தடை செய்யப்பட்ட திருமணங்கள்

‘ஷிஃகார்’ திருமணம் தடை செய்யப்பட்டதாகும்!

மணக்கொடையின்றி பெண் கொடுத்துப் பெண் எடுக்கும் திருமணத்திற்கு “ஷிஃகார்” எனப்படும்.

இத்தைகைய திருமணம் செல்லாததாகும். காரணம் என்னவெனில் பெண் கொடுத்து பெண் எடுக்கும் போது மணப்பெண்களுக்கு முறைப்படி சேரவேண்டிய மஹ்ர், இத்தகைய திருமணங்களின் மூலம் கிடைக்கப்பெறுவதில்லை! இது அந்தப் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகவே இஸ்லாம் பார்க்கின்றது. போலியான பெண்ணுரிமைப் பேசுபவர்கள் இஸ்லாம் பெண்களுக்கு எந்த அளவிற்கு உரிமை வழங்கியிருக்கியிருக்கிறது என்பதை இந்த ஒரு விசயத்திலிருந்தே தெரிந்துக்கொள்ளலாம்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“ஷிஃகார்” முறைத்திருமணத்திற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள்”.

ஒருவர் மற்றொருவரிடம் “நான் என் மகளை உனக்குத் திருமணம் செய்து தருகிறேன்; நீ உன் மகளை எனக்குத் திருமணம் செய்து தர வேண்டும்” என்று (முன் நிபந்தனை) விதித்து மணமுடித்து வைப்பதற்கே “ஷிஃகார்” எனப்படும். இதில் இரு பெண்களுக்கும் “மஹ்ர்” (மணக்கொடை) இராது.  ஆதாரம்: முஸ்லிம்

மணப்பெண்ணிடமிருந்து கைக்கூலி என்னும் வரதட்சனையைப் பெற்று நடத்தப்படும் திருமணங்கள்!

ஒரு பெண்ணிற்கு அல்லாஹ்வினால் கட்டளையிடபப்பட்ட, முறைப்படி கிடைக்கப்பெற வேண்டிய ‘மஹ்ர்’ எனும் மணக்கொடை, ‘ஷிகார்’ திருமணங்களின் மூலம் கிடைக்காது என்பதால் இந்த திருமணமே தடை செய்யப்பட்டிருக்கின்றது என்றால், மணமகளிடமே பிச்சையெடுக்கின்ற வகையினிலே பொண்ணாகவோ, பொருளாகவோ வரதட்சனை என்னும் கைக்கூலி பெற்று நடைபெறும் திருமணம் எந்த வகையில் ஏற்புடையதாகும்? என்பதை சிந்தியுங்கள் சகோதர, சகோதரிகளே!

நம்மவர்களில் சிலர் பெண் எடுத்து பெண் கொடுக்கும் போது, நீங்களும் வரதட்சனைக் கொடுக்கத் தேவையில்லை! அது போல் நாங்களும் கொடுக்கத் தேவையில்லை என்ற நிபந்தனையுடன் திருமண ஒப்பந்தம் செய்கின்றனர். இது ஷிகார் திருமணத்தை விட மோசமானது. மஹர் என்பது பெண்ணுக்கு சேரவேண்டிய பொருள். அதற்கு வழியில்லாமல் இருப்பதால் தான் ஷிஹார் திருமணமே தடை செய்யப்பட்டுள்ளது எனில் இத்தகைய திருமணமும் எந்த வகையில் சேர்ந்தது என்பதை நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்!

அல்-முத்ஆ (தவனைத் திருமணம்) தடைசெய்யப்பட்டதாகும்!

மக்கா வெற்றிக்கு முன்னர் போர்களுக்குச் செல்கின்ற வேளையிலே தவனை முறையில் ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் என ஒப்பந்தத்தோடு செய்யப்படுகின்ற ‘அல்-முத்ஆ’ திருமணம் நடைமுறையில் இருந்து வந்தது. ஆனால் மக்கா வெற்றியின் போது அந்த திருமணம் முற்றாக தடை செய்யப்பட்டுவிட்டது.

சப்ரா பின் மஅபத் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

“நான் (மக்கா வெற்றியின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்கள், “மக்களே! நான் “அல்முத்ஆ” (தவணை முறைத்) திருமணம் செய்துகொள்ள உங்களுக்கு அனுமதியளித்திருந்தேன். (இப்போது) அல்லாஹ் அத்திருமணத்திற்கு மறுமை நாள்வரைத் தடை விதித்துவிட்டான்.  எனவே, “அல்முத்ஆ” திருமணம் செய்த பெண்ணைத் தம்மிடம் வைத்திருப்பவர், அவளை அவளது வழியில் விட்டுவிடட்டும். அவளுக்கு நீங்கள் (மணக்கொடையாகக்) கொடுத்திருந்த எதையும் (திரும்ப) எடுத்துக்கொள்ள வேண்டாம்” என்றார்கள். ஆதாரம்: முஸ்லிம்.

மக்கா வெற்றிக்குப் பின்னர் நடைபெற்ற போர்களில் அல்-முத்ஆ திருமணத்திற்கு தடை இருந்தது!

அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் போர்நாளில் “அல்முத்ஆ” (தவணை முறைத்) திருமணத்திற்கும் நாட்டுக் கழுதைகளின் இறைச்சியைப் புசிப்பதற்கும் தடை விதித்தார்கள். ஆதாரம்: முஸ்லிம்

மணமகள் அனுமதியின்றி நடத்தப்படும் கட்டாயத் திருமணம்!

அகிலங்களின் ஏக இறைவனாகிய அல்லாஹ் கூறுகின்றான்:

“நம்பிக்கை கொண்டவர்களே! பெண்களை (அவர்கள் மனப் பொருத்தம் இல்லாத நிலையில்) நீங்கள் பலவந்தப்படுத்தி அனந்தரமாகக் கொள்வது உங்களுக்கு கூடாது;’ (அல்-குர்ஆன் 4:19.)

ஜாஹிலிய்யாக் காலத் திருமணங்கள்!

நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்: அறியாமைக் காலத்தில் நான்கு வகைத் திருமணங்கள் நடைபெற்றன:

முதல் வகை: இன்று மக்களிடையே வழக்கிலுள்ள திருமணத்தைப் போன்றதாகும்: ஒருவர் மற்றொருவரின் பொறுப்பிலுள்ள ஒரு பெண்ணையோ அல்லது அவரின் மகளையோ பெண் பேசி ‘மஹ்ர்’ (விவாகக் கொடை) கொடுத்து மணந்து கொள்வார்.

இரண்டாம் வகைத் திருமணம்: ஒருவர் தம் மனைவியிடம், ‘நீ உன் மாதவிடாயிருந்து தூய்மையடைந்தவுடன் இன்ன பிரமுகருக்குக் தூதனுப்பி (அவர் மூலம் கருத்தரித்துக் கொள்வதற்காக) அவருடன் உடலுறவு கொள்ளக் கேட்டுக்கொள்!’ என்று கூறிவிட்டு, அவளுடன் உடலுறவு கொள்ளாமல் அவளைவிட்டு அந்தக் கணவர் விலம் இருப்பார்.  அவள் உடலுறவுகொள்ளக் கேட்டுக்கொண்ட அந்த மனிதர் மூலம் அவள் கருவுற்றிருப்பது தெரிகிறவரை கணவர் அவளை ஒருபோதும் தீண்டமாட்டார். அந்தப் பிரமுகர் மூலம் அவள் கருத்தரித்துவிட்டாளெனத் தெரியவந்தால், விரும்பும்போது அவளுடைய கணவர் அவளுடன் உடலுறவு கொள்வார். குலச் சிறப்புமிக்க குழந்தை பிறக்க வேண்டுமென்ற (அற்ப) ஆர்வத்தினாலேயே இப்படிச் செய்து வந்தனர். இந்தத் திருமணத்திற்கு ‘நிகாஹுல் இஸ்திப்ளாஉ’ (விரும்பிப் பெறும் உடலுறவுத் திருமணம்) என்று பெயர்.

மூன்றாம் வகைத் திருமணம்: பத்துப்பேருக்குக் குறைவான ஒரு குழுவினர் ஓரிடத்தில் ஒன்றுகூடி அவர்கள் அனைவரும் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வார்கள். அவள் கருத்தரித்து பிரசவமாம் சில நாள்கள் கழியும்போது, அவர்கள் அனைவரையும் அவள் தம்மிடம் வரச் சொல்வாள். அவர்களில் எவரும் மறுக்க முடியாது. அனைவரும் அவளிடம் ஒன்று கூடுவார்கள். அப்போது அவர்களிடம் ‘நீங்கள் செய்தது உங்களுக்கே தெரியும். (இப்போது) எனக்குக் குழந்தை பிறந்துவிட்டது” என்று கூறிவிட்டு (அவர்களில் ஒருவரை நோக்கி) ‘இவன் உங்கள் மகன், இன்னாரே!” என்றே விரும்பிய ஒருவரின் பெயரைi அவள் குறிப்பிடுவாள். அவ்வாறே குழந்தை அந்த நபருடன் இணையும். அவரால் அதனை மறுக்க முடியாது.

நான்காம் வகைத் திருமணம்: நிறைய மக்கள் (ஓரிடத்தில்) ஒன்று கூடி ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வார்கள். தன்னிடம் வரும் யாரையும் அவள் தடுக்கமாட்டாள். இந்தப் பெண்கள் விலைமாதுகள் ஆவர். அவர்கள் தங்களின் வீட்டு வாசலில் பல அடையாளக் கொடிகளை நட்டு வைத்திருந்தனர்.  அவர்களை விரும்பியவர்கள் அங்கே செல்வார்கள். இந்தப் பெண்களில் ஒருத்திக்குக் கருத்தரித்து குழந்தை பிறந்தால், அவளுடன் உடலுறவு கொண்ட அனைவரும் அவளுக்காக ஒன்றுகூட்டப்படுவார்கள். அங்க அடையாளங்களை வைத்து தந்தை – பிள்ளையைக் கண்டறியும் நிபுணர்களை அழைத்து வருவார்கள். தாம் (தந்தையெனக்) கருதிய ஒருவனுடன் அந்தக்குழந்தையை அந்த நிபுணர்கள் இணைத்துவிடுவார்கள். அந்தக் குழந்தை அந்தத் தந்தையிடம் சேர்க்கப்பட்டு ‘அவரின் மகன்’ என்று பெயர் சொல்லி அழைக்கப்பட்டு வந்தது.

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed