சந்தோஷமாயிரு – கவிதை

அல்லாஹ்வின் நாமம் போற்றி…

சந்தோஷமாயிரு!!

– இறைவிசுவாசமும், நற்கருமங்களும் சிறந்த வாழ்க்கையின் சின்னங்கள். இரண்டையும் காலம் முழுவதும் கைவிடாதே!

– கல்வியைக் கைக்கொள், வாசிப்பை வளப்படுத்து. அது உன் கவளையைப் போக்கும்!

– பாவங்களுக்கு விடை கொடு, பாவமன்னிப்பைப் புதுப்பித்துக் கொள்.. அவை உன் வாழ்க்கைக்கு ஒளியூட்டும் ஊடகங்கள்!

– அல்குர்ஆனின் வரிகளை ஆழ்ந்து கவணி. இறைஞாபகம் இறுதி விரை தொடரட்டும்!

– மனிதர்களோடு மனம் மங்காது நடந்து கொள், உன் உள்ளம் அமைதி பெரும்!

– வீரத்தை உன் நெஞ்சிலே விதைத்துக் கொள், கோழைத்தனம் உன்னைக் கொடுமைப்படுத்த வேண்டாம். வீரம் உள்ளத்தை வளப்படுத்தும்!

– போட்டியும் பொறாமையும், நயவஞ்சகமும், நானென்ற அகங்காரமும் அகத்து நோய்கள். அவற்றை உள்ளத்திலிருந்து உறித்தெடுத்து விடு!

– காயம் தரும் கவளையும், வாழ்க்கையின் வசந்தங்களை சாகடிக்கும் அதிருப்தியும் களையப்பட வேண்டிய களைகள். பயன் தரும் செயல்களில் கவணம் கொள்!

– உனக்கு மேலே உள்ளவர்களை ஒரு போதும் பாராதே! உனக்குக் கீழே ஓராயிரம் பேருண்டு. அவர்களை நினைத்து அமைதி கொள்!

– கீழ்த்தர உணர்வுகளுக்கும், கெட்ட சிந்தனைகளுக்கும் இடம் கொடாதே. மோசமான கற்பனைகளை முளையிலேயே கிள்ளிவிடு!

– கோபப்படாதே! பொறுமையைக் கைக் கொள்! அந்தோ வாழ்க்கையின் இறுதி வினாடிகள் எம்மை அழைக்கின்றன!

– நீங்கும் செல்வத்தை நினைத்து நிம்மதியாயிரு! ஏழ்மை வந்துவிடும் என ஒருபோதும் அஞ்சாதே. அல்லாஹ்வின் மீது தவக்குல் வை!

– நீங்கும் பிரச்சினைகளுக்காய் நித்தமும் அழாதே! வாழ்க்கையின் வரம்புகளில் அவ்வப்போது முளைக்கும் துன்பங்களை துச்சமாய் மதி!

– வாழ்க்கையை எளிமையாக்கு! உலக வாழ்க்கையின் வசந்தங்களைத் தேடித் தேடி ஒருபோதும் அலையாதே. அது உன்னை சிறுமைப் படுத்தும்!

– படாடோபம் உன்னை பரிதவிக்க வைக்கும். உன் ஆன்மாவை அவதிக்குள்ளாக்கும்!

– கடந்த காலத்தை நீதியின் தராசில் நிறுத்துப்பார். உன்னை நீயே அறிந்து கொள்வாய்!

– கரைதட்டிய துன்பங்களோடு உன்னுடன் உறவாடும் அருட்கொடைகளை ஒப்பிட்டுப்பார். உன்வாழ்க்கையின் அஸ்தமனங்களை விட, விடியல்களே அதிகமாயிருக்கும்!

– உன்னை நோக்கி வந்த சொல்லம்புகளை ஓரங்கட்டு. அவை சொந்தக்காரனைத்தானே சென்றடையும். உன்னை அது ஒருபோதும் ஊனப்படுத்தமாட்டாது.

– உன் சிந்தனையைச் செழுமையாக்கு. அருளும், அறிவும், சீரும், சிறப்பும், வெற்றியும், வீரமும் உன் சிந்தனைக்கு விருந்தளிக்கட்டும்.

– யாரிடமிருந்தும் நன்றியை எதிர்பார்க்காதே! பகட்டுப் பாராட்டுக்கள் உன்னை ஊனப்படுத்த வேண்டாம். அல்லாஹ்வின் அருள் வேண்டியே அமல்களனைத்தும் ஆர்முடுகளாகட்டும்!

– நற்கருமங்களை நாற்படுத்தாதே. இன்றே செய்! நாளை என்பது நமக்கு வேண்டாம்!

– உன் தகுதிக்கேற்ப காரியம் கொள். உன் சாந்திக்கு பச்சைக் கொடிகாட்டும் சங்கதிகளில் சங்கமமாகு!

– அல்லாஹ்வின் அருட்கொடைகளை எண்ணிப்பார். நன்றி செலுத்து. நன்றிமறவா நாட்டம் கொள்!

– அல்லாஹ் உனக்களந்த செல்வம், செழிப்பு, குடும்பம், குதூகழிப்பு, ஆரோக்கியம் அனைத்திலும் திருப்தி கொள்!

– அறிந்தோர், அறியாதோர் அனைவரோடும் அன்புடன் நட. அக்கம் பக்கத்து வீட்டாரை அரவனைத்து நட. ஏழைகளின் பக்கம் கொஞ்சமேனும் திரும்பிப்பார்.

உன் இருட்டு வாழ்க்கைக்கு விடை கொடு! அந்தோ சந்தோஷம் சங்கமமாகும் சமயம் உனை அழைக்கின்றது. நாளைய திங்கள் சந்தோஷக் கதிர்களோடு உதிக்கட்டும். அவை உன் கறுப்புப் பக்கத்தைத் துடைத்து வென்மையாக்கும்!!

ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாய் வளரும் என்பார்கள்! அஃதே பிறர் உள்ளத்தில் சந்தோஷத்தை விதை. உன் உள்ளத்தில் அது தனாய் ஊற்றெடுக்கும்!

உலகில் சந்தோஷத்தையும், நிம்மதியையும் படைக்க நாமும் புறப்படுவோமா? நிச்சயமாக வல்ல ரஹ்மான் நமக்குத் துணை நிற்பான்.

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

By மௌலவி M.J. முஹம்மது லாஃபிர் மதனி (அபூ அரீஜ்)

அழைப்பாளர், அல்கப்ஜி தஃவா சென்டர், சவூதி அரேபியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed