திருட்டை ஒழிக்க சிறந்த வழி

அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது.

’27 மூறை திருடியவன்’ மீண்டும் திருட்டுக் குற்றத்தில் கைது!

வங்கிக் கொள்ளையில் ‘பிரபல திருடன்’ கைது!

‘ஒரு சவரன் நகையை திருடுவதற்காக’ மூதாட்டி கழுத்தை அறுத்துக் கொலை!

இத்தகையை செய்திகளை நாம் சர்வசாதரணமாக இன்றைய காலக்கட்டத்தில் தினசரிகளின் வாயிலாக படிக்கின்றோம். படித்து விட்டு யாரோ யாருடைய பொருளையோ திருடிவிட்டான்! அதனால் நமக்கென்ன என்று நமது அன்றாட வேலையில் மும்முரமாக இருந்து விடுகிறோம். ஆனால் அந்த திருட்டினால் பாதிக்கப்பட்டவர்களோ மிகுந்த மன உளைச்சலுக்கும் வேதனைக்கும் உள்ளாகின்றனர். சில வேளைகளில் அவர்களது வாழ்வே நசிந்து நிர்கதிக்குள்ளாகின்றார்கள். அதன் மூலம் சிலர் தற்கொலை கூட செய்து கொள்கின்றனர்.

‘மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த நகை மற்றும் பணம் திருட்டுப் போனதால் பெற்றோர் தற்கொலை’

இத்தகைய செய்திகள் கூட தினசரி நாளிதழ்களில் நாம் அன்றாடம் படிக்கும் செய்தியாக இருக்கிறது.

எனவே நாம் இத்தகைய செய்திகளை பத்தோடு பதினொன்றாக படித்துவிட்டுப் போகாமல் பறிகொடுத்தவர்களின் மன நிலையில் இருந்து யோசிக்கவேண்டும். ஏனென்றால் இத்தகைய திருடுகளினால் சாதி, சமயம் வேறுபாடில்லாமல் அனைத்து சமுதாய மக்களுமே பாதிப்புக்குள்ளாகின்றனர். எனவே ஒரு சவரன் நகையை திருவதற்காக கொலை கூட செய்யத் துணிந்து விட்ட அளவிற்கு திருட்டுக் குற்றங்கள் மலிந்து விட்டன. ஒரு முறை திருடியவனே மீண்டும் மீண்டும் திருடுகின்றான் என்றால் நாம் அதைப்பற்றி சற்று கூட யோசிப்பதில்லை. முதல் முறை அவன் திருடியபோதே கடுமையான தண்டணையைக் கொடுத்திருந்தால் அவன் அவ்வாறு மீண்டும் திருடுவதற்கு கூட யோசிப்பானா? அதனால் ‘ஒரு சவரன் நகைக்கான கொலையோ அல்லது மகளின் திருமணத்திற்காக சேமித்து வைத்திருந்தவைகள் திருடு போனதற்காக நிகழ்ந்த தற்கொலைகளோ நடைபெறுமா? நடுநிலையில் உள்ள சீர்திருத்த வாதிகள் ஆராய்து சிந்தித்து திருட்டைத் தடுப்பதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டும். திருட்டுக் குற்றத்திற்கான தண்டணையை கடுமையாக்காதவரை திருட்டுக் குற்றங்கள் ஓயப்போவதில்லை! திருட்டுக் குற்றங்களுக்காண தண்டணையை மிகக் கடுமையாக ஆக்கியிருக்கும் இஸ்லாமிய நாடுகளைப் பார்தோமேயானால் இது புரியும்.

இஸ்லாம் இத்தகைய திருட்டுக் குற்றங்களை குறைப்பதற்காக கடுமையான தண்டனையை விதிக்கிறது. பிறர் பொருளை திருடுபவன் அவர் தம் வாழ்நாள் முழுக்க மிகவும் சிரமப்பட்டு சம்பாதித்த பொருள்களாயிற்றே என்ற ஈவிரக்கமின்றி திருடி அவருடைய வாழ்வையே சிதைப்பதைப் போலவே அந்த திருடன் மீதும் ஈவிரக்கம் காட்டாமல் அவனுக்கு கடுமையான தண்டனையை விதித்து அவன் மீண்டும் அத்தகைய தொழிலில் ஈடுபட அவனைத் தடுக்கிறது. மேலும் இது மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைந்து எவரும் இத்தகைய இழிசெயலில் ஈடுபட தடைசெய்கிறது.

மனிதர்களைப் படைத்ததோடு அவர்கள் மனம்போன போக்கில் வாழ்ந்து தாமும் நெறிகெட்டு மற்றவர்களையும் சீரழிந்து போகவிடாமல் தடுப்பதற்காக, அவர்கள் சீரிய, நேரிய வாழ்வை வாழ்வதற்காக ஏக இறைவனாகிய அல்லாஹ் அருளிய இறுதி வேதமாகிய அல்-குர்ஆனில் கூறுகின்றான்:

‘திருடனோ திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு, அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டனையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாக இருக்கின்றான்’ (அல்குர்ஆன் 5:38)

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்கள்:

“நபி (ஸல்) அவர்கள் மூன்று திர்ஹங்கள் (வெள்ளிக் காசுகள்) விலை மதிப்புள்ள தோல் கேடயத்திற்காக (அதைத் திருடியவரின் கரத்தை)த் துண்டித்தார்கள்” (ஆதாரம் : புகாரி)

மேலும் திருடியவன் அந்தஸ்துள்ளவனா அல்லது பணபலம் அல்லது அரசியல் செல்வாக்கு உள்ளவனா என்றெல்லாம் இஸ்லாம் பார்ப்பதில்லை. திருடியவர் யாராக இருந்தாலும் தண்டனை வழங்க வேண்டும் என்று ஆணையிடுகிறது.

ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்:

‘மக்ஸூமி’ குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடிவிட்டாள் என்ற செய்தி குறைஷியருக்குக் கவலையளித்தது. அப்போது அவர்கள் ‘இறைத்தூதர்(ஸல்) அவர்களின் செல்லப் பிள்ளையான உசாமாவைத் தவிர வேறு யார் துணிந்து (அந்தப் பெண்ணுக்காகப் பரிந்து) பேச முடியும்?’ என்றார்கள். அவ்வாறே உசாமா(ரலி) அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (பரிந்து) பேசினார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒன்றின் விஷயத்திலா (அதை நிறைவேற்றாமல்விட்டுவிடுமாறு) நீ பரிந்துரைக்கிறாய்?’ என்று கேட்டுவிட்டுப் பிறகு எழுந்து நின்று (பின்வருமாறு) உரையாற்றினார்கள்:

‘மக்களே! உங்களுக்கு முன்னால் வாழ்ந்த (பனீ இஸ்ராயீல்) மக்கள் வழிகெட்டுப் போனதற்குக் காரணமே, (அவர்களிடையே உள்ள) உயர் குலத்தார் திருடிவிட்டால் அவர்கள் அவரை (தண்டிக்காமல்)விட்டு விடுவார்கள். அவர்களிலுள்ள பலவீனர்கள் திருடிவிட்டால் அவர்களின் மீது தண்டனையை நடைமுறைப்படுத்துவார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! (இந்த) முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடியிருந்தாலும் முஹம்மத் அவரின் கையைத் துண்டித்தே இருப்பார்’ (ஆதாரம் : புகாரி)

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்:

“கால் தீனார்(பொற் காசு), அல்லது அதற்கு மேல் திருடியதற்காகக் கை வெட்டப்படும்” அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி), ஆதாரம் : புகாரி

மற்றுமொரு ஹதீஸில்,

“கால் தீனார் மதிப்புள்ள பொருளை திருடியவனின் கையை வெட்டுங்கள். அதற்கு குறைந்த மதிப்புள்ளதைத் திருடினால் வெட்டாதீர்கள்!” என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம் : அஹ்மத்)

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...
One thought on “திருட்டை ஒழிக்க சிறந்த வழி”
  1. எல்லாம் அருமையான கட்டுரை தங்களுக்கு இறைவன் இவ்வுலகிலும் மறுமையிலும் அருள் புரிய பிரார்த்திக்கின்றேன் அன்பு சகோதரர் முகமதலி ஜின்னா,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed