தொழுகை QA- For Children and Beginners கேள்வி பதில்கள் வடிவில்

Q1) முஸ்லிம்கள் அவசியம் தொழுகையை நிறைவேற்ற வேண்டுமா?

A) ஆம். இது இறைவனின் கட்டளையாகும். அல்லாஹ் கூறுகிறான் : ”நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகையானது நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது” (அல்-குர்ஆன் 4:103).

நபி (ஸல்) கூறினார்கள் : முஸ்லிமுக்கும் காஃபிருக்கும் இடையே உள்ள உடன்படிக்கையே தொழுகை தான். அதனை எவன் விட்டு விடுகின்றானோ அவன் காஃபிராகி விட்டான். (ஆதாரம்: அஹ்மத் , திர்மிதி)

Q2) தொழாதவர்களுக்கு இறைவன் சித்தப்படுத்தி வைத்திருக்கும் நரகத்தின் பெயர் என்ன?

A) ஸகர் என்ற நரகம். அதாரம் : அல்-குர்ஆன் (74:41,42,43)

Q3) முஸ்லிம்கள் நாளொன்றுக்கு எத்தனை முறை தொழுகையை நிறைவேற்ற வேண்டும்?

A) முஸ்லிம்களுக்கு நாளொன்றுக்கு ஐந்து நேரத் தொழுகைகள் கடமையாக்கப்பட்டுள்ளது

Q4) ஐந்து நேரத் தொழுகைகளின் பெயர்களைக் கூறுக!

A) fபஜ்ர், லுஹர், அஸர், மஃரிப் மற்றும் இஷா

Q5) பஜ்ர் தொழுகையின் நேரம் எது?

A) அதிகாலை உதயமானதிலிருந்து சூரியன் உதயமாகும் வரைக்குமாகும்

Q6) லுஹர் தொழுகையின் நேரம் எது?

A) சூரியன் உச்சி சாயத்துவுங்கியதிலிருந்து ஒரு பொருளின் நிழல் அதன் உயரத்தின் அளவிற்கு வரும் வரைக்குமாகும்.

Q7) அஸர் தொழுகையின் நேரம் எது?

A) ஒரு பொருளின் நிழல் அதன் உயரத்தின் அளவை அடைந்தவுடன் ஆரம்பமாகி சூரியன் மறையும் வரை நீடிக்கின்றது

Q8) மஃரிப் தொழுகையின் நேரம் எது?

A) சூரியன் மறைந்ததிலிருந்து செம்மேகம் மறையும் வரைக்குமாகும். செம்மேகம் என்பது சூரியன் மறைந்த பிறகு தோன்றுவதாகும்

Q9) இஷா தொழுகையின் நேரம் எது?

A) செம்மேகம் மறைந்ததிலிருந்து இரவின் பகுதி வரைக்குமாகும்

Q10) தொழுவதற்கு தடை செய்யப்பட்ட நேரங்கள் யாவை?

A) 1) சூரியன் அடிவானில் உதயமாவதில் இருந்து அது முழுமையாக உதயமாகும் வரை உள்ள நேரம் 2) சூரியன் நடு உச்சியில் இருக்கும் போது 3) சூரியன் அடிவானில் மறைய ஆரம்பமாவதில் இருந்து அது முழுமையாக மறையும் வரை உள்ள நேரம். (ஆதாரம் : அஹ்மத் மற்றும் முஸ்லிம்)

மேற்கண்ட மூன்று நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் ஒருவர் தன்னுடைய இறைவனுக்காக ஸஜ்தா செய்வதற்கு எந்த தடையும் இல்லை.

Q11) தொழுகைக்கு முன் உளூ செய்வது அவசியமா?

A) ஆம். இது இறைவனின் கட்டளையாகும்.

அல்லாஹ் கூறுகிறான்: முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்; உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸஹு செய்து) கொள்ளுங்கள்; உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்) (அல்-குர்ஆன் 5:6)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ‘எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களில் எவரது தொழுகையையும் நீங்கள் உளூச் செய்தால் தவிர, அசுத்தத்துடன் ஏற்றுக் கொள்ள மாட்டான்’ (ஆதாரம்: அபூதாவுத்)

Q12) உளூ எவ்வாறு செய்ய வேண்டும்?

A) உளூ செய்வதாக மனதில் எண்ணிக் கொண்டு (வாயால் மொழிவது அல்ல) நிய்யத் செய்த பிறகு ‘பிஸ்மில்லாஹ்’ கூறி உளூ செய்யத் துவங்க வேண்டும். இரு கைகளையும் மணிக்கட்டு வரை மூன்று முறை கழுவிக் கொள்ளவேண்டும். மூன்று முறை வாய் கொப்பளிக்க வேண்டும். மூக்கிற்குள் வலது கையால் தண்ணீர் செலுத்தி இடது கையால் மூன்று முறை சுத்தம் செய்ய வேண்டும். ஒரு காதிலிருந்து மறு காதுவரையும், நெற்றியின் ஆரம்பப் பகுதியிலிருந்து கீழ் தாடை
வரையும் முகத்தை மூன்று முறை கழுவவேண்டும். இரண்டு கைகளையும் விரல் நுனிகளிலிருந்து முழங்கை உட்பட மூன்று முறை கழுவவேண்டும். முதலில் வலது கையையும் பிறகு இடது கையையும் கழுவவேண்டும். இரண்டு கைகளையும் தண்ணீரில் நனைத்து தலையின் முற்பகுதியிலிருந்து பிற்பகுதி வரை கொண்டு சென்று மீண்டும் அதனை முற்பகுதிக்கு கொண்டு வரவேண்டும். பிறகு ஆட்காட்டி விரலை காதின் உட்பகுதியையும், பெருவிரலால் காதின் வெளிப்பகுதியையும் தடவ வேண்டும். தலையில் மஸஹ் ஒரு முறை தான் செய்ய வேண்டும். இரண்டு கால்களையும் விரல் நுனிகளிலிருந்து கணுக்கால் வரையில் முதலில் வலது காலையும் பிறகு இடது காலையும் மூன்று முறை கழுவவேண்டும்.

Q13) உளூ செய்து முடித்தவுடன் ஓதும் துஆ எது?

A) “அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹ்” என்று கூறவேண்டும்.

Q14) உளுவை முறிக்கும் செயல்கள் யாவை?

A) மல ஜலம் கழித்தல், காற்று பிரிதல், இச்சை நீர் வெளிப்படல், அயர்ந்து தூங்குதல், ஒட்டக மாமிசம் உண்ணுதல் மற்றும் இன உறுப்பை இச்சையுடன் தொடுதல்.

Q15) உளூ செய்வதற்கு அல்லது கடமையான குளிப்பை நிறைவேற்ற தண்ணீர் கிடைக்கவில்லையானால் என்ன செய்ய வேண்டும்?

A) உளு செய்யவோ, குளிக்கவோ தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் அல்லது தண்ணீர் இருந்தும் அதனை பயன்படுத்த முடியாத நோய் போன்ற சூழ்நிலை ஏற்பட்டால் உளு மற்றும் குளிப்புக்கு பகரமாக தயம்மும் செய்து தொழுகையை நிறை வேற்றலாம். ஏனென்றால் எக்காரணத்தைக் கொண்டும் தொழுகையை விடுவதற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை.

Q16) தயம்மும் எவ்வாறு செய்ய வேண்டும்?

A) தூய்மையான மண்ணில் இரண்டு உள்ளங்கைகளையும் ஒரு முறை அடித்து அதனை முகத்தில் தடவிவிட்டு பிறகு அதனைக் கொண்டு இரண்டு முன்னங்கையில் தடவவேண்டும். இதுவே தயம்மும் செய்யும் முறையாகும்.

Q17) பாங்கு சொல்லி முடித்ததும் ஓத வேண்டிய துஆ எது?

A) ‘அல்லாஹூம்ம ரப்பஹாதித் தஃவதித் தாம்மத்தி வஸ்ஸலாதில் காயிமத்தி ஆத்தி முஹம்மதினில் வஸீலத்த வல்ஃபளிலத்த வப்அஃத்ஹூ மகாமன் மஹ்மூதினில்லதி வத்ததஹ்’

பொருள்: பரிபூரணமான இப்பிரார்த்தனைக்கும், நிரந்தரமான தொழுகைக்கும் உரிய இரட்சகனே! முஹம்மது (ஸல்) அவர்களுக்கு சுவர்க்கத்தில் உள்ள வஸீலா எனும் உயர்வான அந்தஸ்த்தையும் சிறப்பையும் வழங்குவாயாக!

Q18) பாங்கு துஆவை ஓதுவதால் கிடைக்கும் நன்மை என்ன?

A) பாங்கு துஆவை ஓதுவதால் அவருக்கு மறுமையில் நபி (ஸல்) அவர்களின் பரிந்துரை கிடைக்கும். ஆதாரம் : புகாரி.

Q19) fபர்லான தொழுகைகள் எத்தனை ரக்அத்துகள்?

A) பஜ்ர்-2, லுஹர்-4, அஸர்-4, மஃரிப்-3, இஷா-4

Q20) சுன்னத்தான தொழுகைகள் எத்தனை ரக்அத்துகள்?

A) fபஜ்ர் முன் சுன்னத்து-2, லுஹர் முன் சுன்னத்து-4 (2+2), பின் சுன்னத்து-2, மஃரிப் பின் சுன்னத்து-2, இஷா பின் சுன்னத்து-2.

குறிப்பு: லுஹருடைய முன் சுன்னத்து நான்கு ரக்அத்துகளை இரண்டிரண்டு ரக்அத்துகளாக தொழ வேண்டும்.

Q21) சுன்னத்தான தொழுகைகளை நிறைவேற்றுவதால் என்ன நன்மை கிடைக்கும்?

A) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு நாளைக்கு 12 ரக்அத்துகள் நஃபிலாக (உபரியாக) யார் தொழுது வருகிறாரோ அவருக்கு சுவனத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படும்”.

Q22) நபி (ஸல்) அவர்களால் வலியுறுத்தப்பட்ட சுன்னத் தொழுகைகள் யாவை?

A) நபி (ஸல்) அவர்கள் ஊரில் இருந்தாலும் சரி அல்லது பிரயாணத்தில் இருந்தாலும் சரி, வித்ருடைய தொழுகையை, பஜ்ருடைய தொழுகை – இவ்விரண்டையும் விடாமல் தொழுது வந்திருக்கிறார்கள்.

Q23) காணிக்கை தொழுகை என்றால் என்ன?

A) முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களை, எந்தப் பள்ளிவாசலுக்குள் நுழைந்தவுடன் பள்ளி காணிக்கை தொழுகையாக இரண்டு ரக்அத் தொழச் சொல்லி ஏவியுள்ளார்கள். இமாம் அவர்கள் பிரசங்கத்தை ஆரம்பித்து விட்டாலும் அல்லது ஆரம்பிக்காவிட்டாலும் இது பொருந்தும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நீங்கள் பள்ளிவாசலில் நுழையும் போதெல்லாம் இரண்டு ரக்அத் தொழுவதற்கு முன் உட்காராதீர்கள்” ஆதாரம் : முஅத்தா.

Q24) தொழுகை போன்ற வணக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான நிபந்தனைகள் யாவை?

A) நாம் எந்த ஒரு அமலைச் செய்வதாக இருந்தாலும் இரண்டு நிபந்தனைகளைக் கடைப்பிடிக்க வேண்டியது மிக மிக அவசியம்! அவைகளாவன: –

  1. எந்த ஒரு அமலை செய்வதாக இருந்தாலும் நன்மையை எதிர்பார்த்து இஹ்லாஸோடு செய்ய வேண்டும்
  2. எந்தவொரு வணக்கமாக இருந்தாலும் நபி صلى الله عليه وسلم அவர்கள் காட்டித் தந்த வழி முறையில் அவைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

எனவே இந்த இரண்டு நிபந்தனைகளில் எதில் ஒன்றில் குறைவு ஏற்பட்டாலும் அது பரிபூரணமான அமலாக ஆகமாட்டாது என்பதை நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும்

Q25) தொழுகையை எப்படி தொழ வேண்டும் என நபி (ஸல்) கட்டளையிட்டுள்ளார்கள்?

A) நபி صلى الله عليه وسلم அவர்கள் முஸ்லிம்களுக்கு ‘என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள்’ என்று கட்டளையிட்டுள்ளார்கள். எனவே நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு தொழுதார்கள் என்பதைக் கண்டறிந்து அதன்படி தொழவேண்டும். (தொழுகை பற்றிய இந்த கேள்வி பதில்கள் நபி வழியின் அடிப்படையில் அமைந்ததே)

Q25) தொழுகையின் போது எதை முன்னோக்கித் தொழ வேண்டும்?

A) கஃபாவை முன்னோக்கித் தொழ வேண்டும்.

Q26) தொழுகைக்கான நிய்யத் எப்படி செய்ய வேண்டும்?

A) தொழப்போகும் நேரத்தொழுகையை மனதில் எண்ணி (வாயால் மொழிவது அல்ல) நிய்யத் செய்து கொள்ள வேண்டும்

Q27) தொழுகையைத் துவங்குவதற்கான தக்பீர் கூறும் போது எதுவரை கையை உயர்த்த வேண்டும்?

A) இருகைகளையும் இரு புஜங்களுக்கு அல்லது இரு காதுகளுக்கு நேராக உயர்த்தி (காது சோனையை தொட வேண்டியதில்லை) “அல்லாஹு அக்பர்” என்று தக்பீர் கூற வேண்டும்.

Q28) தக்பீர் கூறியவுடன் கையை எங்கே வைக்க வேண்டும்?

A) கையை உயர்த்தி தக்பீர் கூறியவுடன் வலது கை மணிக்கட்டை இடது கை மணிக்கட்டின் மீது வைத்து நெஞ்சின் மீது கட்டிக்கொள்ள வேண்டும்.

Q29) தொழுகையில் ஆரம்ப தக்பீர் கட்டியவுடன் என்ன ஓதவேண்டும்?

A) முதலில் ஆரம்ப துஆ ஓதி, பிறகு ‘அவூது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர்ரஜீம்’, ‘பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்’ என்று கூற வேண்டும். பிறகு சூரத்துல் பாத்திஹா ஓத வேண்டும். அதன் பிறகு குர்ஆனில் இருந்து தெரிந்த சூராவையோ அல்லது சில வசனங்களையோ ஓத வேண்டும்.

Q30) தொழுகைக்கான ஆரம்ப துஆவைக் கூறுக!

A) ‘அல்லாஹூம்ம பாஇத் பைனீ வ பைன க(த்)தாயாய கமாபாஅத்த பைனல் மஷ்ரிகி வல் மஃரிபி அல்லாஹூம்ம நக்கினீ மின் க(த்)தாயாய கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யளூ மினித் தனஸி அல்லாஹூம் மஃக் ஸில்னீ மின்கதாயாய பில் மாயி வஸ் ஸல்ஜி வல் பரத்’

இதன் பொருள்: இறைவனே! எனக்கும் என்னுடைய தவறுகளுக்கும் மத்தியில் இடைவெளி ஏற்படுத்துவாயாக! கிழக்கிற்கும் மேற்கிற்கும் மத்தியில் நீ இடைவெளி ஏற்படுத்தியது போன்று! இறைவனே! என் தவறுகளை விட்டும் என்னை தூய்மைப் படுத்துவாயாக! வெள்ளை ஆடையை அழுக்கில் இருந்து தூய்மைப்படுத்துவது போன்று! இறைவனே! தண்ணீர், பனி மற்றும் பனிக்கட்டி கொண்டு என்னைக் கழுவி என் குற்றங்களை போக்குவாயாக!

விரும்பினால் மேற்கூறிய துஆவிற்கு பதிலாக பின்வரும் துஆவை ஓதலாம்: “ஸுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக்க வதபாரக்ஸ்முக வதஆலா ஜத்துக்க வலா இலாஹ கைருக்க”.

இதன் பொருள்: ‘இறைவனே! உன்னைப் புகழ்வதுடன் துதிக்கிறேன். உனது திருப்பெயர் அருட்பேறுடையது. உனது ஆற்றல் மிகவும் உயர்ந்தது. உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை’

Q31) தொழுகையில் சூரத்துல் ஃபாத்திஹா அவசியம் ஓத வேண்டுமா?

A) ஆம். நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: ‘திருக்குர்ஆனின் தோற்றுவாயை (அல்ஹம்து சூராவை) ஓதாதவருக்குத் தொழுகை கூடாது.’ (ஆதாரம் : புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா, மற்றும் அஹ்மத்)

Q32) சூரத்துல் fபாத்திஹாவைக் கூறுக!

A) பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம். அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன். அர்ரஹ்மானி ர்ரஹீம். மாலிகி யவ்மித்தீன். இய்யாக்கநஃபுது வஇய்யாக்க நஸ்தயீன். இஹ்திநஸ்ஸிராத்தல் முஸ்தஃகீம். ஸிராத்தல்லதீன அன்அம்த அலைஹிம். கைரில் மஃக்ழுபி அலைஹிம் வலழ்ழாலீன்.

Q33) சூரத்துல் fபாத்திஹாவின் பொருள் என்ன?

A) 1:1 அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும். 1:2 (அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன். 1:3 (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்). 1:4 (இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். 1:5 நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக! 1:6 (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. 1:7 (அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல.

Q34) இமாமுடன் ஜமாஅத்தாக தொழுபவர்கள் சூரத்துல் பாத்திஹாவை எப்படி ஓத வேண்டும்?

A) குர்ஆன் வசனம் மற்றும் நபிமொழிகளின் அடிப்படையில் பெரும்பாலான அறிஞர்களின் கருத்துப்படி, இமாம் உரத்தக் குரலில் ஓதும் தொழுகைகளான fபஜ்ர், மஃரிப் மற்றும் இஷா தொழுகையின் முதல் இரண்டு ரக்அத் போன்றவற்றில் இமாமுக்கு பின்னால் நின்று தொழுபவர்கள், இமாம் ஓதுவதை கவனமாக கேட்க வேண்டும்.

இமாம் மெதுவாக ஓதும் தொழுகைகளான லுஹர், அஸர், மஃரிபுடைய மூன்றாவது ரக்அத் மற்றும் இஷாவுடைய கடைசி இரண்டு ரக்அத்கள் ஆகிய தொழுகைகளில் இமாமுக்குப் பின்னால் நின்று தொழுபவர்களும் சூரத்துல் ஃபாத்திஹா அவசியம் ஓதவேண்டும் என்பதாகும். அல்லாஹவே முற்றிலும் அறிந்தவன்.

Q35) ருகூவு செய்வது எப்படி?

A) குர்ஆனின் வசனங்களை ஓதி முடித்தவுடன் அல்லாஹு அக்பர் என்று கூறி ருகூவு செய்யவேண்டும். குனிந்து இரண்டு கைகளைக் கொண்டு -விரல்களை விரித்தவாறு- முட்டுக்கால்களைப் பிடிக்கவேண்டும். முதுகை வில் போன்று வளைக்காமல் தலையை முதுகின் மட்டத்திற்கு சமமாக வைக்கவேண்டும். இதுவே ருகூவுச் செய்யும் முறையாகும்.

Q36) ருகூவில் என்ன ஓத வேண்டும்?

A) ‘ஸூப்ஹான ரப்பியல் அழீம்’ (இதை மூன்று முறை அல்லது அதற்கு அதிகமாக ஓதுவது சிறந்தது).

இதன் பொருள்:  ‘மகத்தான இன் இறைவன் பரிசுத்தமானவன்’

Q37) ருகூவில் இருந்து எழும் போது என்ன கூற வேண்டும்?

A) ‘ஸமிஅல்லாஹூ லிமன் ஹமிதா(ஹ்). இதன் பொருள் : ‘தன்னைப் புகழ்வதை அல்லாஹ் கேட்டுக் கொண்டான்’

Q38) இமாமைப் பின்பற்றித் தொழுபவர் எந்த துஆவை ஓத வேண்டும்?

A) இமாமைப் பின்பற்றித் தொழுபவர் ‘ஸமி அல்லாஹூ லிமன் ஹமிதா’ என்பதற்குப் பதிலாக ‘ரப்பனா வல(க்)கல் ஹம்து’என்று கூற வேண்டும்.

இதன் பொருள்:  ‘எங்கள் இறைவனே! உனக்கே எல்லாப் புகழும்!’

Q39) ருகூவில் இருந்து எழுந்து நேராக நின்றதும் எந்த துஆவை ஓத வேண்டும்?

A) ‘அல்லாஹும்ம ரப்பனா லகல் ஹம்து மில்அஸ் ஸமாவாத்தி வமில்அல் அர்ழி வமில்அ மா ஷிஃத மின் ஷைஇன் பஃது’

இதன் பொருள்:  “இறைவா! புகழ் அனைத்தும் உனக்கே! வானங்கள் நிறைய, பூமி நிறைய, இவையன்றி நீ எதையெல்லாம் நாடுகிறாயோ அவை நிறைய உனக்கே புகழ் அனைத்தும்’

ஜமாஅத் தொழுகையில் இமாமைப் பினபற்றித் தொழுபவர் இந்த துஆவை ஓதுவதற்கு இயலவில்லையெனில் ‘ரப்பனா வலகல் ஹம்து’ என்று கூறினால் போதுமானது.

Q40) ஸூஜூது செய்வது எப்படி?

A) ருகூவில் இருந்து எழுந்து நின்ற பிறகு ஓத வேண்டிய துஆக்களை ஓதிய பிறகு, “அல்லாஹு அக்பர்” என்று கூறி ஸுஜுது செய்ய வேண்டும். முகம் (மூக்கு,நெற்றி) இரண்டு உள்ளங்கைகள், இரண்டு முட்டுக்கால்கள், இரண்டு கால் விரல்களின் உட்பகுதி ஆகிய ஏழு உறுப்புக்களும் பூமியில் படும் வகையில் ஸுஜுது அமைந்திட வேண்டும். மேலும் இரு கால்களின் பாதங்களும் நட்டியவாறு இருக்கவேண்டும். உடலோடு ஓட்டவோ அல்லது முழங்கைகளை தரையில் படுமாறும் வகைக்கக் கூடாது.

Q41) ஸூஜூது செய்யும் போது எந்த துஆவை ஓத வேண்டும்?

A) ஸூப்ஹான ரப்பியல் அஃலா (இதை மூன்று முறை அல்லது அதற்கு அதிகமாக ஓதுவது சிறந்தது).

இதன் பொருள்: உயர்வான என் இறைவன் தூயவன்’

அத்துடன் பின்வரும் துஆவையும் ஓதுவது விரும்பத்தக்கது:- ஸூப்ஹான கல்லாஹூம்ம ரப்பனா வபிஹம்திக்க அல்லாஹூம்மஃபிர்லீ

இதன் பொருள்: ‘யா அல்லாஹ்! என் அதிபதியே! உன்னைப் புகழ்வதுடன் உன்னைத் தூயவன் என்று துதிக்கிறேன். யா அல்லாஹ் என்னை மன்னிப்பாயாக!’

Q42) ஸூஜூதிலிருந்து எழுந்ததும் எப்படி உட்கார வேண்டும்?

A) அல்லாஹு அக்பர் என்று கூறியவாறு ஸுஜுதிலிருந்து தலையை உயர்த்த வேண்டும். ஸஜ்தாவிலிருந்து எழுந்து இடது கால்களின் மீது உட்கார்ந்து, வலது காலை நட்டு வைத்திருக்க வேண்டும். வலது தொடையின் மீது வலது கையையும் இடது தொடையின் மீது இடது கையையும் முட்டுக்கருகில் கைவிரல்களை விரிக்காமல் இணைத்தவாறு வைக்கவேண்டும்.

Q43) இரண்டு சஜ்தாக்களுக்கும் இடையிலான அமர்வில் எந்த துஆவை ஓத வேண்டும்?

A) ‘ரப்பிஃக்பிர்லீ வர்ஹம்னீ வஹ்தினீ வர்ஸூக்னீ வஜ்புர்னீ வஆஃபினீ’.

இதன் பொருள்: ‘என் இரட்சகனே! என்னை மன்னித்தருள்வாயாக! எனக்கு அருள் புரிவாயாக! எனக்கு நேர் வழிகாட்டுவாயாக! எனக்கு ரிஸ்க் வழங்குவாயாக! எனக்கு ஆறுதல் அளிப்பாயாக! எனக்கு நிவாரணம் அளிப்பாயாக!’

Q44) அமர்வில் ஓத வேண்டிய அத்தஹிய்யாத்து துஆவைக் கூறுக!

A) ‘அத்தஹிய்யாத்து லில்லாஹி வஸ்ஸலவாத்து வத்தய்யிபாத்து அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன் நபிய்யு வரஹ்மதுல்லாஹி வபகரகாதுஹூ அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன் அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹூ வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வரஸூலுஹூ’

இதன் பொருள்: காணிக்கைகள் வணக்கங்கள் மற்றும் நற்பணிகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியனவாகும். நபியே! அமைதியும் அல்லாஹ்வின் கருணையும் அருட்பேருகளும் உங்கள் மீது உண்டாகட்டும். எங்கள் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் மீதும் அமைதி உண்டாகட்டும். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும் முஹம்மது நபி (ஸல்) அல்லாஹ்வின் அடியாரும் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் சாட்சியம் கூறுகிறேன்’

Q45) அத்தஹிய்யாத்துக்குப் பிறகு ஓத வேண்டிய ஸலவாத்து கூறுக!

A) ‘அல்லாஹூம்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத். அல்லாஹூம்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத்’

இதன் பொருள்: ‘யாஅல்லாஹ்! முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் வழிவந்தவர்கள் மீதும் கருணை பொழிவாயாக! இப்ராஹீம் (அலை) மீதும் அவர்களின் வழிவந்தவர்கள் மீதும் நீ கருணை பொழிந்தது போன்று. நிச்சயமாக நீ புகழுக்கும் மகத்துவத்திற்கும் உரியவன். அதுபோல முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் வழிவந்தவர்கள் மீதும் அருட்பேருகள் பொழிவாயாக! இப்ராஹீம் (அலை) மீதும் அவர்களின் வழிவந்தவர்கள் மீதும் நீ அருட்பேருகள் பொழிந்தது போன்று. நிச்சயமாக நீ புகழுக்கும் மகத்துவத்திற்கும் உரியவன்’

Q46) ஸலவாத்திற்குப் பிறகு ஓதவேண்டிய துஆவைக் கூறுக!

A) ‘அல்லாஹூம்ம இன்னீ அஊதுபிக மின் அதாபி ஜஹன்னம வமின் அதாபில் கப்ரி வமின் fபித்னத்தில் மஹ்யா வல்மமாத்தி வமின் fபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜால்’

இதன் பொருள்: ‘யா அல்லாஹ் நரகத்தின் வேதனையில் இருந்தும் மண்ணறையின் வேதனையிலிருந்தும் வாழ்க்கை மற்றும் மரணத்தின் குழப்பத்தில் இருந்தும் தஜ்ஜாலின் குழப்பத்தில் இருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்’

Q47) தொழுது முடித்ததும் ஓத வேண்டிய திக்ருகளில் சிலவற்றைக் கூறுக!

A) தொழுது முடித்ததும் ஓத வேண்டிய திக்ருகள் பல உள்ளன. அவற்றில் சில பின்வருமாறு.

‘அஸ்தஃக்பிருல்லாஹ், அஸ்தஃக்பிருல்லாஹ், அஸ்தஃக்பிருல்லாஹ். அல்லாஹும்ம அன்தஸ்ஸலாம் வமின்கஸ் ஸலாம் தபாரக்த யாதல் ஜலாலி வல் இக்ராம்”

பொருள்: அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுகிறேன். இறைவா நீ எல்லாக் குறைகளை விட்டும் பாதுகாப்பு பெற்றவன். உன்னிடமிருந்தே பாதுகாப்பு ஏற்படுகின்றது. மதிப்பும் மகத்துவமும் மிக்கவனே! நீ உயர்ந்து விட்டாய்!

“லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹு லஹுல்முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலாகுல்லி ஷையின் கதீர். அல்லாஹும்ம லாமானிஅ லிமா அஃதைத்த வலா முஃதிய லிமா மனஃத வலா யன்ஃபஉ தல்ஜத்தி மின் கல் ஜத்”

பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை. ஆட்சியும் அவனுக்கே! புகழும் அவனுக்கே! அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். இறைவா நீ கொடுப்பதைத் தடுப்பவர் எவருமில்லை. நீ தடுப்தைக் கொடுப்பவர் எவருமில்லை. மதிப்புடைய எவரும் எந்தப் பயனும் அளிக்கமாட்டார். மதிப்பு உன்னிடமே உள்ளது

“லாஹவ்ல லாகுவ்வத்த இல்லா பில்லாஹ். லாயிலாஹ இல்லல்லாஹு வலா நஃபுது இல்லா இய்யாஹு லஹுன் நிஃமது வலஹுல் ஃபழ்லு வலஹுல் ஸனாவுல் ஹஸனு லாயிலாஹ இல்லல்லாஹு முக்லிஸீன லஹுத்தீன வலவ்கரீஹல் காஃபிரூன்”

பொருள்: அல்லாஹ்வின் துணையின்றி நல்லவற்றைச் செய்யவோ தீயவற்றிலிருந்து விலகவோ இயலாது. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவனைத் தவிர வேறு எவரையும் நாங்கள் வணங்க மாட்டோம். அருட்கொடை அவனுக்குரியது. பேருபகாரமும் அவனுக்குரியது. அழகிய புகழும் அவனுக்குரியது. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை. நிராகரிப்போர் விரும்பாவிட்டாலும் வணக்கங்களை அவனுக்கு மட்டுமே கலப்பற்ற முறையில் செய்வோம்

“லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்கலஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து யுஹ்யீ வயுமீது வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்”

பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு யாதொரு இணையுமில்லை. ஆட்சி அதிகாரம் அவனுக்குரியதே! அவனுக்கே எல்லாப் புகழும். அவனே வாழ்வும் மரணமும் அளிக்கின்றான். அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்

“சுப்ஹானல்லாஹ்” – 33 தடவைகள், “அல்ஹம்துலில்லாஹ்” – 33 தடவைகள், “அல்லாஹு அக்பர்” – 33 தடவைகள், பிறகு, “லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்கலஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்” – ஒரு தடவை ஓத வேண்டும்.

ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் ஆயத்துல் குர்ஸி, குல் ஹுவல்லாஹு அஹத், குல் அவூது பிரப்பில் ஃபலக், குல் அவூது பிரப்பின்னாஸ் ஓத வேண்டும். இந்த மூன்று சூராக்களையும் மஃரிபுக்குப் பிறகும், பஜ்ருக்குப் பிறகும் மூன்று தடவை ஓதுவது விரும்பத்தக்கதாகும்.

Q48) தொழுகையை முறிக்கும் செயல்களில் சிலவற்றைக் கூறுக!

A) தொழுகையை முறிக்கும் செயல்களின் எண்ணிக்கையில் அறிஞர்களுக்கிடையில் வேறுபாடுபாடுகள் காணப்படுகின்றன. இருப்பினும் பின்வரும் செயல்கள் தொழுகையை முறிக்கும் என்பது அறிஞர்கள் பலரின் கருத்தாகும்.

1) உளுவை முறிக்கும் அனைத்துச் செயல்களும் தொழுகையையும் முறிக்கும். (உதாரணங்கள் : காற்றுப் பிரிதல்,ஒட்டக இறைச்சி உண்ணுதல், மல ஜலம் வெளியாகுதல் etc.), 2) மர்மஸ் தானங்களை வேண்டுமென்றே திறந்து வைத்தல். 3) கிப்லாவின் திசையல்லாமல் வேறு திசையை நோக்கியிருத்தல், 4) உடலிலோ, ஆடையிலோ அல்லது தொழுமிடத்திலோ அசுத்தம் இருத்தல், 5) தேவையில்லாத அதிகப்படியான உடலசைவுகள், 6) ருகூவு, சஜ்தா போன்ற தொழுகையின் முக்கிய கடமைகளை விட்டுவிடுதல், 7) வேண்டுமென்றே அதிகப்படியான தொழுகையின் கடமையான செயல்களைச் செய்தல், 8.) வேண்டுமென்றே தொழுகையின் கடமையான செயல்களை முன் பின் முரணாக மாற்றிச் செய்தல், 9) தொழுகையை நிறைவு செய்வதற்கு முன்னரே வேண்டுமென்றே சலாம் கொடுத்தல், 10) வேண்டுமென்றே குர்ஆனை தவறாக ஓதுதல், 11) வேண்டுமென்றே தஸஹ்ஹூத் போன்ற தொழுகையின் முக்கிய கடமையினை விட்டுவிடுதல். மறதியில் விட்டிருப்பின் சஜ்தா ஸஹவு செய்ய வேண்டும், 12) தொழுகையை விடுவதாக தீர்மானித்தல், 13) வேகமா சிரிப்பது (வெடிசிரிப்பு), 14) வேண்டுமென்றே பேசுவது, 15) சாப்பிடுவது மற்றும் குடிப்பது. அல்லாஹ்வே முற்றிலும் அறிந்தவன்.

Q49) தொழுகையின் போது தவிர்க்கப்பட வேண்டிய பொதுவான தவறுகள் சிலவற்றைக் கூறுக!

A) தொழுகைக்கு வருமுன் துர் வாசனையுடைய பூண்டு, வெங்காயம் மற்றும் புகை பிடித்து முடித்து விடுவது, தொழுகையை விட்டு விடுவோம் என்ற பயத்தில் தொழுகைக்காக விரைந்தோடுவது, ருகூவுக்கு செல்லும் போது தக்பீர் அல்-இஹ்ராம் (ஆரம்ப தக்பீர்) சொல்வது, தொழுகைக்கான நிய்யத்தை வாயால் சொல்வது, சுத்ரா (தடுப்பு) நோக்கி தொழுவதை தவிர்த்தல், ஜமாஅத் தொழுகையில் முதல் வரிசையில் நிற்பதை வெறுப்பது, தொழுகையில் மேல் நோக்கியோ, இமாமையோ, வலது, இடது புறமோ பார்ப்பது, கூட்டுத் தொழுகையில் வருசைகளில் இடைவெளி விடுவது, சூரதுல் பாதிஹாவை இடைவெளி விடாமல் தொடர்ந்து ஓதுவது, தொழுகையின் போது ஆடிக் கொண்டிருத்தல், கைக்கடிகாரம் பார்த்தல், விரல்களை முறித்தல், பாதத்தையோ மற்ற உறுப்புகளையோ தொடர்ந்து அசைத்துக் கொண்டிருத்தல், இமாமுக்கு பின்னால் நின்று குர்ஆனை பார்த்துக் கொண்டு இமாம் ஒதுவதை சரிபார்ப்பது, கூட்டுத் தொழுகையில் இமாமை முந்துவது அல்லது இமாமோடு செயல்படுவது, ருகூவின் போது தலையை அதிகமாக குணிதல் அல்லது தலையை மேலாக்குதல் அல்லது முதுகை வளைவாக வைத்துக் கொள்ளுதல், ருகூவு, ஸஜ்தாவின் போது கைகளை உடலோடு ஒட்டிவைத்தல் மற்றும் ஸஜ்தாவின் போது அடிவயிற்றை தொடையோடு ஒட்டிவைத்தல், இறுக்கமான அல்லது மெல்லிய ஆடை அணிந்து பின்புறம் வெளியே தெரியுமாறு தொழுவது, இமாம் சூரத்துல் ஃபாத்திஹாவை முடிக்கும் போது “ஆமீன்” வேகமாக சொல்வதை தவிர்ப்பது, ஸஜ்தாவின் போது மூக்கு தரையில் படாமல் நெற்றியை மட்டும் தரையில் வைப்பது, ருகூவு, ஸஜ்தாவை அமைதியாக நிறைவேற்றாமல் வேகமாக நிறைவேற்றுவது, ஸலாம் சொல்லி தொழுகையை முடிக்கும் போது இரண்டு உள்ளங்கையை அசைத்தல், இடது கையால் தஸ்பீஹ் எண்ணுவது, தொழுகை முடிந்தவுடன் மற்றவர்களுடன் ” தகப்பலல்லாஹ் “என்று சொல்லி கை குழுக்குவது, தொழுகை முடிந்த உடனே திக்ருகள் செய்யாமல் கையை உயர்த்தி துஆ கேட்பது, தொழுகை முடிந்தவுடன் திக்ரு செய்யாமல் எழுந்து செல்வது, தொழுது கொண்டிருப்பவரின் முன்னால் செல்வது, நோய் வாய்பட்டிருக்கும் போது தொழுகையை அலட்சியப்படுத்துவது, கப்ருகளில் தொழுவது, ஆண்கள் தொழுவதுபோல் அல்லாமல் பெண்கள் வேறு முறையில் தொழுவது மற்றும் கணுக்காலுக்கு கீழே ஆடை அனிந்து தொழுதல்.

Q50) தொழுகையில் ஓதக் கூடிய சிறிய அத்தியாயங்கள் சிலவற்றை (குறைந்தது 10) பொருளுடன் கூறுக!

A) குறிப்பு: தொழுகையில் ஓதுவதற்கு ஏதுவாக அரபி தெரியாதவர்களுக்காக குர்ஆனின் பத்து சிறிய அத்தியாயங்களை தமிழில் தந்திருக்கிறோம். தயவு செய்து சரியான அரபி உச்சரிப்பை அரபியில் ஓத தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்துக் கொள்ளவும்.

அத்தியாயம் – 103 ஸூரத்துல் அஸ்ரி (காலம்)

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம். வல்அஸ்ர். இன்னல் இன்ஸான லஃபீஹூஸ்ர். இல்லல்லதீன ஆமனு வஆமிலூஸ் ஸாலிஹாத்தி வதவாஸவ் பில்ஹக்கி வதவாஸவ் பிஸ்ஸப்ர்

இதன் பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கின்றேன். காலத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான். ஆயினும் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை)

அத்தியாயம் – 105 ஸூரத்துல் ஃபீல் (யானை)

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம். அலம்தர கைஃப ஃபஅல ரப்புக பிஅஸ்ஹாபில் ஃபீல். அலம் யஜ்அல் கய்தஹூம் பீ தஃழ்லீலின். வஅர்ஸல அலைஹிம் தைய்ரன் அபாபீல். தர்மீஹிம் பிஹிஜாரதிம் மின்ஸிஜ்ஜீல். fபஜஅலஹூம் கஅஸ்ஃபிம் மஃகூல்.

இதன் பொருள்: அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்) 105:1 (நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? 105:2 அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா? 105:3 மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான். 105:4 சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன. 105:5 அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான்.

அத்தியாயம் – 106 ஸூரத்து குறைஷின் (குறைஷிகள்)

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம். லிஈலாஃபி குரைஷின். ஈலாஃபிஹிம் ரிஹ்லதஷ்ஷிதாயி வஸ்ஸய்ஃப். fபல்யஃபுதூ ரப்பஹாதல் பைத். அல்லதீ அத்அமஹூம் மின்ஜூஇவ் வஆமனஹூம் மின்ஹவ்ஃப்

இதன் பொருள்: அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்) 106:1 குறைஷிகளுக்கு விருப்பம் உண்டாக்கி, 106:2 மாரி காலத்துடையவும் கோடைக்காலத்துடையவும் பிரயாணத்தில் அவர்களுக்கு மன விருப்பத்தை உண்டாக்கியமைக்காக- 106:3 இவ்வீட்டின் (கஃபாவின்) இறைவனை அவர்கள் வணங்குவார்களாக. 106:4 அவனே, அவர்களுக்கு பசிக்கு உணவளித்தான்; மேலும் அவர்களுக்கு அச்சத்திலிருந்தும் அபயமளித்தான்.

அத்தியாயம் – 108 ஸூரத்துல் கவ்ஸர் (மிகுந்த நன்மைகள்)

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம். இன்னா அஃதய்னா கல்கவ்தர். fபஸல்லி லிரப்பிக வன்கர். இன்னஷானிஅக ஹூவல் அப்தர்.

இதன் பொருள்: அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்) 108:1 (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு கவ்ஸர் (என்ற தடாகத்தை) கொடுத்திருக்கின்றோம். 108:2 எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக. 108:3 நிச்சயமாக உம்முடைய பகைவன் (எவனோ) அவன்தான் சந்ததியற்றவன்.

அத்தியாயம் – 109 ஸூரத்துல் காஃபிரூன் (காஃபிர்கள்)

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம். குல்யா அய்யுஹல் காஃபிருன. லா அஃபுது மா தஃபுதூன். வலா அன்தும் ஆபிதூன மாஅஃபுது. வலாஅனா ஆபிதும் மாஅபத்தும். வலா அன்தும் ஆபிதூன மாஅஃபுது. லகும் தீனுகும் வலியதீன்.

இதன் பொருள்: அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்) 109:1 (நபியே!) நீர் சொல்வீராக: காஃபிர்களே! 109:2 நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன். 109:3 இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர். 109:4 அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன். 109:5 மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர். 109:6 உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.’

அத்தியாயம் – 110 ஸூரத்துந் நஸ்ர் (உதவி)

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம். இதாஜாஅ நஸ்ருல்லாஹி வல்பத்ஹூ. வரஅய்தன்னாஸ யத்ஹூலூன fபீதினில்லாஹி அஃப்வாஜா. fபஸப்பிஹ் பிஹம்தி ரப்பிக வஸ்தஃபிர்ஹூ. இன்னஹூ கான தவ்வாபா

இதன் பொருள்: அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்) 110:1 அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும், 110:2 மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும், 110:3 உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக; மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக – நிச்சயமாக அவன் ‘தவ்பாவை’ (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான்.

அத்தியாயம் – 111 ஸூரத்துல் லஹப் (ஜுவாலை)

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம். தப்பத்யதா அபீலஹபின் வதப். மா அக்gனா அன்ஹூ மாலுஹூவமா கஸப். ஸயஸ்லா னாரன் தாதலகபின். வம்ரஅதுஹூ ஹம்மாலதல் ஹதப். fபீ ஜிதிஹா ஹப்லுன் மிம்மஸத்

இதன் பொருள்: அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்) 111:1 அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக; அவனும் நாசமாகட்டும். 111:2 அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை. 111:3 விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான். 111:4 விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ, 111:5 அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள்).

அத்தியாயம் – 112 ஸூரத்துல் இஃக்லாஸ் (ஏகத்துவம்)

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம். குல்ஹூவல்லாஹூ அஹத். அல்லாஹூஸ் ஸமத். லம்யலித் வலம் யூலத். வலம் யகுல்லஹூ குஃபுவன் அஹத்.

இதன் பொருள்: அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்) 112:1 (நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. 112:2 அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். 112:3 அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. 112:4 அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.

அத்தியாயம் – 113 ஸூரத்துல் fபலக் (அதிகாலை)

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம். குல்அவூது பிரப்பில் fபலக். மின் ஷர்ரிமா ஹலக். வமின் ஷர்ரி ஹாஸிகின் இதா வகப். வமின் ஷர்ரின்னஃப் fபாதாத்தி பில்உகத். வமின்ஷர்ரி ஹாஸிதின் இதா ஹஸத்.

இதன் பொருள்: அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்) 113:1 (நபியே!) நீர் சொல்வீராக: அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன். 113:2 அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்- 113:3 இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்- 113:4 இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும், 113:5 பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்).

அத்தியாயம் : 114 – ஸூரத்துந் நாஸ் (மனிதர்கள்)

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம். குல்அவூது பிரப்பின்னாஸ். மலிகின்னாஸ். இலாஹின்னாஸ். மின்ஷர்ரில் வஸ்வாஸில் ஹன்னாஸ். அல்லதீ யூவஸ்விஸூ fபீசுதூரின்னாஸ். மினல் ஜின்னதி வன்னாஸ்.

இதன் பொருள்: அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்) 114:1 (நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன். 114:2 (அவனே) மனிதர்களின் அரசன்; 114:3 (அவனே) மனிதர்களின் நாயன். 114:4 பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்). 114:5 அவன் மனிதர்களின்

இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான். 114:6 (இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர்.

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...
14 thoughts on “தொழுகை QA- For Children and Beginners”
  1. This is very basic information at the same time very usefule for many of our brothers / sisters who don’t know how to pray in Prophet’s Way!

    Jazakkallah Khairan

  2. http://suvanathendral.com/portal/?p=435

    கீழ்கண்ட கேள்வி பதிலில் 3 -நிபந்தனைகள் என்று வருகிறது ஆனால் 2-நிபந்தனைகளோடு முடிந்துவிட்டது. அதை கொஞ்சம் சரி பர்க்கவும், மற்றவை மிக -நன்றாக உள்ளது. இந்த பணி மேலும் வளற அல்லாஹ் கிருபை செய்வானாக!!!!

    Q24) தொழுகை போன்ற வணக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான நிபந்தனைகள் யாவை?

    A) நாம் எந்த ஒரு அமலைச் செய்வதாக இருந்தாலும் மூன்று நிபந்தனைகளைக் கடைப்பிடிக்க வேண்டியது மிக மிக அவசியம். அவைகளாவன: –

    1.எந்த ஒரு அமலை செய்வதாக இருந்தாலும் நன்மையை எதிர்பார்த்து இஹ்லாஸோடு செய்ய வேண்டும்

    2.எந்தவொரு வணக்கமாக இருந்தாலும் நபி صلى الله عليه وسلم அவர்கள் காட்டித் தந்த வழி முறையில் அவைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

    எனவே இந்த மூன்று நிபந்தனைகளில் எதில் ஒன்றில் குறைவு ஏற்பட்டாலும் அது பரிபூரணமான அமலாக ஆகமாட்டாது என்பதை நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும்

  3. தவறை சுட்டிக்காட்டிய சகோதரருக்கு அல்லாஹ் அருள்புரிவானாகவும்.

    தவறு சரிசெய்யப்பட்டுள்ளது. இரண்டு நிபந்தனைகள் தான்; மூன்று அல்ல!

    1. السلام عليكم ورحمة الله وبركاته
      هناك ثلاثة شروط فى قول العلماء لقبولية العبادة
      الاول :الاسلام
      الثانى:الاخلاص
      الثالث:اتباع السنة
      وجزاكم الله خيرا

  4. பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம். குல்ஹூவல்லாஹூ அஹத். அல்லாஹூஸ் ஸமத். லம்யலித் வலம் யூலத். வலம் யகுல்லஹூ குஃபுவன் அஹத்.

  5. enaku ayathul kurshi patri koorungal tamil arthathodu, tamilil vaendum. enathu mailuku anupungal please.

  6. வித்ர் தொழுகையில் மூன்றாம் ரக்கஅத்தில் குல் சுறாக்கள் மூன்றும் ஓதப்படுவது நபி வழியா?அல்லது வித்ர் தொழுகையில் இதைதான் ஓத வேண்டும் என்று நபி கற்று தந்தார்களா? மூன்று ரக்கஅத்திலும் நபி இவை தவிர வேறு சுறாக்களும் ஓதியுள்ளார்களா?

  7. I am working in a cargo clearance company, they are clearing Alcohol also, I am making only documents, Is it allowed to do ? is it Haram or Halal? Is it part or sin ?

  8. கிப்லா திசையை சரியான முறையில் அறிவது எப்படி

  9. பெரியவர்கள் ஜமாஅத் தொழுகையில் ஈடுபட்டு இருக்கும் போது எந்த வயது வரை உள்ள சிறுவர்கள் வரிசையில் நின்று தொழுகையில் ஈடுபட வேண்டும் ?

  10. ஜும்மா தொழுகைக்கும் பெருநாள் தொழுகைக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமை என்ன?

  11. ஒரு ஆண் இரண்டு முறை திருமணம் செய்து இரு மனைவியையும் தலாக் கொடுத்து விட்டார் சுமார் பதினைந்து வருடத்திற்கு பின் மீண்டும் அந்த ஆணுக்கு திருமணம் செய்து வைக்கலாமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed