எந்நேரமும் இறைவனை நினைவு கூர்வோம்

அல்லாஹ் கூறுகிறான்: –

ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அதிகமதிகமான திக்ரைக் கொண்டு திக்ரு (தியானம்) செய்யுங்கள். இன்னும், காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்யுங்கள். (அல்-குர்ஆன் 33:41-42)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: –

துஆ ஒரு சிறந்த வணக்கமாகும்.

எனவே நாம் நமது அன்றாட வாழ்க்கையையே வணக்கமாகவும், இறைவனை நினைவு கூர்வதாகவும் ஆக்கிக்கொள்வோம். அல்லாஹ் அதற்கு நமக்கு அருள் செய்வானாகவும்.

1) எச்செயலையும் துவங்குமுன்:

“பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்”

பொருள் : அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

2) கழிவறை செல்லும் போது:

“பிஸ்மில்லாஹி அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மினல் குபுஸி வல்கபாயிஸ்” (ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)

பொருள் : இறைவா! ஆண், பெண் ஷைத்தான்களை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.

3) கழிவறையிலிருந்து வெளியே வரும் போது:

“குஃப்ரானக்” (ஆதாரம் : அபூதாவுத்)

பொருள்: இறைவனே! உன்னிடம் பாவமன்னிப்பு கோருகிறேன்.

4) உளூச் செய்வதற்கு முன்:

“பிஸ்மில்லாஹ்”

பொருள் : அல்லாஹ் பெயரால்

5) உளூச் செய்து முடித்ததும்:

“அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹ்” (ஆதாரம் : முஸ்லிம்)

பொருள்:  வணங்குவதற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு யாதொரு இணையுமில்லை. முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனது தூதரும் ஆவார்கள் என உறுதியாக சாட்சி அளிக்கிறேன்.

6) ஆடை அணியும் போது:

“அல்ஹம்து லில்லாஹில்லதீ கஸானீ ஹாதஸ் ஸவ்ப வரஸகனீஹி மின்கைய்ரி ஹவ்லிம் மின்னீ வலா குவ்வா”

பொருள் : எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! என்னிடமிருந்து எவ்வித முயற்சியும் ஆற்றலுமின்றி அவனே எனக்கு இந்த ஆடையை அணிவித்தான்” (ஆதாரம் : திரிமிதி)

7) புத்தாடை அணியும் போது:

“அல்லாஹும்ம லகல்ஹம்து அன்த கஸவ்தனீஹி அஸ்அலுக்க மின் கைரீஹி வகைரிமா சுனிஅலஹு வஅவூதுபிக மின்ஷர்ரிஹி வஷர்ரிமா சுனிஅலஹு” (ஆதாரம் : திர்மிதி)

பொருள் : இறைவா! எல்லாப் புகழும் உனக்கே. நீயே எனக்கு இந்த ஆடையை அணிவித்தாய். நான் உன்னிடம் இதன் நன்மையையும் இது எதற்காக உருவாக்கப்பட்டுள்ளதோ அதன் நன்மையையும் கேட்கிறேன். மேலும் இதன் தீமையையும் இது எதற்காக உருவாக்கப்பட்டதோ அதன் தீமையையும் விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்

8.) வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது:

“பிஸ்மில்லாஹி தவக்கல்து அலல்லாஹ் வலா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்” (ஆதாரம் : அபூதாவுத், திர்மிதி)

பொருள் : அல்லாஹ்வின் பெயர் கூறி வெளியே செல்கிறேன். தீமையிலிருந்து விலகுதலும், நன்மையின் மீது ஆற்றல் பெறுதலும் அல்லாஹ்வின் உதவி கொண்டே தவிர இல்லை. நான் அவன் மீதே முழு நம்பிக்கை வைத்திருக்கிறேன்.

9) வீட்டிற்குள் நுழையும் போது:

“பிஸ்மில்லாஹி வலஜ்னா வபிஸ்மில்லாஹி கரஜ்னா வஅலா ரப்பினா தவக்கல்னா” (ஆதாரம் : அபூதாவுத்)

பொருள் : அல்லாஹ்வின் பெயரால் (வீட்டில்) நுழைகின்றோம். அல்லாஹ்வின் பெயரால் (வீட்டிலிருந்து) வெளியேறுகின்றோம். இன்னும் எங்கள் இரட்சகன் மீதே முழு நம்பிக்கை வைத்துள்ளோம்.

10) பள்ளிவாசலுக்குள் நுழையும் போது:

“அவூது பில்லாஹில் அழீம் வபிவஜ்ஹிஹில் கரீம் வசுல்தானிஹில் கதீம் மினஷ்ஷைத்தானிர் ரஜீம் பிஸ்மில்லாஹி வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹி அல்லாஹும்ம மஃப்தஹ்லி அப்வாப ரஹ்மத்திக்” (ஆதாரம் : முஸ்லிம்)

பொருள் : கண்ணியம் பொருந்திய அல்லாஹ்வின் சங்கையான முகத்தைக் கொண்டும், நிலையான அவனது மேலாதிக்கத்தைக் கொண்டும், விரட்டப்பட்ட ஷைத்தானின் தீங்குகளிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன். அல்லாஹ்வின் பெயர் கொண்டு நுழைகிறேன். இறையருளும் சாந்தியும் இறைத்தூதர் மீது உண்டாவதாக! இறைவா உனது அலுள்வாயில்களை எனக்குத் திறந்திடுவாயாக!

11) பள்ளி வாசலிலிருந்து வெளியேறும் போது:

“பிஸ்மில்லாஹி வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரஸுலில்லாஹி அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் ஃபழ்லிக் அல்லாஹும் மஃஸிம்னீ மினஷ் ஷைத்தானிர் ரஜீம்” (ஆதாரம் : அபூதாவுத்)

பொருள் : அல்லாஹ்வின் பெயரால் வெளியேறுகிறேன். இறையருளும் சாந்தியும் அல்லாஹ்வின் தூதர் மீது உண்டாவதாக! இறைவா! உன்னிடம் உனதருளை வேண்டுகிறேன். இறைவா விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் என்னை நீ பாதுகாப்பாயாக!

12) உணவை சாப்பிடும் முன்:

“பிஸ்மில்லாஹ்” (ஆதாரம் : அபூதாவுத்)

13) உணவு சாப்பிடும் போது ஆரம்பத்தில் “பிஸ்மில்லாஹ்” கூற மறந்து விட்டிருப்பின்:

“பிஸ்மில்லாஹி ஃபிஅவ்வலிஹி வஆகிரிஹி” (ஆதாரம் : அபூதாவுத்)

பொருள் :ஆரம்பத்துக்கும் முடிவுக்கும் சேர்த்து அல்லாஹ்வின் பெயர் கூறுகிறேன்.

14) சாப்பிட்டு முடித்தவுடன்:

“அல்ஹம்து லில்லாஹில்லதீ அத்அமனீ ஹாதா வரஸகனீஹி மின்கைரி ஹவ்லிம் மின்னீ வலாகுவ்வஹ்” (ஆதாரம் : அபூதாவுத்)

பொருள் : புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே! அவனே இந்த உணவை எனக்களித்தான். என்னிடமிருந்து எந்த முயற்சியும் சக்தியுமின்றியே இதை எனக்கு அருளினான்.

15) நோன்பு திறந்ததும்:

“தஹபள்ளமவு வப்தல்லதில் உருக்கு வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்” (நஸயி)

பொருள் : தாகம் தீர்ந்தது. நரம்புகள் நனைந்தன. அல்லாஹ் நாடினால் கூலி கிடைத்து விடும்.

16) தும்மியவுடன்:

“அல்ஹம்துலில்லாஹ்”

பொருள் : அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.

17) இதைச் செவியேற்ற அவரது சகோதரர் அல்லது தோழர்:

“யர்ஹமுகல்லாஹ்”

பொருள் : அல்லாஹ் உமக்கு அருள் புரிவானாக!

18) யர்ஹமுகல்லாஹ் என்று கூறியவருக்காக தும்மியவர்:

“யஹ்தீக்குமுல்லாஹு வயுஸ்லிஹு பாலகும்”

பொருள் : அல்லாஹ் உமக்கு வழிகாட்டி உமது நிலைகளைச் சீர்படுத்தட்டும்.

19) மணமக்களை வாழ்த்தும் போது:

“பாரக்கல்லாஹு லக வபாரக அலைக வஜமஅ பைனகுமா ஃபீ கைர்” (ஆதாரம் : அபூதாவுத், திர்மிதி)

பொருள் : அல்லாஹ் உமக்கு அகத்திலும் புறத்திலும் பரக்கத் செய்வானாக! நன்மையில் உங்களிருவரையும் ஒன்றிணைப்பானாக!

20) உடலுறவு கொள்ளும் முன்:

“பிஸ்மில்லாஹி அல்லாஹும்ம ஜன்னிப்னஷ்ஷைத்தான வஜன்னிஷ்பிஷ்ஷைத்தான மாரஸக்தனா” (ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)

பொருள் : அல்லாஹ்வின் பெயரால் துவங்குகிறேன். இறைவா! எங்களையும் நீ எங்களுக்கு வழங்கிய குழந்தையையும் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பாயாக!

21) கோபம் வரும் போது:

“அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்” (ஆதாரம் : புகாரி)

பொருள் : விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்.

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

You missed