வட்டி சார்ந்த வங்கிகள், நிதி நிறுவனங்களில் பணி புரியலாமா?

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது.

வட்டி குறித்த இறைவனின் எச்சரிக்கைகள்: –

“யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்: இதற்குக் காரணம் அவர்கள், ‘நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே’ என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்; ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது – என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.

அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை” (அல்-குர்ஆன் 2:275-276)

“ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். இவ்வாறு நீங்கள் செய்யவில்லையென்றால் அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)- நீங்கள் தவ்பா செய்து (இப்பாவத்திலிருந்தும் ) மீண்டுவிட்டால், உங்கள் பொருள்களின் அசல் – முதல் – உங்களுக்குண்டு; (கடன்பட்டோருக்கு) நீங்கள் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்” (அல்-குர்ஆன் 2:278-279)

“வட்டி வாங்குவது அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தும், அவர்கள் அதை வாங்கி வந்ததன் (காரணமாகவும்,) தவறான முறையில் அவர்கள் மக்களின் சொத்துகளை விழுங்கிக் கொண்டிருந்ததன் (காரணமாகவும், இவ்வாறு தண்டனை வழங்கினோம்), இவர்களில் காஃபிரானோருக்கு (மறுமையில்) நோவினை செய்யும் வேதனையையும் நாம் சித்தப்படுத்தியுள்ளோம்” (அல்-குர்ஆன் 4:161)

“ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்; இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக் கொண்டால்) வெற்றியடைவீர்கள். தவிர (நரக) நெருப்பிற்கு அஞ்சுங்கள், அது காஃபிர்களுக்காக சித்தம் செய்து வைக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வுக்கும், (அவன்) தூதருக்கும் கீழ்படியுங்கள்; நீங்கள் (அதனால் அல்லாஹ்வினால்) கிருபை செய்யப்படுவீர்கள்” (அல்-குர்ஆன் 3:130-132)

“(மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை; ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது அல்லாஹ்விடத்தில் பெருகும். அவ்வாறு கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள்” (அல்-குர்ஆன் 30:39)

வட்டி குறித்து நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைகள்: –

அலி (ரலி) அவர்கள் கூறினார்கள் : ‘வட்டி வாங்குபவர்கள், வட்டி கொடுப்பவர்கள், அதை எழுதுபவர்கள் மற்றும் ஸதகா கொடுக்க மறுப்பவர்கள் – இவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். ஆதாரம் : திர்மிதி.

வட்டியையே வருவாயாகக் கொண்டிருக்கும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் போன்றவற்றில் பணி புரியலாமா?

பொதுவாக இஸ்லாமிய வங்கிகள் அல்லாத பிற வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் அனைத்தும் வட்டியையே பிரதான வருவாயாகக் கொண்டு இயங்குகின்றன என்பதை நாம் அறிவோம். நாம் வட்டி வாங்கவில்லை அல்லது கொடுக்கவில்லை என்றாலும் இதைச் செய்கின்ற நிறுவனங்களில் பணிபுரிவது என்பது இறைவனுடைய மற்றும் அவனது தூதர் (ஸல்) அவர்களுடைய மேற்கூறப்பட்ட கட்டளைகளுக்கு மாற்றமாக இத்தகைய வட்டி தொழிலில் செய்பவர்களுக்கு உடந்தையாக இருப்பது போலாகும். மேலும் ஒருவர் இறைவன் தடை செய்துள்ள காரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு துணை புரிந்தால் இறைக் கட்டளைகளை மீறியதில் அவர்கள் புரிந்த குற்றத்தில் துணை புரிந்தவருக்கும் பங்குண்டு என்பதை நபிமொழிகளின் மூலம் அறிய முடிகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : –

“வட்டி வாங்கிப் புசிப்பவன், அதனைப் புசிக்க வைப்பவன், அதற்காக (கணக்கு) எழுதுபவன், அதற்கு சாட்சியம் கூறும் இருவர் ஆகியேரைப் பெருமானார் (ஸல்) அவர்கள் சபித்துவிட்டு, அத்தனை பேரும் (குற்றத்தில்) சமமானவர்” (என்று கூறினார்கள்). அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்.

இமாம் நவவி (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸ் குறித்து விளக்கமளிக்கையில், “இது வட்டி சம்பந்தமான ஒப்பந்தத்தை எழுதுவதற்கோ அல்லது அதற்கு சாட்சியாக இருப்பதற்கோ தடை செய்யப்பட்டதற்கான ஆதாரமாகும். மேலும் ‘பிறர் தவறான செயல்களைச் செய்யும் போது அவர்களுக்கு உடந்தையாக இருப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளதும்’ இதில் அடங்கும்” (என்று கூறினார்கள்). அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

எனவே வட்டி சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் போது ஏதாவது ஒருவகையில் இறைவனால் தடை செய்யப்பட்ட அந்த வட்டிக்கு உதவிடும் வகையில் பணிபுரிய நேரிடும். ஆனால் எவரேனும் இறைவன் மீது ஆதரவு வைத்தவர்களாக இந்த வட்டி சம்பந்தமான தொழில்களை தவிர்ந்திருப்பதற்காக முயலுவாரானால் அல்லாஹ் அவருக்கு தக்க ஒரு வழியை ஏற்படுத்தி தருவான்.

அல்லாஹ் கூறுகிறான்: –

“எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கின்றாரோ, அவருக்கு அவன் (தக்க ஒரு) வழியை உண்டாக்குவான்” (அல்-குர்ஆன் 65:2)

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...
4 thoughts on “வட்டி சார்ந்த வங்கிகள், நிதி நிறுவனங்களில் பணி புரியலாமா?”
  1. basically i am commerce graduate.i am working in one of the life insurance company,i have monthly salary basis.can i continue this job or resign because that job is haram or halal i dont know.which kind of job can i select my future career so,please give me clearly explain.

    1. @alaudeen,

      சகோதரரே!

      இஸ்லாத்தில் வட்டி வாங்குவது எப்படி பாவமான செயலோ அது போலவே வட்டி கொடுப்பதும் அதற்கு கணக்கு எழுதுவதும் மற்றும் அதற்கு சாட்சியாளராக இருப்பதுவும். இதை பின்வரும் ஹதீஸ் நமக்கு தெளிவு படுத்துகின்றது.

      நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : –

      “வட்டி வாங்கிப் புசிப்பவன், அதனைப் புசிக்க வைப்பவன், அதற்காக (கணக்கு) எழுதுபவன், அதற்கு சாட்சியம் கூறும் இருவர் ஆகியேரைப் பெருமானார் (ஸல்) அவர்கள் சபித்துவிட்டு, அத்தனை பேரும் (குற்றத்தில்) சமமானவர்” (என்று கூறினார்கள்). அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்.

      மேலும் இஸ்லாத்தில் சூதாட்டம் முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது. அல்லாஹ் கூறுகின்றான்:

      2:219 (நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்: ‘அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது’

      5:90 ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் – அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.

      அன்பு சகோதரரே!

      லைஃப் இன்சூரன்ஸ் என்பது முழுக்க முழுக்க சூதாட்டம் மற்றும் வட்டி அடிப்படையிலான தொழில் ஆதலால் மேலும் இவ்விரண்டுமே இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்டுள்ளதால் உண்மையான ஒரு முஃமின் இவற்றிலிருந்து முழுமையாக தவிர்ந்திருக்க வேண்டும்.

      அல்லாஹ்வின் மீது தவக்கல் வையுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு ஒரு அழகிய மாற்று வழியைக் காண்பிப்பான். ஏனென்றால் அல்லாஹ்வே எல்லாவற்றுக்கும் போதுமானவனாக இருக்கின்றான்.

    1. @zeenath,

      ‘ஸலாத்துல் அவ்வாபீன்’ என்பது ‘லுஹா தொழுகை’ என்றும் அறியப்படுகின்றது. இத்தொழுகையை சூரியன் உதித்தற்குப் பிறகு லுஹருடைய தொழுகையின் நேரத்திற்கு முன்பாக தொழவேண்டும். இதை 2 அல்லது 4 அல்லது 6 அல்லது 8 ரக்அத்துகளாக தொழலாம். பகற்பொழுது நன்றாக சூடாகும் வரை காத்திருந்து (லுஹருக்கு முன்) இத்தொழுகையைத் தொழுவது சிறந்தது.

      (காலைநேரத்தில்) நபி(ஸல்) அவர்கள் குபாவாசிகளிடம் (புறப்பட்டு) வந்தபோது அவர்கள் தொழுவதை கண்டார்கள். அவ்வாபீன்களின் (இறைவனிடம் மீளுபவர்கள்) தொழுகை வெப்பமேறிய மணல் அதனால் ஒட்டக குட்டிகளின் கால்கள் சுட்டெரிக்கும் உள்ள நேரமேயாகும் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஜைதுபின் அர்கம் நூல்: முஸ்லிம், திர்மிதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed