சொர்க்கத்தில் நுழையும் கடைசி நபர்

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்:

‘இறைத்தூதர் அவர்களே! மறுமை நாளில் நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா?’ என்று மக்கள் (நபி(ஸல்) அவர்களிடம்) கேட்டார்கள்.

அதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘பெளர்ணமி இரவில் முழு நிலாவைக் காண்பதில் உங்களுக்குச் சிரமம் இருக்குமா?’ என்று கேட்டார்கள்.

மக்கள் ‘இல்லை; இறைத்தூதர் அவர்களே!’ என்றார்கள்.

நபி(ஸல்) அவர்கள், ‘மேகம் மறைக்காத சூரியனைக் காண்பதில் உங்களுக்குச் சிரமம் இருக்குமா?’ என்று கேட்டார்கள்.

மக்கள், ‘இல்லை; இறைத்தூதர் அவர்களே!’ என்று பதிலளித்தனர்.

நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்:

இவ்வாறு தான் உங்களுடைய இறைவனை நீங்கள் (மறுமை நாளில்) காண்பீர்கள்.

அல்லாஹ் மறுமைநாளில் மனிதர்களை ஒன்று கூட்டி,

‘(உலகத்தில்) யார் எதை வணங்கிக் கொண்டிருந்தாரோ அவர் அதைப் பின்பற்றிச் செல்லட்டும்’ என்று கூறுவான்.

எனவே, சூரியனை வணங்கிக் கொண்டிருந்தவர்கள் சூரியனைப் பின்தொடர்வார்கள்.

சந்திரனை வணங்கிக் கொண்டிருந்தவர்கள் சந்திரனைப் பின்தொடர்வார்கள்.

ஷைத்தான்களை வழிபட்டு வந்தவர்கள் ஷைத்தான்களைப் பின்தொடர்வார்கள்.

இறுதியில் இந்தச் சமுதாயத்தார் மட்டும் எஞ்சியருப்பார்கள். அவர்களிடையே ‘பரிந்துரைப்போர்’ அல்லது ‘நயவஞ்சகர்கள்’ இருப்பார்கள்.

அப்போது அல்லாஹ் அவர்களிடம் (அவர்கள் அறிந்திராத அவர்களிடம் (அவர்கள் அறிந்திராத தோற்றத்தில்) வந்து, ‘நானே உங்களுடைய இறைவன்’ என்று கூறுவான்.

அதற்கு அவர்கள், ‘எங்கள் இறைவன் எங்களிடம் வரும் வரை நாங்கள் இங்கேயே இருப்போம் நீ எங்கள் இறைவன் அல்லன்). அவன் எங்களிடம் வந்தால் அவனை நாங்கள் அறிந்துகொள்வோம்’ என்று கூறுவர்.

அப்போது அல்லாஹ் அவர்களிடம் அவர்கள் அறிந்து கொள்ளும் தோற்றத்தில் வந்து, ‘நானே உங்களுடைய இறைவன்’ என்று சொல்வான்.

அப்போது அவர்கள், ‘நீதான் எங்கள் இறைவன்’ என்று கூறியபடி அவனைப் பின்தொடர்வார்கள்.

அங்கு நரகத்திற்கு மேலே பாலம் அமைக்கப்படும. அப்போது நானும் என் சமுதாயத்தாருமே அ(ந்தப் பாலத்)தை முதல் முதலாகக் கடப்போம்.

அன்றைய தினம் இறைத் தூதர்கள் மட்டுமே பேசுவார்கள். அப்போது இறைத்தூதர்களின் பிரார்த்தனை ‘(இறைவா!) காப்பாற்று! காப்பாற்று!’ என்பதாகவே இருக்கும்.

கருவேல மரத்தின் முற்களைப் போன்ற கொக்கிகள் நரகத்தில் மாட்டப்பட்டிருக்கும். கருவேல மரத்தைப் பார்த்திருக்கிறீர்களா?’ என்று கேட்டார்கள்.

மக்கள், ‘ஆம், இறைத்தூதர் அவர்களே!’ என்று பதிலளித்தனர்.

அந்தக் கொக்கிகள் கருவேல மர முள்ளைப் போன்று தானிருக்கும். ஆயினும், அதன் பருமனை அல்லாஹ்வைத் தவிர வேறெருவரும் அறியமாட்டார்கள். அந்தக் கொக்கிகள் மக்களை அவர்களின் (தீய) செயல்களுக்கேற்ப கவ்விப் பிடிக்கும். மக்களில் சிலர் தம் செயலினால் அழிந்து விடுவார்கள். இன்னும் சிலர் (கொக்கியின் பிடி தளர்ந்து நரகத்தில்) விழுந்து விடுவார்கள். மற்றச் சிலர் வேறு நிலையில் இருப்பார்கள்.

பிறகு இறைவன் காட்சியளித்து, தன் அடியார்களிடையே தீர்ப்பளித்து முடித்த பின், நரகவாசிகளில் தான் நாடிய சிலரை தன் கருணையால் (நரகத்திலிருந்து) வெளியேற்ற விரும்புவான்.

எனவே, அல்லாஹ்வுக்கு எதையும் இணைகற்பிக்காமல் வாழ்ந்தவர்களை நரகத்திலிருந்து வெளியேற்றிவிடுமாறு வானவர்களுக்கு அவன் கட்டளையிடுவான்.

வணக்கத்திற்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை (லா இலாஹ இல்லல்லாஹ்) என உறுதி கூறியவர்களில் யாருக்குத் தான் கருணை புரிய வேண்டுமென நாடுகிறானோ அவர்களை (நரகத்திலிருந்து வெளியேற்றிடுமாறு ஆணையிடுவான்).

நரகத்திலிருக்கும் அவர்களை (அவர்கள் செய்த) சஜ்தாவின் (சிரவணக்கத்தின்) அடையாளத்தை வைத்து வானவர்கள் இனங் கண்டுகொள்வார்கள்.

ஆதமின் மகனின் (-மனிதனின்) சஜ்தா அடையாள(ம் உள்ள இட)த்தைத் தவிர அவனை (முழுமையாக) நரகம் தீண்டும். (ஆனால்,) சஜ்தா அடையாளத்தைத் தீண்டக் கூடாதென நரகத்திற்கு இறைவன் தடை விதித்துள்ளான். எனவே, அவர்கள் அங்கமெல்லாம் கரிந்து விட்டநிலையில் நரகத்திலிருந்து வெளியேறுவார்கள்.

அப்போது அவர்களின் மீது ஜீவ நீர் (-மாஉல் ஹயாத்) ஊற்றப்படும். உடனே அவர்கள் சேற்று வெள்ளத்தில் விதைப் பயிர் முளைப்பதைப் போன்று (புதுப் பொலிவுடன்) நிறம் மாறிவிடுவார்கள்.

பின்னர் அடியார்களிடையே அல்லாஹ் தீர்ப்பளித்து முடிக்கும் போது நரகத்தை முன்னோக்கியபடி ஒருவர் எஞ்சியிருப்பார். அவர்தாம் சொர்க்கத்தில் நுழையக் காத்திருக்கும் கடைசி நரகவாசியாவார்.

அவர், ‘என் இறைவா! நரகத்தைவிட்டு என் முகத்தை (வேறு பக்கம்) திருப்புவாயாக! அதன் (வெப்பக்) காற்றால் எனக்கு மூச்சடைக்கிறது; அதன் ஜுவாலை என்னைக் கரித்துவிட்டது’ என்று கூறுவார்.

பின்னர் எதைச் சொல்லி அவர் பிரார்த்திக்க வேண்டுமென அல்லாஹ் நாடுவானோ அதைச் சொல்லி அவர் பிரார்த்திப்பார்.

பிறகு அல்லாஹ் (அவரிடம்), ‘நீ கேட்பதை நான் கொடுத்தால் இஃதல்லாத வேறொன்றை நீ என்னிடம் கேட்கக்கூடும் அல்லவா?’ என்பான்.

அதற்கு அவர், ‘இல்லை. உன் கண்ணியத்தின் மீதாணையாக! இதைத் தவிர வேறெதையும் நான் உன்னிடம் கேட்க மாட்டேன்’ என்று கூறி, இறைவன் நாடிய வாக்குறுதிகளையும் உறுதிமொழிகளையும் அவர் தம் இறைவனிடம் வழங்குவார்.

அப்போது அல்லாஹ் நரகத்தைவிட்டு அவரின் முகத்தை (வேறு பக்கம்) திருப்பிவிடுவான். அவர் சொர்க்கத்தை முன்னோக்கி பார்வையைச் செலுத்தும்போது அல்லாஹ் நாடிய நேரம் வரை அவர் அமைதியாக இருப்பார்.

பிறகு, ‘என் இறைவா! சொர்க்கத்தின் வாசல் வரை என்னைக் கொண்டு செல்வாயாக!’ என்று கூறுவார்.

அதற்கு அல்லாஹ் அவரிடம், ‘உனக்கு வழங்கப்பட்ட இதைத் தவிர வேறெதையும் ஒருபோதும் என்னிடம் நீ கேட்கமாட்டாய் என உறுதிமொழிகளையும் வாக்குறுதிகளையும் நீ வழங்கவில்லையா? மனிதா! உனக்குக் கேடுதான். உன்னுடைய ஏமாற்று வேலைதான் என்ன?’ என்று கூறுவான்.

அதற்கு அவர், ‘இல்லை. உன் கண்ணியத்தின் மீதாணையாக! இதைத் தவிர வேறெதையும் உன்னிடம் நான் கேட்கமாட்டேன்’ எனக் கூறி, அவன் நாடிய வாக்குறுதிகளையும் உறுதிமொழிகளையும் (இறைவனிடம்) வழங்குவார்.

எனவே, அல்லாஹ் அவரை சொர்க்கத்தின் வாசல் வரை கொண்டு செல்வான். சொர்க்க வாசலில் அவர் நிற்கும்போது சொர்க்கவாசல் அவருக்காகத் திறக்கும். அப்போது அவர் அதிலுள்ள உல்லாச சுகங்களைப் பார்த்தவாறு அல்லாஹ் நாடிய வரை அமைதியாக இருப்பார்.

பிறகு, ‘என் இறைவா! என்னை சொர்க்கத்திற்குள் அனுப்புவாயாக!’ என்று கூறுவார்.

அப்போது அல்லாஹ், ‘உனக்கு வழங்கப்பட்டதைத் தவிர வேறெதையும் கேட்கமாட்டேன் என்று கூறி வாக்குறுதிகளையும் உறுதி மொழிகளையும் நீ வழங்கவில்லையா?’ என்று கேட்டுவிட்டு, ‘மனிதா! உனக்குக் கேடுதான். உன்னுடைய ஏமாற்று வேலைதான் என்ன?’ என்று கூறுவான்.

அதற்கு அவர், ‘என் இறைவா! உன் படைப்புகளிலேயே நற்கதியற்றவனாய் நான் ஆகிவிடக் கூடாது’ என்று பிரார்த்தித்துக் கொண்டேயிருப்பார்.

இறுதியில் அவரைக் கண்டு அல்லாஹ் சிரித்துவிடுவான். அவரைக் கண்டு சிரித்ததும், ‘சொர்க்கத்தில் நுழைந்து கொள்’ என்று அவரிடம் அல்லாஹ் கூறுவான்.

சொர்க்கத்திற்குள் அவர் நுழைந்த பின் ‘நீ (விரும்பிய) அதை ஆசைப்படலாம்’ என்று அவரிடம் இறைவன் சொல்வான்.

அவ்வாறே அவர் ஆசைப்பட்டு தம் இறைவனிடம் கேட்பார். இறுதியில் அல்லாஹ்வே அவருக்கு (ஆசைப்பட வேண்டியவற்றை ஒவ்வொன்றாகச் சொல்லி) ‘இன்னதை இன்னதை நீ ஆசைப்படு’ என்று நினைவுபடுத்துவான்.

கடைசியில் அந்த மனிதரின் ஆசைகள் எல்லாம் அடங்கும்.

(அப்போது) அல்லாஹ், ‘(நீ கேட்ட) இதுவும் உனக்குக் கிடைக்கும். இதைப் போன்று இன்னொரு மடங்கும் உனக்குக் கிடைக்கும்’ என்று சொல்வான்

(ஆதாரம்: புகாரி)

குறிப்பு:

லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவை வெறுமனே வாயால் மொழிந்துவிட்டு அந்த திருக்கலிமாவிற்கு முரணானவற்றை செய்வதனால் அவர் உண்மையிலேயே அந்தக் கலிமாவை ஏற்றுக்கொண்டவராக மாட்டார்!

லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவின் உண்மையான அர்த்தங்களைப் புரிந்துக்கொண்டு அதை முறைப்படி உள்ளத்தால் ஏற்று அதை செயலால் நிறைவேற்ற வேண்டும்!

லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற திருக்கலிமாவை முறைப்படி அறிந்து அதை உளமாற கூறுவதற்கு அதன் விளக்கங்களை பின்வரும் வீடியோக்கின் லிங்கை கிளிக்செய்து அவற்றைக் கேட்டுப் பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed