை முழுவதுமாக கீழ்படிவதாலும் மேலும் அல்லாஹ் என்பவன் சட்டதிட்டங்களை முழுமையாக கொடுக்கக்கூடியவன் என்பதாலும் ஷரீஅத் அடிப்படையிலான சட்டங்கள் இல்லாமல் மற்ற சட்டதிட்டங்களை அமலாக்குவது ஒருவகையான இறை நிராகரிப்பாகும். மேலும் இது போன்ற சட்டங்களை நம்புவது அல்லாஹ் அல்லாதவர்களை வழிபடுவது போன்றதாகும்.

நிச்சயமாக நாம் தாம் ‘தவ்ராத்’தை யும் இறக்கி வைத்தோம் அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன. (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் வழிப்பட்ட நபிமார்கள், யூதர்களுக்கு அதனைக் கொண்டே (மார்க்கக்) கட்டளையிட்டு வந்தார்கள். இறை பக்தி நிறைந்த மேதை (ரப்பனிய்யூன்)களும், அறிஞர் (அஹ்பார்)களும் – அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தைப் பாதுகாக்க கட்டளையிடப்பட்டவர்கள் என்பதனாலும், இன்னும் அவ்வேதத்திற்குச் சாட்சிகளாக அவர்கள் இருந்தமையாலும் அவர்கள் (அதனைக் கொண்டே தீர்ப்பளித்து வந்தார்கள் முஃமின்களே!) நீங்கள் மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள் எனக்கே அஞ்சுங்கள். என்னுடைய வசனங்களை அற்பக் கிரயத்திற்கு விற்று விடாதீர்கள்! எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் நிச்சயமாக காஃபிர்கள்தாம். (அல்-குர்ஆன் 5:44)

ஒரு முறை நபித்தோழர் அதீபின் ஹாதிம் (ரலி) (கிறிஸ்தவ மதத்திலிருந்து இஸ்லாம் மார்க்கத்திற்கு மாறியவர்) அவர்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பின் வரும் வசனத்தை ஓத கேட்டார்கள்.

அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர். ஆனால் அவர்களே ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்) வணங்கக்கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள்; வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறு இறைவன் இல்லை – அவன் அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிகவும் பரிசுத்தமானவன். (அல்-குர்ஆன் 9:31)

இந்த வசனத்தை ஓதக்கேட்ட அந்த நபித்தோழர் அவர்கள், “நிச்சயமாக நாங்கள் அவர்களை வணங்கவில்லை” என்றார்கள். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பக்கம் திரும்பி “அல்லாஹ் அவர்களுக்கு ஹலாலாக்கியதை அவர்கள் ஹராமாக்கவில்லையா? அல்லாஹ் ஹராமாக்கியதை அவர்கள் ஹலாலாக்கவில்லையா?” என்று கூறிய போது “ஆம்” (என்று அந்த நபித்தோழர்) என்று கூறினார்கள். அப்போது முஹம்மது நபி (ஸல்) அவர்கள் “இவ்வாறு தான் அவர்களை வணங்கினார்கள்” என்று கூறினார்கள். ஆதாரம் : திர்மிதி.

ஆகையால் வணக்க வழிபாடுகளில் இறைவனை ஒருமைபடுத்துவதில் முக்கியமான ஒன்று ஷரீஅத் சட்டங்களை அமல்படுத்துவதாகும். முக்கியமாக முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் இறக்குமதி செய்யப்பட்டு கம்யூனிஸ மற்றும் முதலாலித்துவ கொள்கைகளின் அடிப்டையில் அரசாங்கம் செய்கின்ற, தன்னை “முஸ்லிம் நாடுகள்” என்று சொல்லிக் கொள்கிறவர்கள் இறைவனின் சட்டங்களைக் கொண்டு ஆட்சி செய்ய முன்வரவேண்டும். இந்த நாடுகளில் இஸ்லாமிய சட்டம் என்பது காலாவதியான அல்லது குறைந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகி விட்டது. அவ்வாறு இஸ்லாமிய சட்டங்கள் புத்தகத்திலும் மதச்சார்பற்ற சட்டங்கள் அமலிலும் உள்ள முஸ்லிம் நாடுகள்  வாழ்க்கையின் அனைத்து வகையிலும் பொருத்தமான இஸ்லாமிய சட்டங்களை கொண்டு வரவேண்டும். அல்லாஹ் அதற்கு பேரருள் புரிவானாகவும்.

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

By சகோதரர் M. அன்வர்தீன்

வசிப்பிடம் :அல்-கப்ஜி, சவூதி அரேபியா; தாயகம்: புது ஆத்தூர், தமிழ் நாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed