ஈஸா நபி உயிரோடு இருக்கிறார்களா?

ஈஸா நபி உயிரோடு திரும்பவும் இவ்வுலகிற்கு வருவார்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஈஸா (அலை) அவர்கள் வானத்தில் உயிரோடு இருக்கிறார் என்பது கிறிஸ்தவர்களின் கொள்கை. முஸ்லிம்களின் கொள்கை கிடையாது. நீங்கள் குறிப்பிட்டிருக்கிற வசனம் (5:117) ஈஸா (அலை) அவர்கள் இறந்து விட்டதை தெளிவாக விளக்கும் வசனமாகும்.

ஸஹீஹூல் புகாரி, கிதாபு தப்ஸீர், அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி): –

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: “நான் ஹவ்லுல் கவ்ஸர் என்னும் தடாகத்தில் நின்று கொண்டு இருப்பேன். அப்போது சிலர் என் முன் காணப்படுவார்கள். அவர்களை மலக்குகள் நரகத்தின் பக்கம் இழுத்துச் செல்வார்கள்; அப்போது நான் அவர்களைப் பார்த்துக் கூறுவேன் ‘அஸ்ஹாபி’ ‘அஸ்ஹாபி’ என்று கூறுவேன்; அப்போது மலக்குகள் என்னைப் பார்த்துக் கூறுவார்கள் ‘உங்கள் மரணத்திற்குப் பிறகு இவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று உங்களுக்குத் தெரியாது; இவர்கள் இஸ்லாத்தை விட்டு விட்டார்கள்’. அப்போது நான் அவர்களைப் பார்த்துக் கூறுவேன் ‘அல்லாஹ்வுடைய நல்லடியாரான ஈஸா நபி (அலை) கூறியதைப்போன்று (நீங்கள் கூறிய வசனம் 5:117 ஐ கூறுகிறார்கள்). நான் அந்த மக்களோடு இருந்தவரை நான் அந்த மக்களுக்கு சாட்சியாக இருந்தேன். ஆனால் நீ என்னை மரணிக்கச் செய்த பிறகு நீ தான் அவர்களை கண்காணிப்பவனாக இருந்தாய்’.

எந்த வசனத்தின் அடிப்படையில் நீங்கள் ஈஸா நபி (அலை) வானத்தில் உயிரோடு இருக்கிறார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களோ அதே வசனத்தின் அடிப்படையில் நபி (ஸல்) அவர்கள் உயிரோடு இருக்கிறார் என்று நம்ப வேண்டும். உங்கள் பதில் என்ன? நபி (ஸல்) அவர்கள் பொய் கூறுவார்களா? நவூது பில்லாஹ்! 25 வசனங்கள் உள்ளன ஈஸா (அலை) அவர்கள் மரணத்திற்கு. இது இறைவனுக்கு இணை வைக்கும் செயல்! நபி (ஸல்) அவர்களை இழிவு படுத்துவது! (நவூது பில்லாஹ்)

ஜாஃபர்லாகான் யாஹூ மின் அஞ்சல் வழியாக!

பதில்: –

ஈஸா (அலை) அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா? அவர்கள் திரும்பவும் இவ்வுலகிற்கு வருவார்களா?

நீங்கள் எடுத்து வைக்கும் வாதங்கள்: –

1) ஈஸா நபி (அலை) வானத்தில் உயிரோடு இருக்கிறார் என்பது கிறிஸ்தவர்களின் கொள்கை.

2) உங்களது கட்டுரையில் குறிப்பிட்டிருக்கின்ற வசனம் ஈஸா (அலை) அவர்கள் இறந்து விட்டதை தெளிவாக விளக்குகிறது.

3) மறுமையில் ஈஸா (அலை) அவர்கள் கூறும் அதே வசனத்தை நபி (ஸல்) அவர்களும் கூறுவார்கள். எனவே நபி (ஸல்) அவர்களைப் போல் ஈஸா (அலை) அவர்களும் மரணித்து விட்டார்கள்.

4) ஈஸா (அலை) அவர்கள் மரணித்து விட்டார்கள் என்பதற்கு 25 வசனங்கள் ஆதாரமாக உள்ளன.

5) ஈஸா (அலை) அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்று நம்புவது இணை வைக்கும் செயல்! நபி (ஸல்) அவர்களை இழிவு படுத்தும் செயல்!.

அன்பு சகோதரரே,

நாம் உங்களுடைய விவாதங்களை ஒவ்வொன்றாக ஆராய்வோம்: –

1) ஈஸா நபி (அலை) வானத்தில் உயிரோடு இருக்கிறார் என்பது கிறிஸ்தவர்களின் கொள்கை:-

எந்த ஒரு விசயத்தையும் குறிப்பாக இஸ்லாமிய மார்க்கத்தில் ஒன்றை ஆய்வு செய்யும் போது அது குர்ஆன் மற்றும் ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களுக்கு முரணில்லாமல் இருக்கிறதா என பார்த்துக் கொள்ள வேண்டும். உங்களுடைய கருத்துப்படி ஈஸா நபி (ஸல்) அவர்கள் மரணமடைந்து விட்டார்கள் என்றால் அதை அல்லாஹ்வோ அல்லது அவனுடைய தூதர் (ஸல்) அவர்களோ கூறியிருக்க வேண்டும்.

ஆனால் திருமறை வசனங்களும் மற்றும் ஏராளமான ஸஹீஹான ஹதீஸ்களும் உங்களுடைய கருத்துக்கு மாற்றமான கருத்தைக் கூறுவதைக் காண முடிகிறது. ஈஸா (அலை) அவர்கள் கொல்லப்படவேயில்லை என்பது தான் முஸ்லிம்களின் நம்பிக்கை. இதையே திருமறையும் தெளிவாக எடுத்துரைக்கிறது.

மாறாக ஈஸா (அலை) அவர்கள் கொல்லப்பட்டு சிலுவையிலும் அறையப்பட்டார்கள் என்பது கிறிஸ்தவர்களுடையதும் யூதர்களுடையதும் ஆகும். இதற்காகத்தான் அல்லாஹ் அவர்களை சபித்ததாகக் கூறுகிறான்.

அல்லாஹ் தன் திருமறையில் அத்தியாயம் 4, வசனங்கள் 157-158 ல் கூறுகிறான்: –

மேலும் அவர்கள் தம் நிராகரிப்பி(ல் எல்லை மீறிவிட்டத)னாலும் மர்யம் மீது பெரியதொரு அவதூறை அவர்கள் கூறியதாலும், அல்லாஹ்வுடைய தூதரும் மர்யமின் மகனுமான ஈஸா – மஸீஹை நாங்கள் தாம் கொன்றோம். என அவர்கள் கூறியதாலும் (அவர்களை நாம் சபித்தோம்). – உண்மையில் அவர்கள் அவரைக் கொலை செய்யவுமில்லை, அவரைச் சிலுவையில் அறையவுமில்லை. மாறாக, அவருடைய நிலைமை அவர்களுக்குச் சந்தேகத்துக்குரியதாக ஆக்கப்பட்டு விட்டது. மேலும், எவாகள் ஈஸா விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டார்களோ அவர்கள் இதுபற்றி சந்தேகத்திலே இருக்கின்றார்கள். யூகத்தைப் பின்பற்றுவதைத் தவிர இதுபற்றி வேறு எந்த அறிவும் அவர்களிடத்தில் இல்லை. நிச்சயமாக அவர்கள் அவரை – மஸீஹை – கொலை செய்யவேயில்லை. மாறாக அல்லாஹ் அவரைத் தன்பக்கம் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் வலிமை மிக்கவனும் நுண்ணறிவாளனுமாய் இருக்கின்றான். அல்-குர்ஆன் (4:157-158)

உங்களது அனைத்து சந்தேகங்களுக்கும் இந்த வசனம் மட்டுமே போதுமான விளக்கமாக இருக்கிறது.

மேலும் நபி (ஸல்) அவர்களின் ஸஹீஹான பல ஹதீஸ்கள் ஈஸா (அலை) அவர்கள் மறுமை நாள் வருவதற்கு முன்னால் இவ்வுலகின் இறுதிக் காலக் கட்டத்தில் இந்த உலகிற்கு இறங்கி வருவார்கள் என்றும், இறைவனுடைய சட்டத் திட்டங்களை நிலை நாட்டுவார்கள் என்றும் கூறுகிறது. இதுவே உண்மையான முஸ்லிம்களின் நம்பிக்கையாகும்.

மேலே குறிப்படப்பட்ட திருமறை வசனங்களான 4:157 மற்றும் 4:158 ல் இறைவன் திட்வட்டவாமகக் கூறுகிறான்: –

1) யூதர்கள் ஈஸா (அலை) அவர்களைக் கொல்லவும் இல்லை, சிலுவையில் அறையவும் இல்லை

2) ஈஸா (அலை) அவர்களைப் போன்ற ஒருவன் அவர்களுக்கு ஒப்பாக்கப்பட்டான்.

மேலும் இறைவன் அத்தியாயம் 4, வசனம் 159 ல் கூறுகிறான்: –

வேதம் அருளப்பட்டவர்களில் யாரும் அவர் (ஈஸா) மரணமாவதற்கு முன்னால் அவர் மீது நம்பிக்கை கொள்ளாமலிருக்க மாட்டார்கள். மேலும், மறுமை நாளில் அவர்களுக்கு எதிராக அவர் சாட்சி சொல்பவராய் இருப்பார்.

இந்த வசனம் மூலம் நாம் விளங்குவது என்னவென்றால் ‘வேதமுடையவர்களில் எவரும் ஈஸா (அலை) அவர்கள் மரணிப்பதற்கு முன்னர் அவர் மீது ஈமான் கொள்ளாமலிருப்பதில்லை’ என கூறுகிறது. இந்த வசனத்திலிருந்து ஈஸா நபி (அலை) அவர்கள் இன்னும் மரணமடையவில்லை என்றும் மீண்டும் இவ்வுலகத்திற்கு திரும்பி வருவார்கள் என்றும் நாம் அறிய முடிகிறது.

நிரந்தர மரணம் என்பது மனிதனுக்கு ஒரு முறை தான். இரண்டு தடவைகள் கிடையாது. அல்லாஹ் அனைத்திற்கும் ஆற்றலுடையவன், சக்தியுடையவன். அவனது ஆற்றலை யாரும் மறுக்க முடியாது. ஈஸா (அலை) அவர்களை தன் பால் உயர்த்திக் கொண்டதும், அவர்கள் இப்பூலகிற்கு இறங்கும் வரை ஈஸா (அலை) அவர்களை உயிரோடு வைத்திருப்பதும், மீண்டும் எல்லா மனிதர்களும் பார்க்கும் வகையில் உயிரோடே இறங்குவதும், உலக மகா கொடியவனான தஜ்ஜாலைக் கொல்வதற்கு வழங்கப்படும் சக்தியும் அல்லாஹ்வின் ஆற்றலுக்கான சான்றுகளேயாகும். நாம் எதையும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: –

என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! விரைவில் (உலக அழிவுக்கு முன்) மர்யமின் மகன் உங்களிடையே நேர்மையாகத் தீர்ப்பளிக்கும் நீதிபதியாக இறங்கவிருக்கிறார். அவர் சிலுவையை உடைப்பார்; பன்றியைக் கொல்வார்; ஜிஸ்யா (எனும் காப்பு) வரியை வாங்க மறுப்பார்; (இஸ்லாம் ஒன்றையே மக்களிடமிருந்து ஏற்பார்.) செல்வம் (பெரும்) வழிந்தோடும். எந்த அளவுக்கென்றால் அதை வாங்கிக் கொள்பவர் எவரும் இருக்க மாட்டார். அந்த நேரத்தில், ஒரேயொரு சஜ்தா (நெற்றி நிலத்தில் பட அல்லாஹ்வை வணங்குவது) இந்த உலகத்தையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்ததாக (மக்களின் பார்வையில்) ஆகி விடும்.

இந்த நபிமொழியை அறிவித்துவிட்டு அபூ ஹுரைரா(ரலி), வேதம் அருளப்பட்டவர்களில் யாரும் அவர் (ஈஸா) மரணமாவதற்கு முன்னால் அவர் மீது நம்பிக்கை கொள்ளாமலிருக்க மாட்டார்கள். மேலும், மறுமை நாளில் அவர்களுக்கு எதிராக அவர் சாட்சி சொல்பவராய் இருப்பார்’ (திருக்குர்ஆன் 04:159) என்னும் வசனத்தை நீங்கள் விரும்பினால் ஓதிக் கொள்ளுங்கள்’ என்று கூறினார்கள். ஆதாரம்: பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3448

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: –

எனக்கும் அவருக்கும் இடையில் வேறு எந்த நபியும் இல்லை; அதாவது ஈஸா (அலை) அவர் (வானத்திலிருந்து பூமிக்கு) இறங்குவார். அவரை நீங்கள் பார்க்கும் போது நீங்கள் (அவர் தான் ஈஸா {அலை} என) உணர்ந்து கொள்வீர்கள். (அவர்) நடுத்தர உயரத்திலும், செந்நிறமுடையவராகவும், இரண்டு இலேசான மஞ்சள் நிறமுள்ள ஆடையணிந்தவராகவும், ஈரமில்லாமல் இருப்பினும் நெற்றியிலிருந்து (வியர்வைத்) துளிகள் வழிவதைப்போன்றும் (காணப்படுவார்). அவர் இஸ்லாத்திற்காக மக்களிடையே போரிடுவார். சிலுவையை உடைத்தெறிவார்; பன்றிகளைக் கொல்லூர்; ஜிஸ்யா (என்னும் வரியை) நீக்குவார். அல்லாஹ் இஸ்லாத்தைத் தவிர அனைத்து மார்க்கங்களையும் அழித்து விடுவான். அவர் தஜ்ஜாலைக் கொல்லுவார்; இந்த உலகத்தில் நாற்பது வருடங்கள் வாழ்ந்து பின்னர் மரணமடைவார். முஸ்லிம்கள் அவருக்கு தொழுவிப்பார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), ஆதாரம்: ஸூனன் அபூதாவுத்.

மேலும் நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஒன்று அறிவிக்கிறது:

நபி (ஸல்) அவர்களுடைய சகோதரரும் நபியுமான மர்யமின் குமாரர் ஈஸா (அலை) மரணமடைந்தவுடன் மதினாவில் நபி (ஸல்) அவர்களின் அடக்கஸ்தலத்திற்கு அருகில் அடக்கம் செய்யப்படுவார்கள்.

எனவே மேற்கண்ட திருமறை வசனங்கள் மற்றும் நபிமொழிகள் அனைத்தும் பின்வருபவற்றை தெளிவாக விளக்குகின்றது:

– ஈஸா (அலை) அவர்கள் மரணமடையவில்லை

  • அல்லாஹ் அவரை உயர்த்திக் கொண்டான்

  • கியாமத் நாள் வருமுன்னர் மீண்டும் இப்பூலகிற்கு இறங்கி வருவார்கள்

  • இந்த உலகில் ஆட்சி செய்து நீதியை நிலைநாட்டி பின்னர் மரணமடைவார்கள்

2) உங்களது கட்டுரையில் குறிப்பிட்டிருக்கின்ற வசனம் ஈஸா (அலை) அவர்கள் இறந்து விட்டதை தெளிவாக விளக்குகிறது:

நமது கட்டுரையில் நாம் குறிப்பிட்டிருக்கின்ற வசனத்தில் ஈஸா (அலை) அவர்களை அல்லாஹ் கைப்பற்றிக்கொண்டதாக வருகிறதே தவிர மரணமடைந்து விட்டதாக குறிப்பிடப்படவேயில்லை.

அல்லாஹ் தன் திருமறையில் அத்தியாயம் 5, வசனங்கள் 116-117 ல் கூறுகிறான்: –

‘இன்னும் ‘மர்யமுடைய மகன் ஈஸாவே ‘அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள் என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா? என்று அல்லாஹ் கேட்கும் போது அவர் ‘நீ மிகவும் தூய்மையானவன் எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை அவ்வாறு நான் கூறியிருந்தால் நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய் என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய் உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன் நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன் என்று அவர் கூறுவார்’ அல் குர்ஆன் (5:116)

{மேலும் ஈஸா (அலை) கூறுவார்} ‘நீ எனக்குக் கட்டளையிட்டபடி (மனிதர்களை நோக்கி) ‘என்னுடைய இறைவனும் உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள் என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில்லை மேலும் நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன் அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய் (என்றும்)’ (அல் குர்ஆன் 5:117)

இந்த வசனத்தில் வரக்கூடிய ‘தவ(f)ப்(f)பய்தனி’ என்ற அரபி வார்த்தைக்கு ‘கைப்பற்றிய பின்னர்’ தான் என்று பொருள் கொள்ள வேண்டுமே தவிர ‘என்னை மரணிக்கச் செய்த பின்’ என்று அல்ல!

ஏனென்றால், நீங்கள் இந்த வசனத்தின் மூலமாக, ஈஸா (அலை) அவர்கள் மரணித்து விட்டார்கள் என்று நினைப்பதற்கு ‘தவ(f)ப்(f)பய்தனி’ என்ற அரபிப் பதத்திற்கு ‘என்னை மரணிக்கச் செய்த பின்’  என்ற அர்த்தம் கொடுப்பதனால் ஏற்பட்ட வினாவேயாகும்.

முதலில் முக்கியமான ஒரு விஷயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகள் பல ஈஸா (அலை) அவர்கள் இன்னும் மரணிக்க வில்லை என்பதைத் தெளிவாகக் கூறகிறது. மேலும் அல்-குர்ஆனும் ஆதாரப் பூர்வமான நபிமொழிகளும் ஒரு போதும் முரண்படாது. எனவே அல் குர்ஆனில் குறிப்பிடப்பட்ட ‘தவ(f)ப்(f)பய்தனி’ என்ற வார்த்தைப் பிரயோகம் அல்-குர்ஆனில் வேறு கருத்து அல்லது பொருள் கொண்டு பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை ஆராய வேண்டும்.

உதாரணமாக, (39:42) மற்றும் (6:60) போன்ற வசனங்களில் நிரந்தர மரணம் அல்லாத ‘நித்திரை’ எனும் தூக்கத்திற்கும் மேலே குறிப்பிடப்பட்ட அதே வார்த்தைப் பிரயோகமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாம் விளங்குவது யாதெனில் ஈஸா (அலை) அவர்கள் மேலே உயர்த்தப்படும் போது ‘தூக்கம்’ போன்ற ஒன்றை வழங்கி அல்லாஹ் அவரை உயர்த்தியிருக்கலாம் என்பதும், ஈஸா (அலை) அவர்கள் இன்னும் மரணிக்கவில்லை, இறுதிகாலக் கட்டங்களில் உலகிற்கு வந்த பின்னர் எல்லோரையும் போன்று மரணிப்பார்கள், அதன் பின்னர் மறுமையில் எல்லோரும் உயிர் கொடுக்கப்பட்டு விசாரிக்கப்படும் போது நபிமார்கள் தம்மைப் பின்பற்றியவர்களின் நிலைப்பாட்டை அல்லாஹ்விடம் கூறும்போது இப்படிக் கூறலாம் என அறியமுடிகிறது. அல்லாஹ்வே முற்றிலும் அறிந்தவன்.

3) மறுமையில் ஈஸா (அலை) அவர்கள் கூறும் அதே வசனத்தை நபி (ஸல்) அவர்களும் கூறுவார்கள். எனவே நபி (ஸல்) அவர்களைப் போல் ஈஸா (அலை) அவர்களும் மரணித்து விட்டார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: –

நீங்கள் (மறுமை நாளில் காலில்) செருப்பணியாதவர்களாகவும் நிர்வாணமானவர்களாகவும், ஆண் குறிகளின் நுனித்தோல் நீக்கப்படாதவர்களாகவும் எழுப்பப்படுவீர்கள். பிறகு, ‘நாம் முதன் முதலாகப் படைத்ததைப் போன்றே அதை மீண்டும் படைப்போம். இது நம் மீது (பொறுப்பாகிவிட்ட நம்முடைய) வாக்குறுதியாகும். இதை நாம் நிச்சயம் செய்யவிருக்கிறோம்’ (திருக்குர்ஆன் 21:104) என்னும் இறைவசனத்தை ஓதினார்கள். மறுமை நாளில் (நபிமார்களில்) முதன் முதலாக (சொர்க்கத்தின்) ஆடை அணிவிக்கப்படுபவர்கள் இப்ராஹீம அவர்கள் ஆவர். என் தோழர்களில் சிலர் இடப்பக்கம் (நரகத்தின் பால்) கொண்டு செல்லப்படுவார்கள். நான், ‘இவர்கள் என் தோழர்கள். இவர்கள் என் தோழர்கள்’ என்று (அவர்களைவிட்டுவிடும்படி) கூறுவேன். அப்போது, ‘தாங்கள் இவர்களைப் பிரிந்(து மரணித்)ததிலிருந்து இவர்கள் தம் மார்க்கத்தைவிட்டு விலகி, தாம் வந்த சுவடுகளின் வழியே திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள்’ என்று கூறுவார்கள். அப்போது, (அல்லாஹ்வின்) நல்லடியார் (ஈஸா-அலை அவர்கள்) கூறியதைப் போல், ‘நான் அவர்களோடு இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்தபோது நீயே அவர்களையும் கண்காணிப்பவனாக இருந்தாய். மேலும், நீ (இப்போது) அவர்களுக்கு தண்டனை அளித்தால் அவர்கள் நிச்சயமாக உன் அடிமைகளே, நீ அவர்களை மன்னித்தாலும் (அப்போதும்) நீயே யாவற்றையும் மிகைத்தவனும் நுண்ணறிவுடையவனுமாய் இருக்கிறாய்’ என்னும் (திருக்குர்ஆன் 05: 117-118) இறைவசனத்தை (பதிலாகக்) கூறுவேன். என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3349

உங்களுடைய வாதமான நபி ஈஸா (அலை) அவர்கள் கூறவிருக்கிறதைப் போன்று நபி (ஸல்) அவர்களும் கூறவிருப்பதால் நபி (ஸல்) அவர்கள் இறந்து விட்டதைப் போன்று ஈஸா (அலை) அவர்களும் இறந்து விட்டார்கள். இது முற்றிலும் தவறான வாதமாகும். ஏனென்றால் இவ்வாறு ஆராயும் போது இது பல்வேறு குழப்பங்களுக்கு வழிவகுக்கும்.  ஒவ்வொரு விஷயத்திலும ஈஸா (அலை) அவர்களை நபி (ஸல்) அவர்களை ஒப்பிடும் போது இதையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. அதாவது நபி (ஸல்) அவர்களுக்கு தந்தை உண்டு. ஆதனால் நவீன கிறிஸ்தவர்கள் கூறுவது போன்று ஈஸா (அலை) அவர்களுக்கும் தந்தை உண்டு என்று கூறுவீர்களா?

எந்த ஒரு விசயத்தையும், குறிப்பாக இஸ்லாமிய மார்க்கத்தில் ஒன்றை ஆய்வு செய்யும் போது அது குர்ஆன் மற்றும் ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களுக்கு முரணில்லாமல் இருக்கிறதா என பார்த்துக்கொள்ள வேண்டும். எனவே நீங்கள் குறிப்பட்ட ஹதீஸின் படி, மறுமையில் ஈஸா (அலை) எவ்வாறு கூறுவார்களோ அவ்வாறே நபி (ஸல்) அவர்களும் கூறுவார்கள் என்று மட்டும் தான் நாம் பொருள் கொள்ள வேண்டுமே தவிர அவர்களின் நிலையை நபி (ஸல்) அவர்களின் நிலைக்கு ஒப்பிட்டு அனைத்தையும் ஆராய முற்படக்கூடாது. அது அறிவார்ந்த முறையும் ஆகாது. மேலும் குறிப்பட்ட அந்த வசனத்தில் ஈஸா (அலை) அவர்கள் மற்றும் நபி (ஸல்) அவர்களின் நிலைப்பாடு தங்களைப் பின்பற்றியவர்கள் வஷயத்தில் ஒன்றாக இருக்கிறது என்பதை மட்டும் தான் சுட்டிக்காட்டுகின்றது.

நாம் உங்களிடம் கேட்கும் கேள்விகள்: –

‘ஈஸா (அலை) அவர்கள் ஏற்கணவே மரமடைந்து விட்டார்கள்’ என்றால் அவர்கள் திரும்பவும் உயிர் கொடுத்து எழுப்பப்பட்டு மீண்டும் இவ்வுலகத்திற்கு வருவார்களா?

அல்லது

பிற சமயத்தவர்களின் கொள்கைப்படி மீன்டும் பிறந்து வருவார்களா?

அப்படியே வாதத்திற்காக உங்களின் கருத்தை ஏற்பதாக வைத்துக்கொண்டாலும் அது மேற்கண்ட குர்ஆன் மற்றும் பல ஸஹீஹான ஹதீஸ்களின் கூற்றுக்கு மாற்றமாக உள்ளதே அவற்றிற்கு என்ன பதில்?

4) ஈஸா (அலை) அவர்கள் மரணித்து விட்டார்கள் என்பதற்கு 25 வசனங்கள் உள்ளன:

தயவு செய்து தாங்கள் அந்த வசனங்களை குறிப்பிட்டால் ஆய்வு செய்வதற்கு உதவும்.

5) ஈஸா (அலை) அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்று நம்புவது இணை வைக்கும் செயல்! நபி (ஸல்) அவர்களை இழிவு படுத்தும் செயல்:

இணைவைக்கும் கொடிய பாவத்திலிருந்து அல்லாஹ் என்னையும் உங்களையும் மற்றும் முஸ்லிமான அனைவரையும் காப்பாற்றுவானாகவும். அல்லாஹ் மற்றும் அவனது தூதர் (ஸல்) அவர்கள் கூறியவற்றை உள்ளது உள்ளவாறே நம்புவது தான் ஒரு உண்மையான முஃமினின் பண்பாகும். அதை விடுத்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆயத்து மற்றும் ஹதீஸூக்கு தமது கற்பனையில் உதித்த சுய கருத்துக்களைக் கூறுவது என்பது ஷைத்தானுடைய சூழ்ச்சியாகும். அல்லாஹ் நம் அனைவரையும் அவற்றிலிருந்து காப்பாற்ற வேண்டும் என வல்ல இறைவனிடம் இறைஞ்சுவோம்.

அல்-குர்ஆனை விளங்குவதற்கு இரண்டு முறைகள் உண்டு:

– அல்-குர்ஆனின் வசனங்களை ஏனைய வசனங்களோடு ஒப்பிட்டு விளங்குதல்

– அல்-குர்ஆனின் வசனங்களை நபி (ஸல்) அவர்களுடைய ஹதீஸ்களின் உதவியுடன் விளங்குதல்

எனவே நாம் இந்த இரண்டு முறைகளையும் கவனத்தில் கொண்டு அல்-குர்ஆனை விளங்க முற்பட்டால் இன்ஷா அல்லாஹ் நமக்குத் தெளிவு கிட்டும்.

முழு ஆற்றலும் வல்லமையும் ஞானமும் உடைய அல்லாஹ்வே முற்றிலும் அறிந்தவன்.

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...
3 thoughts on “ஈஸா நபி உயிரோடு இருக்கிறார்களா?”
  1. jazakallah. inru kaadhiyaanikal enum kodiyavarkaL dankaladhu kufrai vehamaha paravachcheyyap paarkiraargal. pala naadukalil kaadhiyaanikal irukkiraargal. pala ladcham pear irukkiraargal emru reel vidugiraargal. adhai yaarum namba veandaam. unmai musligal anaivarum onru searndhal pudhiya shaithanai nabiyaaka vaadhidum kaadhiyaanikaLukku azhivu naal veku viraivil insha allah irukkiradhu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed