உளூ செய்வதில் ஏற்படும் தவறுகள்

1) உளூ செய்ய ஆரம்பிக்கும் போது நிய்யத்தை வாயால் மொழிவது!

நிய்யத்து வைக்கக்கூடிய இடம் உள்ளமாகும். நிய்யத்தை வாயினால் மொழிதல் தவறாகும். உளூ செய்வதற்கோ, பெருந்தொடக்கு, சிறு தொடக்கு மற்றும் ஜும்ஆவுக்கான குளிப்பு, இரு பெரு தினங்களில் குளிக்கக் கூடிய குளிப்புக்கள்; இவை அனைத்திற்கும் நிய்யத்து வைக்கும் இடம் உள்ளமாகும். வணக்க வழிபாட்டில் நிய்யத்து வைப்பதென்பது, உள்ளத்தால் அதை எண்ணுவதாகும். நபி (ஸல்) அவர்களது வழி முறையில் உளூ செய்யும் போது பிஸ்மி சொல்லியே ஆரம்பித்திருக்கின்றார்கள்.

மேற்குறிப்பிட்ட விடயங்களில் வாயினால் நிய்யத்தை மொழிதல் என்பது நபிகளார் (ஸல்) காட்டித்தந்த வழிமுறைக்கு மாற்றமானதாகும்.

2) உளூ செய்வதிலும், குளிப்பு கடமையான விடயங்களிலும் கவனமின்மையும், தூய்மை பற்றிய விடயங்களை அறிந்து கொள்வதில் பொடுபோக்காக இருத்தலும்!

இவற்றை விட்டும் ஒரு முஸ்லிம் முழுமையாக தவிர்ந்து கொள்ள வேண்டும். உளூ செய்வதும், கடமையான குளிப்பிலிருந்து தூய்மையாகுவதும் தொழுவதற்கு மிக மிக முக்கியமானதாகும். இவைகளின்றி தொழுகை நிறைவேறாது. அவற்றை சரிவர செய்யாவிட்டாலும் தொழுகை நிறைவேறாது.

லகீத் இப்னு ஸப்ரா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் உளூவைப்பற்றி வினவினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“உளூவை பூரணமாக செய்து கொள்ளுங்கள்” என்றார்கள். (இப்னு மாஜா)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“குதிகாலை  சரிவர கழுவாதவர்களுக்கு நாசம் உண்டாகட்டும்” (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்).

இது அனைவருக்கும் மறதி ஏற்படக்கூடிய இடமாகும். இதனைப் போன்றே ஏனய இடங்களையும் சரிவர கழுவிக் கொள்ள வேண்டும். கட்டாயமாக அனைத்து உறுப்புக்களையும் பூரணமாக நீரினால் கழுவுவதுடன் தலையை மாத்திரம் இரண்டு காதுகளுடன் சேர்த்து ஒரு தடவை நீரினால் தடவிக்கொள்ள வேண்டும். ஏனெனில் இவ்வாறே நபி (ஸல் )அவர்கள் கூறி, செய்தும் இருக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“இரண்டு காதுகளும் தலையுடன் சேர்ந்தவையாகும்” (இப்னு மாஜா)

நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்திய தொழுகையின் கூலியை அடைந்து கொள்வதற்காக, ஒரு முஸ்லிம் உளூவின் சட்டதிட்டங்களை நன்கு அறிந்திருக்க வேண்டும்.  அனைத்து உறுப்புக்களையும் பூரணமாக சரிவர மும்மூன்று முறைகள் கழுவிக் கொள்வதோடு தலையையும் இரு காதுகளையும் சேர்த்து ஒரு முறை நீரினால் மஸஹ் செய்ய வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“எவரொருவர் அல்லாஹ் ஏவியவாறு உளூவை பூரணமாக செய்கின்றாரோ அது அவருக்கு ஜங்கால தொழுகைக்கு மத்தியில் இருக்கக்கூடிய (சிறு பாவங்களுக்கு) பரிகாரமாக அமையும்” (நஸஈ, இப்னு மாஜா)

3) உளூ செய்வதில் சந்தேகம் ஏற்படுவதும், ஒரு உறுப்பை மூன்று முறைகளுக்கு அதிகமாக கழுவியது என்பதில் தடுமாற்றமும்!

இவை ஷைத்தானின் ஊஷலாட்டங்களில் உள்ளவையாகும். நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு உறுப்பையும் மும்மூன்று முறைகளுக்கு அதிகமாக கழுவவில்லை. புகாரியில் வரக்கூடிய அறிவிப்பில்

“நபி (ஸல்) அவர்கள் மூன்று மூன்று முறை கழுவினார்கள்” என கூறப்பட்டிருக்கின்றது.

ஒரு முஸ்லிம் உளூ செய்ததன் பின்னால் ஷைத்தானின் ஊஷலாட்டங்களிலிருந்தும், சந்தேகங்களிலிருந்தும்  விடுபடவேண்டும், ஷைத்தானின் சூழ்ச்சியை விட்டு தவிர்ந்து கொள்வதற்காக மூன்று முறைகளுக்கு மேல் ஒவ்வொரு உறுப்பையும் கழுவுவதை விட்டு தவிர்ந்து கொள்ள வேண்டும்.

4) தண்ணீரை வீண் விரயம் செய்வது!

விண் விரயம் செய்வதென்பது இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட விடயமாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

“நீங்கள் வீண் விரயம் செய்ய வேண்டாம்; நிச்சயமாக அவன் (அல்லாஹ்) வீண் விரயம் செய்கின்றவர்களை விரும்பமாட்டான்”

உளூ செய்யும் பொழுது நீரை தேவையான அளவிற்கு உபயோகித்து தனது உறுப்புக்களை கழுவிக்கொள்ள வேண்டும். தேவைக்கு அதிகமாக நீரை உபயோகித்து வீண் விரயம் செய்யக் கூடாது.

ஸஃது (ரழி) அவர்கள் உளூ செய்கின்ற பொழுது நபி (ஸல்) அவர்கள் அவரை கடந்து சென்றார்கள். நபி (ஸல்) அவர்கள் அவருக்கு கூறினார்கள்:

“நீரை வீண் விரயம் செய்ய வேண்டாம் என்றார்கள். அப்பொழுது ஸஃது (ரழி) அவர்கள், “நீரிலும் வீண் விரயம் உண்டா?” என்று கேட்க, நபியவர்கள், “ஆமாம் உண்டு!  நீ ஓடுகின்ற ஆற்றில் இருந்தாலும் அதிலும் வீண் விரயம் உண்டு” என்றார்கள்” (ஆதாரம்: அஹ்மத்)

5) மல சல கழிப்பிடங்களில் அல்லாஹ்வின் பெயர் கூறுவதும். அல்லாஹ்வின் பெயர் எழுதப்பட்டவற்றை அங்கு சுமந்து செல்வதும்!

இவை செய்வது கூடாத விடயமாகும். ஒரு முஸ்லிம் இவற்றிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும்.

இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

நபி (ஸல்) அவர்கள் சிறுநீர் கழிக்கும் பொழுது ஒரு மனிதர் அவருக்கு ஸலாம் சொல்ல நபியவர்கள் அவருக்கு பதில் கூறவில்லை! (ஆதாரம்: முஸ்லிம்)

இந்த ஹதீஸிலிருந்து ஸலாத்துக்கு பதில் கூறுவதென்பது அல்லாஹ்வின் பெயரை கூறுவதாகும் என்பதனால் நபிகளார் (ஸல்) பதிலழிக்கவில்லை என்பதை அறியலாம்.

6) தலையை ஒரு முறையை விட அதிகமாக மஸஹ் (நீரினால் தடவுவது) செய்வது!

இது நபி (ஸல்) அவர்கள் உளூ செய்ததிற்கு மாற்றமான முறையாகும். நபி (ஸல்) அவர்களது வழிகாட்டலில் இதனை காண முடியாது. காதின் மீது தனது இரு பெருவிரலையும் வைத்து ஆள்காட்டி விரல்கள் தலை முடியியில் படுமாறு இரண்டு கைகளாலும் தலையின் முன்பகுதியிலிருந்து பின்பகுதிவரை கொண்டு சென்று அவ்வாறே ஆரம்பித்த இடம் வரை கொண்டு வருவதே தலையை மஸஹ் செய்யும் முறையாகும். இதற்கு மாற்றமாக  மூன்று முறை தலையின் முற்பதியை நீரினால் தடவுவது (மஸஹ்) செய்வது, நபி (ஸல் அவர்களின் வழிமுறைக்கு மாற்றமானதாகும்.

அலி (ரழி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் உளூ செய்த முறையை பற்றி குறிப்பிடும் பொழுது, “தலையை ஒரு தடவை மஸஹ் செய்தார்கள்( நீரினால் தடவினார்கள்” .(ஆதாரம்: அபூதாவூத், திர்மிதி, நஸாஈ)

7) பிடரியை மஸஹ் செய்வது!

இது சிலரிடத்தில் பரவலாக காணக்கூடிய தவறாகும். தலையை மஸஹ் செய்ததன் பின்னால் தலையின் இறுதிப் பகுதியாகிய பிடரியை நீரினால் மஸஹ் செய்கின்றனர். இதனை மார்க்க அறிஞர்கள், ‘இஸ்லாத்தில் புதிதாக நுழைவிக்கப்பட்டவை” என்கின்கின்றார்கள். இதனை பற்றி வரக்கூடிய அறிவிப்புக்கள் இட்டுக்கட்டப்பட்டவையாகும். மேலும் மிக மிகப் பலவீனமானதும் ஆகும். இவற்றில் மிகவும்  கவனமாகவும் பேனுதலாகவும் இருப்பதோடு, மார்க்க விடயத்தில் அதிகரித்து செய்வதனை விட்டும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

8) காலுறையை மஸஹ் செய்யும் பொழுது அதனது கீழ்பகுதியை மஸஹ் செய்தல்!

இஸ்லாம் தொழுகைக்கு உளூவை கடமையாக்கியிருக்கின்றது. உளூ செய்யக்கூடிய சில நேரத்தில் காலை கழுவுவதற்கு பகரமாக அதனை மஸஹ் செய்யலாம். (நீரினால் தடவ வேண்டும்). உதாரணமாக காலுறை அணிந்த நிலையில்!

இந்நேரத்தில் காலுறையின் மேற்குதியையே மஸஹ் செய்ய வேண்டும். இதற்கு மாற்றமாக மக்கள் அறியாமையினால் அல்லது பிழையாக காலின் கீழ்பகுதியை மஸஹ் செய்கின்றனர். இது முற்றிலும் தவறான காரியமாகும்.

முஃகியரா இப்னு சுஃபா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

“நபி (ஸல்) அவர்கள் காலின் மேற்பகுதியை மஸஹ் செய்வதனை நான் கண்டேன்” (ஆதாரம்: அஹ்மத், அபூதாவூத், திமிதி)

அலி (ரழி) அவர்கள் கூறினார்கள்:

“இஸ்லாமிய மார்க்கம் பகுத்தறிவை முற்படுத்துவதாக இருந்தால் காலின் மேற்பகுதியை மஸஹ் செய்வதனை விட கீழ்பகுதியை மஸஹ் செய்வதே சரியானதாகும். நபி (ஸல்) அவர்கள் காலுறையின் மேற்பகுதியை மஸஹ் செய்வதையே நான் கண்டேன்” (ஆதாரம்: அபூதாவூத்)

இந்த ஹதீஸ் நபி (ஸல்) அவர்கள் காலுறையின் மேற்பகுதியையே மஸஹ் செய்திருக்கின்றார்கள் என்பதனையும், பகுத்தறிவு ரீதியாக பார்க்கின்ற பொழுது அதனது கீழ்பகுதியை  செய்ய வேண்டும்! ஆனாலும் மார்க்கத்தின் வழிகாட்டல் அதனது மேற்பகுதியை மஸஹ் செய்வதனால் அந்த அடிப்படையில் செய்து மார்க்க விடயங்களை கடைபிடிக்க வேண்டும்.

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed