முஸ்லிம்களுக்கிடையில் பல பிரிவுகள் ஏன்?

மாற்று மதத்தவர்களால் இஸ்லாமியர்களிடம் கேட்கப்படும் பொதுவான கேள்விகளுக்கு டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் பதில்கள்:

கேள்வி எண்: 13

இஸ்லாமியர்கள் அனைவரும் ஒரே குர்ஆனை ஏற்றுக் கொண்டிருக்கும் அதே வேளையில், அவர்களிடையே பல பிரிவுகளையும் – பல வித்தியாசமான கொள்கைகளையும் கொண்டிருப்பது ஏன்?

பதில்:

1. இஸ்ஸாமியர்கள் ஒன்று பட வேண்டும்:

இஸ்லாமியர்கள் தங்களுக்கிடையே பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. இதில் வருத்தப்படக் கூடிய செய்தி என்னவெனில் பிரிவு என்பது இஸ்லாத்தில் சொல்லப்படாத ஒன்று. இஸ்லாமியர்கள் தங்களுக்கிடையே பிரிவுகளின்றி ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்பதுதான் இஸ்லாம் கற்றுத் தரும் பாடம்.

‘நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்: நீ;ங்கள் பிரிந்தும் விடாதீர்கள்’ என்று அருள்மறை குர்ஆனின் மூன்றாவது அத்தியாயம் ஸுரத்துல் ஆல இம்ரானின் 103 வது வசனம் கூறுகிறது.

மேற்கண்ட குர்ஆனின் வசனத்தில் சொல்லப்படும் அல்லாஹ்வின் கயிறு எது தெரியுமா?. அருள்மறை குர்ஆன்தான். அருள்மறை குர்ஆன் என்னும் அல்லாஹ்வின் கயிற்றை இஸ்லாமியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பற்றிப் பிடிக்க வேண்டும். இந்த வசனத்தில் இரண்டு கருத்துக்கள் தொணிக்கின்றன. அருள் மறை குர்ஆன் என்னும் அல்லாஹ்வின் கயிற்றை இஸ்லாமியர்கள் அனைவரும் பற்றிப்பிடிப்பதுடன் – இஸ்லாமியர்கள் தங்களுக்கிடையே பிரிந்துத் போகக் கூடாது என்கிற இரண்டு கருத்துக்களை மேற்படி வசனம் வலியுறுத்துகிறது.

அல்லாஹ்வுக்கு கீழ் படியுங்கள். இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும் கீழ்படியுங்கள்.’ என்று அருள்மறை குர்ஆனின் நான்காவது அத்தியாயம் ஸுரத்துல் நிஷாவின் 59வது வசனம் கூறுகின்றது. மேற்படி வசனங்களிலிருந்து இஸ்லாமியர்கள் பெறும் தெளிவு என்னவெனில் – அருள்மறை குர்ஆனையும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையும் பின்பற்ற வேண்டும் என்பதேயாகும்.

2. இஸ்லாமிய மார்க்கம் பிரிவினைகள் உண்டாக்குவதை தடை செய்துள்ளது:

‘நிச்சயமாக எவர்கள் தங்களளுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி பலவாறாகப்) பிரித்து, பல பிரிவினராக பிரிந்து விட்டனரோ அவர்களுடன்(நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை. அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்தவைகள் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான்.’ என அருள்மறை குர்ஆனின் ஆறாவது அத்தியாயம் ஸுரத்துல் அன்ஆம் – ன் 159வது வசனம் கூறுகிறது. மேற்படி இறை வசனத்திலிருந்து நமக்கு தெரிவிக்கப்படும் செ;யதி என்னவெனில் எவர் இஸ்லாமிய மார்க்கத்தை பல பிரிவுகளாக பிரித்து பல வகுப்பினராக பிரிந்து விட்டனரோ – அவர்களைவிட்டு உண்மையான இஸ்லாமியர்கள் விலகிவிட வேண்டும் என்பதுதான்.

ஆனால், ஒரு இஸ்லாமியனைப் பார்த்து, ‘நீ யார்?. என்று கேள்வி எழுப்பப்பட்டால் அவரிடமிருந்து வரக்கூடிய பொதுவான பதில் ‘நான் ஒரு ஸுன்னி’ என்பதாகவோ அல்லது ‘நான் ஒரு ஷியா’ என்பதாகவோத்தான் இருக்கிறது. இன்னும் சிலர் தங்களை, ‘ஷாஃபிஈ’ என்றும், ‘ஹனஃபிஈ’ என்றும் ‘ஹம்பலி’ என்றும் ‘மாலிக்கி’ என்றும் அழைத்துக் கொள்கின்றனர். இன்னும் சிலர் ‘நான் ஒரு தேவ்பந்திஈ’ என்றும் ‘நான் ஒரு பெரல்விஈ’ என்றும் தங்களை அழைத்துக் கொள்கின்றனர்.

3. அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஒரு உண்மையான இஸ்லாமியராக இருந்தார்கள்:

மேற்கண்டவாறு தங்களை அழைத்துக் கொள்ளும் இஸ்லாமியர்களைப் பார்த்து அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எந்த பிரிவைச் சார்ந்தவர்கள் – அதாவது அவர்கள் ‘ஷாஃபியா’ அல்லது ‘ஹனஃபியா’ அல்லது ‘ஹம்பலியா’ அல்லது ‘மாலிக்கியா?’ என்று கேட்டுப் பாருங்கள். இல்லை. அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள், அவர்களுக்கு முன்புள்ள அல்லாஹ்வின் தூதர்களைப் போன்று ஒரு உண்மையான முஸ்லிம் என்பது மட்டுமே அவர்களது பதிலாக இருக்கும்.

அருள்மறை குர்ஆனின் மூன்றாவது அத்தியாயம் ஸுரத்துல் ஆல – இம்ரானின் 54வது வசனம் நபி ஈஸா (அலை) அவர்கள் ஓர் இஸ்லாமியர் என்பதை சுட்டிக் காட்டுகின்றது. மேலும் அருள்மறை குர்ஆனின் மூன்றாவது அத்தியாயம் ஸுரத்துல் ஆல – இம்ரானின் 67வது வசனம் நபி இப்றாஹிம் (அலை) அவர்கள் ஓர் யூதரோ அல்லது கிறிஸ்துவரோ அல்ல. அவர் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட ஓர் இஸ்லாமியர் என்பதை சுட்டிக் காட்டுகின்றது.

4. உங்களை நீங்கள் முஸ்லிம்கள் என்று அடையாளம் காட்டுங்கள் என அருள்மறை குர்ஆன் வலியுறுத்துகிறது:

எவராவது இஸ்லாமியர்களை நீங்கள் யார் என்று கேட்டால் – இஸ்லாமியர்கள் தாங்கள் இஸ்லாமிய மார்க்கத்தைச் சார்ந்தவர் என்று சொல்ல வேண்டுமேத் தவிர தாங்கள் ஓர் ஷாஃபிஈ என்றோ அல்லது தாங்கள் ஓர் ஹனஃபி என்றோ சொல்லக் கூடாது.

அருள்மறை குர்ஆனின் நாற்பத்து ஒன்றாவது அத்தியாயம் ஸுரத்துல் ஹாமீம் ஸஜ்தாவின் 33வது வசனம் கீழ்க்கண்டவாறு கூறுகின்றது.

எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்களைச் செய்து, ‘நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரை விட சொல்லால் அழகியவர் யார்?.(இருக்கின்றார்)‘.

வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் – நான் ஒரு முஸ்லிம் – என்று சொல்லுங்கள் என்பதாகும்.

அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத மன்னர்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் தபால் மூலமாக இஸ்லாத்திற்கு வருமாறு அழைப்பு விடுப்பார்கள். அவ்வாறு அழைப்பு விடுக்கும் போதெல்லாம் அருள்மறை குர்ஆனின் மூன்றாவது அத்தியாயம் 64 வது வசனத்தின் கடைசி வரிகளாக அமைந்திருக்கும் ‘நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்’ என்கிற வசனத்தை குறிப்பிட்டு தபால்களை அனுப்பி வைப்பார்கள்.

5. இஸ்லாத்தின் மிகச் சிறந்த மார்க்க அறிஞர்களுக்கு கண்டிப்பாக மதிப்பளிக்க வேண்டும்.

மரியாதைக்குரிய மார்க்க அறிஞர்களான இமாம் ஷாஃபி (ரஹ்), இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்), இமாம் ஹம்பல் (ரஹ்), இமாம் மாலிக் (ரஹ்) ஆகியோர் உட்பட இஸ்லாத்தின் மிகச் சிறந்த மார்க்க அறிஞர்கள் அனைவருக்கும் நாம் கண்டிப்பாக மதிப்பளிக்க வேண்டும். இஸ்லாத்தைப் பற்றி அவர்கள் ஆய்வு செய்து இஸ்லாத்திற்கு தந்த பல நல்ல செய்திகளுக்காக அல்லாஹ் அவர்களுக்கு மறுமையில் நற்கூலியை வழங்கட்டும். இஸ்லாமியர்கள் இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்கள் ஆய்வு செய்து வெளியிட்ட கருத்துக்களையோ அல்லது இமாம் ஹனஃபி (ரஹ்) அவர்கள் ஆய்வு செய்து வெளியிட்ட கருத்துக்களையோ – வெளியிடப்பட்ட கருத்துக்கள் குர்ஆன் – ஹதீஸுக்கு மாற்றமில்லாத பட்சத்தில் – எடுத்து செயல் படுத்துவதை எவரும் ஆட்சேபிக்க முடியாது. ஆனால் ‘நீ யார்?’ என்று இஸ்லாமியரை நோக்கி கேட்கப்படும் கேள்விக்கு ‘நான் ஒரு முஸ்லிம்’ என்பதுதான் பதிலாக இருக்க வேண்டும்.

1. ஒரு சிலர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அறிவித்த ‘எனது சமுதாயம் 73 பிரிவினராக பிரிவர்’ (மேற்படி செய்தி அபூதாவூத் என்னும் ஹதீஸ்(செய்தி) புத்தகத்தின் 4579வது செய்தியாக பதிவு செய்யப்பட்டுள்ளது) என்கிற செய்தியை தங்களது பிரிவினை வாதத்திற்கு ஆதாரமாகக் காட்டி வாதிடுவர்.

மேற்படி செய்தியை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் – இஸ்லாமிய சமுதாயம் 73 பிரிவாக பிரியும் என்று முன்னறிவிப்பு செய்தார்களேத் தவிர, அவர்கள் அறிவித்த நோக்கம் இஸ்லாமிய சமுதாயம் தங்களுக்குள்ளேயே பல பிரிவுகளாக பிரிய வேண்டும் என்பதற்காக அல்ல. அருள்மறை குர்ஆன் இஸ்லாமியர்கள் பல பிரிவுகளாக பிரிந்து விடக்கூடாது என்று இஸ்லாமியர்களுக்கு கட்டளை இடுகின்றது. அருள்மறை குர்ஆன் கட்டளையின்படி – அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைப்படி யார் இஸ்லாத்தில் பிரிவினைகளை ஏற்றுக் கொள்ளவில்லையோ – அவர்கள்தான் உண்மையான இஸ்லாமிய வழியில் நடப்பவர்கள்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள் – என்னுடைய உம்மத்தினர் 73 கூட்டத்தினராக பிரிவர். அதில் ஓரேயொரு கூட்டத்தைத் தவிர மற்ற அனைத்து பிரிவினரும் நரகத்துக்குச் செல்வார்கள். மேற்படி அறிவிப்பை கேட்ட அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அன்புத் தோழர்கள் கேட்டனர் சொர்க்கத்துக்கு செல்லும் அந்த கூட்டம் எது?. என்று. அதற்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்: அந்த கூட்டம் நானும் எனது அன்புத் தோழர்களும் உள்ளடங்கிய கூட்டம் என்று. (மேற்படி செய்தி திர்மிதி என்ற செய்திப் புத்தகத்தின் 171வது செய்தியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. )

‘அல்லாஹ்வுக்கு கட்டுப்படுங்கள். அல்லாஹ்வின் தூதருக்கும் கட்டுப்படுங்கள்‘ என்று அருள்மறை குர்ஆன் பல இடங்களில் சுட்டிக் காட்டுகிறது. ஒரு உண்மையான முஸ்லிம் அருள்மறை குர்ஆனையும ; – அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையையும்தான் பின்பற்ற வேண்டும். அருள்மறை குர்ஆனுக்கும், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைக்கும் மாற்றமில்லாத பட்சத்தில் எந்த மார்க்க அறிஞர்களின் கருத்துக்களையும் ஒரு உண்மையான முஸ்லிம் ஏற்றுக் கொள்ளலாம். ஒரு மார்க்க அறிஞரின் கருத்து – அருள்மறை குர்ஆனுக்கும், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைக்கும் முரண்படுமாயின் அந்த கருத்துக்கு ஒரு உண்மையான முஸ்லிம் மதிப்பளிக்க வேண்டிய அவசியமில்லை. மேற்படி மார்க்க அறிஞர் எவ்வளவு கற்றுத் தேர்ந்தவராக இருந்தாலும் சரியே.

இஸ்லாமியர்கள் அனைவரும் அருள்மறை குர்ஆனை – கற்றறிந்து – அண்ணல் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறையை சரிவர பின்பற்றுவோம் எனில் இறை நாட்டத்தில் நமக்கிடையே இருக்கும் இந்த பிரிவினை என்ற வேறுபாடு நம்மிடமிருந்து மறையும். நமக்குள்ளே பிரிவினையற்ற சிறந்த ஒற்றுமையும் உருவாகும்.

மூல நூல்: டாக்டர். ஜாகிர் நாயக் அவர்களுடன்  அனைத்து மதத்தவர்களும்

ஆங்கில மூலம்: டாக்டர் ஜாகிர் நாயக்
தமிழாக்கம்: அபூ இஸாரா

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed