நபியவர்களுக்கு மறைவான விஷயங்கள் தெரியுமா? அனைத்து புகழும் அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே! அல்-குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் நபி (ஸல்) அவர்கள் மறைவான விஷயங்களை அறிந்திருக்கவில்லை என்றே அறியமுடிகின்றது. மறைவான விஷயங்கள் பற்றி நபி (ஸல்) அவர்கள் அறிவித்ததெல்லாம் அல்லாஹ்வினால் வஹிமூலம் அவர்களுக்கு அருளப்பட்டதே தவிர வேறில்லை. அல்லாஹ் கூறுகிறான்: – (நபியே!) நீர் கூறும்: ‘என்னிடத்தில் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் இருக்கின்றன என்று நான் உங்களிடம் கூறவில்லை. மறைவானவற்றை நான் அறியமாட்டேன்; நிச்சயமாக நான் ஒரு மலக்காக இருக்கின்றேன் என்றும் நான் உங்களிடம் சொல்லவில்லை; எனக்கு (வஹீயாக) அறிவிக்கப்பட்டதைத் தவிர (வேறு எதையும்) நான் பின்பற்றவில்லை.’ இன்னும் நீர் கூறும்: ‘குருடனும் பார்வையுடையவனும் சமமாவாரா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா? (அல்-குர்ஆன் 6:50) (நபியே!) நீர் கூறும்: ‘அல்லாஹ் நாடினாலன்றி நான் எனக்கே யாதொரு நன்மையோ அல்லது தீமையோ செய்து கொள்ள சக்தியில்லாதவன்; மறைந்திருப்பவற்றை நான் அறிபவனாக இருந்தால் நன்மைகளை அதிகமாகத் தேடிக்கொண்டிருப்பேன்; (அந்நிலையில் எவ்விதமான) தீங்கும் என்னைத் தீண்டியிராது – நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நன்மாராயம் கூறுபவனுமேயன்றி வேறில்லை.’ (அல்-குர்ஆன் 7:188) வானங்களிலும், பூமியிலும் உள்ள மறைபொருள்கள் (இரகசியங்கள் பற்றிய ஞானம்) அல்லாஹ்வுக்கே உரியது; அவனிடமே எல்லாக் கருமங்களும் (முடிவு காண) மீளும். ஆகவே அவனையே வணங்குங்கள்; அவன் மீதே (பரஞ்சாட்டி) உறுதியான நம்பிக்கை வையுங்கள் – நீங்கள் செய்பவை குறித்து உம் இறைவன் பராமுகமாக இல்லை. (அல்-குர்ஆன் 11:123) (இன்னும்) நீர் கூறுவீராக: ‘அல்லாஹ்வைத் தவிர்த்து, வானங்களிலும், பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய மாட்டார்; இன்னும்: (மரித்தோர் இறுதியில்) எப்போது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள்.’ (அல்-குர்ஆன் 27:65) மேற்கண்ட திருமறையின் தெள்ளத் தெளிவான வசனங்களின் அடிப்படையில் மறைவான விஷயங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும் என்றும், அவனுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அவன் வஹி மூலம் அறிவித்துக் கொடுத்ததைத் தவிர வேறென்றும் தெரியாது என்பது தெளிவாகின்றது. அல்லாஹ் கூறுகிறான்:- (நபியே!) இவை(யெல்லாம்) மறைவானவற்றில் நின்றுமுள்ள விஷயங்களாகும்; இவற்றை நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிக்கின்றோம்; மேலும், மர்யம் யார் பொருப்பில் இருக்க வேண்டுமென்பதைப் பற்றி (குறி பார்த்தறிய) தங்கள் எழுது கோல்களை அவர்கள் எறிந்த போது நீர் அவர்களுடன் இருக்கவில்லை; (இதைப்பற்றி) அவர்கள் விவாதித்த போதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை. (அல்-குர்ஆன் 3:44) (நபியே! உமக்கு) இது மறைவான நிகழ்ச்சிகளில் உள்ளதாகும்; நாம் இதனை உமக்கு (வஹீ மூலம்) அறிவித்தோம், நீரோ அல்லது உம்முடைய கூட்டத்தினரோ இதற்கு முன் இதனை அறிந்திருக்கவில்லை; நீரும் பொறுமையைக் கைக் கொள்வீராக! நிச்சயமாக இறுதியில் (நல்ல) முடிவு பயபக்தி உடையவர்களுக்குத் தான் (கிட்டும்). (அல்-குர்ஆன் 11:49) 72:21 கூறுவீராக: ‘நிச்சயமாக நான் உங்களுக்கு நன்மையோ, தீமையோ, செய்ய சக்தி பெற மாட்டேன்.’ 72:22 கூறுவீராக: ‘நிச்சயமாக அல்லாஹ்வை விட்டும் ஒருவரும் என்னைப் பாதுகாக்க மாட்டார்; இன்னும், அவனையன்றி ஒதுங்குந் தலத்தையும் நான் காணமுடியாது. 72:23 ‘அல்லாஹ்விடமிருந்து (வருவதை) எடுத்துச் சொல்வதும், அவனுடைய தூதுவத்துவத்தையும் தவிர (எனக்கு வேறில்லை) எனவே, எவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்கிறாரோ அவருக்கு நிச்சயமாக நரக நெருப்புத்தான். அதில் அவர் என்றென்றும் இருப்பார்’ என (நபியே!) நீர் கூறும். 72:24 அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை (வேதனையை) அவர்கள் பார்க்கும் போது, எவருடைய உதவியாளர்கள் மிக பலஹீனமானவர்கள் என்பதையும்; எண்ணிக்கையில் மிகக் குறைந்தவர்கள் என்பதையும் விரைவில் அறிந்து கொள்வார்கள். 72:25 (நபியே!) நீர் கூறும்: ‘உங்களுக்கு வாக்களிக்கப்பட்டிருப்பது (அவ்வேதனை) சமீபமா, அல்லது என்னுடைய இறைவன் அதற்குத் தவணை ஏற்படுத்தியிருக்கிறானா என்பதை நான் அறியேன். 72:26 ‘(அவன் தான்) மறைவானாவற்றை அறிந்தவன்; எனவே, தான் மறைத்திருப்பவற்றை அவன் எவருக்கும் வெளியாக்கமாட்டான். (அல்-குர்ஆன் 72:21-26) எனவே சகோதர சகோதரிகளே, மேற்கண்ட குர்ஆன் வசனங்களுக்கு எதிராக ஒருவர், ‘நபி (ஸல்) அவர்களுக்கும் அனைத்து மறைவான விஷயங்களும் தெரியும்’ என்று கூறுவாரானால் அது அடிப்படையற்ற பொய்யான வார்த்தைகளாகும். குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் அதற்கு எவ்வித ஆதாரமுமில்லை என்பதையும் மாறாக அவைகள் இந்த பொய்யான வாதத்திற்கு எதிராகவே அமைந்துள்ளன என்பதையும் அறியலாம். தொடர்புடைய பதிவுகள்பித்அத் என்றால் என்ன?ஆழ்கடல் இருள், கடலின் உள் அலைகள்கைவிரல் ரேகையின் முக்கியத்துவம் குறித்து அல்-குர்ஆன்மரணத்திற்குப் பின் மனிதன் About The Author நிர்வாகி See author's posts Share this:WhatsAppFacebookTwitterEmailPrintTelegramLike this:Like Loading...மற்றவர்களுக்கு அனுப்ப... Post navigation பொய் பேசுவதன் தீமைகள் இணைவைக்கும் குடும்பத்தார்களை தூய இஸ்லாத்திற்கு அழைப்பது எவ்வாறு?