ருகூவுக்கு முன்பும் பின்பும் கைகளை உயர்த்துதல்

அனைத்துப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!

தொழுகையில் ருகூவுக்கு முன்பும் பின்பும் கைகளை உயர்த்துவது பற்றி புஹாரி (735)   முஸ்லிம் (390)  போன்ற கிரந்தங்களில் ஆதாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) கூறுகிறார்கள்:

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் அல்லாஹு அக்பர் என்று சொல்லி ருகூவுக்கு முன்பும் பின்பும் கைகளை தனது தோள் வரை உயர்த்துவார்கள்.  அதிகமான அறிஞர்கள் இந்த ஹதீஸை பின் பற்றி தொழுகையின் போது கைகளை உயர்த்துவது விரும்பத்தக்கது என்றும் கூறுகிறார்கள்.

இமாம் புஹாரி அவர்கள், தொழுகையில் கைகளை உயர்த்துதல் சம்பந்தமாக தனியாக ஒரு பாடத்தை எழுதி, அதிலே இந்த இரண்டு இடங்களிலும் கைகளை உயர்த்துவதை உறுதிபடுத்தியுள்ளார்கள். மேலும் இதற்கு எதிராக செயல்படுவதை கடுமையாக மறுத்தும் இருக்கிறார்கள்.

இமாம் புஹாரியை மேற்கோள் காட்டி அல் ஹசன் அவர்கள் கூறுகிறார்கள்:

சஹாபாக்கள் தொழுகையின் போது, ருகூவுக்கு முன்பும், பின்பும் கைகளை உயர்துபவர்களாக இருந்துள்ளார்கள். எந்த ஒரு சஹாபியும் கைகளை உயர்த்தாமல் இருந்ததில்லை என்றும் உறுதிபடுத்தியுள்ளார்கள்.  (அல் மஜ்மூ 3 / 399 -406 )

இந்த ஹதீஸ் இமாம் அபூஹனீபாவை (ரஹ்) சென்றடைந்ததா என்று நமக்கு தெரியவில்லை. ஆனால், அவர்களை பின் பற்றுபவர்களை சென்றடைந்தது. ‘தொழுகையில் முதலில் ‘அல்லாஹு அக்பர்’ என்று சொல்லும் போது மட்டும் கைகளை உயத்த வேண்டும்; மற்ற சமயத்தில் கைகளை உயர்த்த தேவையில்லை’ என்ற ஹதிஸ் அவர்களிடம் இருந்ததால் அதை மட்டும் பின் பற்றினார்கள்.

பர்ரா இப்னு ஆஜிப் (ரலி) மூலமாக அபூதாவுத் (749) கிரந்தத்தில், ‘தொழுகை ஆரம்பத்தில் மட்டும் கைகளை காது வரை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் உயர்த்துவார்கள், மறுபடி அதுபோல் செய்யமாட்டார்கள்’ என்று உள்ளது.

அபூதாவூத் (748) அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவிக்கும் மற்றொரு ஹதீசும் மேலே கூறியது போல் உள்ளது.

அனால் ஹதிஸ் கலை வல்லுனர்கள்  மேலே கூறிய ஹதீஸ்ககளை (d)தயீப் (weak) ஆன ஹதீஸ்களாக அறிவித்திருக்கிறார்கள்.

See Talkhees al – Habeer by al -Haafiz ibn Hajar 1 / 221 – 223.

‘கைகளை உயர்த்தக்கூடாது’ என்று கூறக்கூடிய ஹதீஸ்கள் பலவீனமானதாக நிருபிக்கப்படும்போது, கைகளை உயர்த்த வேண்டும் என்ற ஹதிஸ்கள் பலமிக்கதாக ஆகிவிடுகிறது. ஆகையால், ஒரு முஃமின் தொழுகையில் எங்கெல்லாம் கைகளை உயர்த்த வேண்டுமோ அங்கெல்லாம் உயர்த்த வேண்டும்.

என்னை எவ்வாறு தொழக்கண்டீர்களோ அவ்வாறு தொழுங்கள் என்ற முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிப்படி (புஹாரி 631) உண்மையான முஃமின் தன்னுடைய தொழுகைகளை ஆக்கிக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.

இமாம் ஷாபி அவர்களின் கூற்றுப்படி, ‘இதுதான் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வழிமுறை’ என்று தெரிந்த பிறகு, அதை விட்டு விட்டு வேறு ஒன்றை பின்பற்றுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை.

ஒருவர் நான்கு மத்ஹபுகளில் எந்த மத்ஹபுவை பின்பற்றுபவராக இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் வேறு ஒரு மத்ஹபில் உள்ள விஷயம் சரியாக இருந்தால், அவர் அதைத் தான் பின்பற்ற வேண்டும். இது சம்பந்தமாக அறிஞர்களிடையே எந்த வித கருத்து வேறுபாடும் இல்லை. மேலும் இதுதான் முஹம்மது நபி (ஸல்) அவர்களின்  சரியான வழிமுறையும் ஆகும். (ஷைகுல் இஸ்லாம் தன்னுடைய பத்வாவில் 22 / 247 )

யார் இஜ்திஹத் செய்து கைகளை உயர்த்த வேண்டாம் என்று சொன்னார்களோ அவர்களுக்கு இறைவனிடம் மன்னிப்பும் கூலியும் மன்னிப்பும் உண்டு.  முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்:

“யார் இஜ்திஹாத் செய்து அவரது முடிவு சரியாக இருக்கிறதோ அவருக்கு இரண்டு நன்மைகள் உண்டு. யார் இஜ்திஹாத் செய்து அவரது முடுவு தவறாக ஆகி விடுகிறதோ அவருக்கு ஒரு நன்மை உண்டு”. (புஹாரி  7352 , முஸ்லிம்  1716)

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

By சகோதரர் M. அன்வர்தீன்

வசிப்பிடம் :அல்-கப்ஜி, சவூதி அரேபியா; தாயகம்: புது ஆத்தூர், தமிழ் நாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed