தொழுகையின் முன் பின் சுன்னத்துகள்

தானாக மனமுவந்து தொழக் கூடிய தொழுகை. நபி (ஸல்) அவர்கள் இந்தத் தொழுகையைத் தொழுது வந்ததால் அவர்களைப் பின்பற்றி நாமும் தொழுது வருவது சிறந்ததாக இருக்கும். ஒருவர் இந்தத் தொழுகைகளை தொழுது வந்தால் அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் நற்கூலி கிடைக்கும். ஒருவர் தொழவில்லை எனில் அவர் மீது குற்றமில்லை. ஆனால் நபி (ஸல்) அவர்கள் தொழுது வந்த இந்த சுன்னத் தொழுகைகளை தொழாதவர் அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் நற்கூலியை அடையக் கூடிய பாக்கியத்தை இழந்தவராவார்.

நபி (ஸல்) அவர்கள் தொழுகையின் முன் பின் சுன்னத்துக்களாக 12 ரக்அத்துகளைத் தொழுது வந்திருக்கிறார்கள். ஒருவர் பிரயாணத்தில் இல்லாமல் ஊரில் இருந்தால் இந்த 12 ரக்அத்துக்களையும் முறைப்படி பேணி தொழுது வருவது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் விரும்பத்தக்கதாகும்.

தொழுகையின் முன் பின் சுன்னத்துகள்: –

ஃபஜ்ர் முன் சுன்னத்து – 2 ரக்அத்துகள்

லுஹர் முன் சுன்னத்து – 4 ரக்அத்துகள் (2+2)

லுஹர் பின் சுன்னத்து – 2 ரக்அத்துகள்

மஃரிப் பின் சுன்னத்து – 2 ரக்அத்துகள்

இஷா பின் சுன்னத்து – 2 ரக்அத்துகள்

லுஹருடைய முன் சுன்னத்து நான்கு ரக்அத்துகளை இரண்டிரண்டு ரக்அத்துகளாக தொழ வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: –

“ஒரு நாளைக்கு 12 ரக்அத்துகள் நஃபிலாக (உபரியாக) யார் தொழுது வருகிறாரோ அவருக்கு சுவனத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படும்”.

வித்ரு தொழுகை:-

இஷா தொழுகைக்கு பின் வித்ரு தொழுவது ஒரு முஸ்லிமுக்கு சுன்னத்தாகும்.

நபி (ஸல்) அவர்கள் ஊரில் இருந்தாலும் சரி அல்லது பிரயாணத்தில் இருந்தாலும் சரி, வித்ருடைய தொழுகையை, பஜ்ருடைய தொழுகை – இவ்விரண்டையும் விடாமல் தொழுது வந்திருக்கிறார்கள்.

இகாமத் சொல்லப்பட்டு விட்டால்: –

பர்லு தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டுவிட்டால் சுன்னத்தான தொழுகையைத் தொழக் கூடாது. ஏனெனில் தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டால் கடமையான தொழுகையைத் தவிர வேறு தொழுகை கிடையாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : முஸ்லிம்)

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

You missed